லா.ச.ரா. (1916 – 2007)
ஆ. மாதவனுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்திருக்கிறது. பழுப்பு நிறப் பக்கங்களில் ஆ. மாதவன் பற்றி எழுதியிருந்த கட்டுரையை மீள் வாசிப்பு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
ஆ. மாதவனுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்திருக்கிறது. பழுப்பு நிறப் பக்கங்களில் ஆ. மாதவன் பற்றி எழுதியிருந்த கட்டுரையை மீள் வாசிப்பு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். விளிம்பு நிலை மக்களைப் பற்றி எழுதியதில் ஜி. நாகராஜன், ஜெயகாந்தன் இருவரை விடவும் மிக உயர்ந்த தளத்தில் இலக்கியரீதியாக வெற்றி அடைந்தவர் ஆ. மாதவன். ஆனால் இவ்வளவு காலம் கடந்து கொடுத்திருக்கக்கூடாது. 15 ஆண்டுகளுக்கு முன்பே கொடுத்திருந்தால் அது அவருக்கு இன்னும் பெரிய அங்கீகாரமாக இருந்திருக்கும். ஞானபீடப் பரிசுக்கு யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று அந்த அமைப்பு ஒவ்வொரு மொழி சார்ந்த படைப்பாளிகளிடமும் இலக்கிய ஆர்வலர்களிடமும் கேட்பது வழக்கம். பத்தாண்டுகளுக்கு முன்பு என்று நினைக்கிறேன். என்னிடம் அப்படி ஒரு கேள்வி ஞானபீடத்திடமிருந்து வந்தது. உடனே ஆகாயத்தில் பறந்தபடி அசோகமித்திரனுக்கு போன் செய்தேன். ஒரே வார்த்தையில் உங்களுக்குப் பிடித்த எழுத்தாளரின் பெயரை எழுதி விட முடியாது. பத்துப் பதினைந்து பக்கங்களுக்கு அந்த எழுத்தாளரின் ‘ஜாதகத்தை’ எழுதி அனுப்ப வேண்டும். அசோகமித்திரனின் ஷட்டகர் பெயர் என்ன என்றுதான் கேட்கவில்லை. மற்றபடி அது போல் ஏகப்பட்ட கேள்விகள் இருந்தன. அசோகமித்திரன் அவருக்கே உரிய கிண்டலுடன், ‘அந்தப் பரிசெல்லாம் நம்முடைய பெயரே நமக்கு மறந்து போகும் அளவுக்கு முதுமை வந்த பிறகல்லவா கொடுப்பார்கள்… இப்போது நான் நன்றாகத்தானே இருக்கிறேன்?’ என்று சொன்னார். அவர் அப்படிச் சொன்னபோது நகுலன் அந்த ஸ்திதியில்தான் இருந்தார். நகுலனோடு நீங்கள் ஐந்து நிமிடம் பேசினால் ஐம்பது முறை உங்கள் பெயரைக் கேட்டு விடுவார்.
ஒரு படைப்பாளி தீவிரமாக இயங்கும் காலகட்டத்திலேயே பரிசுகள் வழங்கப்பட்டு விட வேண்டும். மேலும், ஒரு லட்சம் என்பதெல்லாம் இப்போது ஐந்தாயிரம் ரூபாய்க்குச் சமமாகி விட்டது. ஒரு லட்சத்தை வைத்துக் கொண்டு ஒரு எழுத்தாளர் என்ன செய்ய முடியும்? அறுவை சிகிச்சை என்று மருத்துவமனைக்குப் போனாலே ஐந்து லட்சம் ஆகி விடுகிறது. எனவே, சாகித்ய அகாதமி பரிசுத் தொகை குறைந்த பட்சம் பத்து லட்சமாகவாவது உயர்த்தப்பட வேண்டும்.
***
Advertisement
பொதுவாக எழுத்தாளர்களின் வாழ்க்கை போராட்டங்கள் மிகுந்ததாகவும், பரிதாபத்துக்குரியதாகவும் இருப்பதே வழக்கம். அந்த வழக்கத்துக்கு மாறாக மிக அற்புதமான வாழ்க்கையை வரமாகப் பெற்று வாழ்ந்தவர் லா.ச.ரா. என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட லால்குடி சப்தரிஷி ராமாமிருதம். அன்பான மனைவி, அன்பான குழந்தைகள், நல்ல வேலை, 91 வயது வரை வாழ்ந்த நிறைவான ஆரோக்கியமான வாழ்க்கை. மட்டுமல்லாமல் அவருடைய எழுத்துக்கு எல்லோருமே வசமாகியிருந்தார்கள். எல்லா தரப்பினராலும் வாசிக்கப்பட்டவராகவும் எல்லோராலும் விரும்பப்பட்டவராகவும் இருந்தார் லா.ச.ரா. இவ்வளவுக்கும் அவருடைய எழுத்துக்கள் யாவும் இலக்கியச் சிறுபத்திரிகைகளில் வெளிவந்தவை அல்ல; ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் வந்தவை.
சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்கள் எழுத்தாளர்கள் என்பதால் பொதுவாக எழுத்தாளர்களுக்கு அவர்களின் குடும்பத்தில் அங்கீகாரம் கிடைக்காது. ஆனால் லா.ச.ரா.வின் எழுத்தை அவரது குடும்பமும் கொண்டாடியது. என்னுடைய முதல் வாசகன் என் புதல்வன் சப்தரிஷிதான் என்று சொல்லியிருக்கிறார் லா.ச.ரா. முதுமையில் அவருக்குக் கண்ணில் பிரச்னை ஏற்பட்டு சில காலம் எழுத முடியாமல் போனபோது அவர் புதல்வர் சப்தரிஷிதான் லா.ச.ரா. சொல்வதை எழுதியிருக்கிறார். சமயங்களில் நள்ளிரவில் கூட விழித்து சப்தரிஷி என்று அழைப்பாராம் லா.ச.ரா. உடனே சப்தரிஷி காகிதத்தையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு போய் தந்தை சொல்வதை எழுதியிருக்கிறார். இந்த பாக்கியம் வேறு யாருக்கும் கிடைப்பது அரிது. அதேபோல் 91 வயது வரையிலும் எழுதிக் கொண்டிருந்தார் லா.ச.ரா. உடலுக்கு முதுமை வந்திருந்தாலும் அவருடைய எழுத்து எப்போதும் போலவே இருந்தது.
என்னுடைய பள்ளிக்கூட நாட்களிலேயே நான் லா.ச.ரா.வின் எழுத்துக்கு அடிமையாகிக் கிடந்தேன். அறுபதுகளின் இறுதியிலிருந்து இன்றுவரை அதேதான் நிலை. நான் அப்போது பதின்பருவத்தில் இருந்தேன். லா.ச.ரா.வின் கதைகளைப் படித்து நானும் என்னையொத்த இளைஞர்களும் பித்துப் பிடித்தவர்களாக இருந்தோம். யாருக்குப் பெண் குழந்தை பிறந்தாலும் ஜனனி என்றே பெயர் வைப்போம். என் தம்பி ஜனனி என்றே புனைப்பெயர் வைத்துக் கொண்டான்.
தி.ஜா.வுக்கும் லா.ச.ரா.வுக்கும் என்ன பொருத்தம் என்றால், பாரதிக்குப் பிறகான தமிழை இவர்கள் இருவரையும் போல் அழகு படுத்தியவர்கள் வேறு யாரும் இலர். பிரெஞ்சு மொழியை ஜான் ஜெனே எவ்வாறு செழுமைப்படுத்தினாரோ அப்படிச் செய்தார்கள் தி.ஜா.வும் லா.ச.ரா.வும். ஜாக் தெரிதா (Jacques Derrida) 1974-ல் Glas என்ற ஒரு சிறிய புத்தகத்தை எழுதினார். அதில் அவர் ஹெகலின் தத்துவத்தையும் ஜெனேயின் எழுத்தையும் ஒப்பிட்டார். வடிவத்திலும் மிக வித்தியாசமான நூல் அது. ஒரே பக்கம் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். இடது பக்கம் ஹெகல்; வலது பக்கம் ஜெனே. (படம் கீழே) இதேபோல் லா.ச.ரா.வையும் வேதங்களையும் – குறிப்பாக அதர்வ வேதம் - ஒப்பிட்டு ஒரு நூல் எழுத வேண்டும் என்பது என் நீண்ட நாளைய ஆசை. அதை ஒப்பீடு என்று கூட சொல்லக்கூடாது. வரலாற்றின் இரண்டு வெவ்வேறு கால கட்டங்களில் எழுதப்பட்ட இரண்டு வித பிரதிகளுக்குள் செல்லும் பயணம்.
என்னுடைய அறிதல் முறையை (perception) நான் அசோகமித்திரனிடமிருந்தும் மொழியை தி.ஜா., லா.ச.ரா. இருவரிடமிருந்தும் எடுத்துக் கொண்டேன் என்று சொல்ல முடிகிறது. மொழி எவ்வளவு முக்கியம் என்று இன்றைய எழுத்தாளர்களின் பலகீனமான பிரதிகளைப் பார்த்தால் தெரிகிறது. அவர்கள் அனைவரும் தங்கள் மொழியை வளப்படுத்திக் கொள்ள வேண்டுமெனில் அவர்கள் கற்க வேண்டியது தி.ஜா., லா.ச.ரா.
லா.ச.ரா.வின் மொழி எப்படிப்பட்டது? ஒரே வார்த்தையில் சொன்னால் மந்திரம். ஜனனியிலிருந்து ஒரு பகுதி:
‘ஆ! இப்பொழுது உனக்கு ஞாபகம் வருகிறது. நீ விளக்கைத் தூண்டிய பொழுது யாரைத் தூண்டுவதாக நினைத்தாய்? உன்னையேதான் நீ தூண்ட முயன்றாய். நாளடைவில், நீயாக எடுத்துக் கொண்ட பிறப்பின் மாசும், காலத்தின் துருவும் ஏற ஏற, உன்னுள் இருக்கும் நான் உன்னுள் எங்கேயோ படு ஆழத்தில் புதைந்து போனேன். உன்னுள் இப்போழுது நேர்ந்த பூகம்பத்தினால் நீயே புரண்டதால், உன்னுள் புதைந்து போன நான் இப்பொழுது வெளிவந்தேன்.’
‘என்னைக் கை விட்டாயே என் கடவுளே!’
‘ஜனனீ, நீ என்னை விட்டு ஓடிப் போனாய். ஆனால் நீயே நானாய் இருப்பதால் உன்னை விட்டு நான் ஓட முடியாது. உன்னுடன் ஒட்டிக் கொண்டு வந்தேன். வந்த என்னையும் உன்னுள் புதைத்து விட்டாய். புதைத்தும் எனக்குச் சாவு இல்லாததனால், என் மேல் மண்ணைப் போட்டு மூடினாலும், நான் மூச்சுக்குத் தவித்துக் கொண்டாவது இருந்து கொண்டுதான் இருக்கிறேன்…’
‘ஜனனீ, நீ இதை அறி. இப்பொழுது நீ – என்னிலிருந்து பிரிந்த நீ – மறுபடியும் நானாய்க் கொண்டிருக்கிறாய். அதனால்தான் நான் மறுபடியும் உன்னில் உருவாக முடிகிறது. எங்கும் பரவி நிலையற்று, உருவற்று, உருவற்ற நிலையிலிருந்தே, உருவாய்ப் பிரிய முடியும். அவ்வுருவற்ற நிலையின் சாயையை, அவ்வுருக்கள் தாங்கியிருப்பினும், அவை அவ்வுருவற்ற நிலையின் பிளவுகள்தாம். ஏனெனில் முழுமையின் துண்டங்கள் அவை. அப்பொழுது, துண்டங்களின் துண்டங்கள் முழுமையின் எவ்வளவு பின்னம்! ஆகையால், ஜனனீ, ஜனனம் எவ்வளவு பின்னம்! ஆயினும் துண்டங்கள் இன்னமும் துண்டமாகி, பொடியாகி, அப்பொடி இன்னமும் பொடிந்து மறுபடியும் உருவற்ற நிலையில்தான் கலந்து விடுகின்றது. ஆகையால் ஜனனீ, நீ என்னில் மூழ்கினால், நீயே நானாகி விடுவாய். இதுதான் உன்னின் மீட்சி… இதுதான் உன்னின் மீட்சி… மீட்சி. அந்தக் குரல் மறுபடியும் அவளுள் அடங்கியது, குழலின் நாதம் போல்.’
லா.ச.ரா. வெறுமனே மேட்டுக்குடியினர் பற்றித்தான் எழுதினார் என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. ‘ஜனனி’ என்ற கதையில் வரும் துயரம் 2500 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கிரேக்க காவியங்களின் துயரத்தையும் விஞ்சக் கூடியது.
அணுவுக்கு அணுவாம் பரமாணுவில் பாதியாய் உருக்கொண்ட பராசக்தி ஜன்மம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். ஒரு நள்ளிரவு நேரம். அமாவாசை. எங்கே ஜன்மம் நேரப் போகிறதோ அங்கே போய் ஒட்டிக் கொள்வோம் என்று தேடியபடியே காற்றில் மிதந்து செல்கையில் ஒரு கோவில் திருக்குளத்தின் அருகில் ஒரு மரத்தடியிலிருந்து முக்கல் முனகல் கேட்கிறது. ஒரு இளம்பெண் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கிறாள். அருகே ஒரு ஆடவன் கைகளைப் பிசைந்தபடி உட்கார்ந்திருக்கிறான். ஜன்மம் எடுக்க வேண்டுமென வந்த தேவி உடனே அந்த இளம்தாயின் உள்மூச்சு வழியே உட்புகுந்து கருப்பையில் பிரவேசிக்கிறாள். அங்கே ஏற்கனவே இருந்த ஜீவனிடம் நீ இவ்விடத்தை விட்டு விடு என்கிறாள். அதற்கு அந்த ஜீவன், பிறவித் துன்பத்தைக் கடந்து உன்னிடம் கலக்கத்தானே நாங்கள் எல்லோரும் இப்படிப் பிறவி எடுக்கிறோம். உனக்கு ஏன் இந்த அற்ப ஆசை என்கிறது.
குழந்தாய், நான் அன்னையாய் இருந்து இந்த உலகைப் பராமரித்து அலுத்து விட்டது. நான் குழந்தையாக வேண்டும் என்ற இச்சை வந்து விட்டது என்கிறாள் தேவி. அப்படியானால் இந்த ஜன்மத்தின் மூலம் எனக்கு விதித்திருக்கும் வினை தீர்ந்தாக வேண்டுமே என்கிறது கருவில் இருக்கும் உயிர். அதைத்தான் உனக்குப் பதிலாக நான் அனுபவிக்கப் போகிறேனே! எந்தப் பரமாணுவின் வழி நான் இந்தக் காயத்தினுள் வந்தேனோ அதன் உருவில் நீ இத்தாயின் வெளிமூச்சில் வெளிப்படுவாயாக! ஆசீர்வாதம்.
தேவி ஜனனம் எடுக்கிறாள். ஆனால் பிறந்த மறுகணமே அவளுக்கு மூச்சுத் திணறுகிறது. ஒரு அழுக்குத் துணி அவள் முகத்தில் விழுகிறது. குரல்வளையை இரண்டு கட்டைவிரல்கள் அழுத்துகின்றன. மூச்சு விட முடியவில்லை. பிள்ளையைப் பெற்றவளின் கை அது. ஏன் என் குழந்தையைக் கொல்கிறாய், கொலைகாரி என்று குழந்தையைப் பிடுங்குகிறான் ஆடவன். என் புருசன் பட்டாளத்திலேருந்து வந்தால், ‘இந்தா, சாமி குடுத்தது, கொஞ்சு’ன்னு குடுக்கச் சொல்றியா என்கிறாள் அவள். பிறகு அந்தக் குழந்தையை அங்கேயே குளக்கரையில் போட்டு விட்டுப் போய்விடுகிறார்கள் காதலர்கள். அப்படியே உருண்டு குளத்தில் விழுந்தாலும் சரி, அல்லது யாராவது எடுத்து வளர்த்தாலும் சரி.
ஒரு வயதான பிராமணர் அந்தக் குழந்தையை எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் செல்கிறார். அவருக்கு மூன்று தினங்களாக இதே கனா வந்து கொண்டிருந்தது. எங்கிருந்தோ ஒரு குழந்தை இவரிடம் வந்து தாத்தா, உங்காத்துலே எனக்கு ஒரு இடம் கொடேன் என்று கேட்கும் கனா. தம்பதிக்கு ஏற்கனவே குழந்தை எதுவும் இல்லை.
குழந்தையை அந்த பிராமணரின் மனைவி எப்படி எதிர்கொள்கிறாள் என்று பார்ப்போம். ‘இப்போ திருப்தியாயிடுத்தோன்னோ? மூணு பேரை ஏற்கனவே முழுங்கினேள். ஒருத்தியை வயசு வரத்துக்கு முன்னாலேயே மாரி தன்கிட்ட வரவழைச்சுண்டுட்டாள். இன்னொருத்தி ஸ்நானம் பண்ணப்போன இடத்துல குளத்தோடே போயிட்டா. உங்களுடைய ஏழாமடத்துச் செவ்வாய்கிட்டெ அப்பவாவது உங்களுக்குப் பயங்கண்டிருக்கணும். இல்லை. மூணாவது பண்ணிண்டேள். மூணும் பெத்தேள். தக்கல்லே. ராமேசுவரம் போனேள். எல்லோரும் பீடையைத் தொலைக்கப் போவார்கள். நீங்கள் என்னடான்னா, கொண்டவளை வயிறும் பிள்ளையுமா அங்கேயே காலராவிலே தொலைச்சுப்பிட்டு இன்னும் பாவமூட்டையைச் சம்பாதிச்சுண்டு வந்தேள்.’
என் பாவம்தான். ஆனால் என் எண்ணம்… என்று பம்முகிறார் பிராமணர். உடனே மனைவி சீறுகிறாள். ‘உங்கள் எண்ணத்தைப் பத்தி என்னிடம் பேசாதேயுங்கள். குலைவாழையை வெட்டிச் சாய்ச்சாவது நாலாந்தாரம் பண்ணிக்கணும்னு தோணித்தே. அதுதான் உங்கள் எண்ணம். ஏதோ உங்களிடம் நாலு காசு இருக்கு. என் வீட்டுலே சோத்துக்குக் கூட நாதியில்லே. அதனாலே என்னை விலைக்கு வாங்கிப்பிட்டோமுங்கற எண்ணந்தானே?’
குழந்தையின் முகத்தில் இரண்டு சொட்டுக் கண்ணீர் விழுகிறது. ‘இவள் ஆத்திரப்படுவது வெறும் கோபத்தினால் அல்ல; வெதும்பிப் போன தன் வாழ்க்கையின் வேதனை தாங்காமல் துடிக்கிறாள்’ என்று நினைக்கிறாள் குழந்தையாய்ப் பசியில் துடிக்கும் பராசக்தி. ஜனனி.
‘ஜனனீ… விளையாட்டுப் போதுமா? திரும்பி வருகிறாயா?’ கேட்கிறான் ஆண்டவன்.
‘இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே?’
‘நீ தாய்ப்பாலுக்கு ஆசைப்பட்டாய். கிடைத்ததோ? உன் உயிருக்கே உலை வந்தது. நீ தப்பியது யார் புண்ணியமோ, எப்படியும் உன் சக்தியினால் அல்ல.’
ஐயர் வீடு ரமித்தது. அவள் வந்த இடத்தில் திரு பெருகக் கேட்பானேன். ரமித்தது என்ற வார்த்தையைக் கவனியுங்கள். ரம்யம் என்பதன் வினைச்சொல்.
வீட்டு அம்மாளுக்கும் ஜனனிக்கும் ஒட்டவில்லை. அதன் பிறகு அவளுக்கே ஒரு குழந்தை பிறக்கிறது. ஆனாலும் ஜனனிக்கு அவள் ஆசைப்பட்ட தாய்ப்பால் மட்டும் கிடைக்கவில்லை. மடியில் ஏறி அமர்ந்தாலும் பாலுக்குப் பதிலாக அறைதான் கிடைத்தது. அம்மாளுக்கு ஜனனி மீது வெறுப்பு அல்ல; பயம். இன்னதென்றே தெரியாத பயம். பார்த்துக் கொண்டிருந்த ஐயரின் கண்களில் ஜலம்.
இறைவன் சொல்கிறான். ‘ஜனனீ, உனக்குச் சொல்ல வேண்டியதும் உண்டா? நீ எல்லோருக்கும் பாலைக் கொடுப்பவளேயன்றி, குடிப்பவள் அல்ல! உலகில், தான் ஈன்ற கன்றுக்குப் பாலைக் கொடாது தன் பாலைத் தானே குடிக்க முயலும் பசுவுக்குக் கழுத்தில் தடயம் போட்டு விடுவார்கள். உனக்கு இப்பொழுது நேர்ந்திருப்பதும் அதுவே தவிர, வேறல்ல. நீ அவளுக்கு ஒரு குழந்தையைக் கொடுத்து அதனால் அவள் பாலைக் குடித்து விடலாம் என்று நினைத்தாய் அல்லவா? இதுதான் ஜன்மத்தின் முதல் பாடம். எண்ணியபடி நடக்குமென்று எண்ணாதே!’
வயது ஆக ஆக ஜனனி மீதான அம்மாளின் பகை வளர்கிறது. நெருப்பு வார்த்தைகளால் ஜனனியைப் பொசுக்குகிறாள். ஒருநாள் கோபம் தாங்காமல் ஜனனி தம்பியைச் சபிக்கிறாள். ‘உன்னை வைசூரி வாரிண்டு போக!’
தம்பிக்கு வைசூரி போட்டு விடுகிறது. தம்பி மேல் ஜனனிக்கு உயிர். ஏதோ கோபத்தில் சொல்லி விட்டாள். பிறகு ஜனனியே பிரார்த்தனை செய்து வைசூரியைப் போக்குகிறாள். குழந்தைக்கு ஜலம் விடுகிறார்கள். குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு விக்கி விக்கி அழுகிறாள் ஜனனி. அவளும் குழந்தைதானே? அப்போது அம்மாள் சொல்கிறாள். ‘இதென்னடியம்மா கூத்து! கொழந்தை சாகல்லையேன்னு அழறையா?’ ஜனனிக்குப் பூஜையறையில் யாரோ சிரிக்கிறாற்போலிருக்கிறது. போய்ப் பார்க்கிறாள். யாரும் இல்லை.
ஜனனி வளர்கிறாள். மாப்பிள்ளையே கிடைக்கவில்லை. கடைசியில் ஒருவன் கிடைக்கிறான். தூரதேசத்தில் ராணுவத்தில் வேலையில் இருந்தான். பையன் செந்தாழைச் சிவப்பு. பணத்தை வாரி இறைத்துக் கல்யாணம் செய்து வைக்கிறார் ஐயர். நான்கு நாள் கல்யாணத்துக்குப் பிறகு ஐந்தாம் நாள் சாந்தி பண்ணி புக்ககத்துக்குப் பெண்ணை அனுப்புவதாக இருந்தது. ஆனால் ராணுவத்திலிருந்து தந்தி வந்து ஊருக்குக் கிளம்பி விடுகிறான் மாப்பிள்ளை. சாந்தி நடக்கவில்லை.
மாப்பிள்ளைக்கு வரவே முடியவில்லை. வீட்டில் அம்மாளின் கொடுமை தாங்க முடியாமல் போகிறது. ஒருநாள் ஜனனி குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும்போது ஒரு ஆடவன் உற்றுப் பார்க்கிறான். பதற்றத்தில் ஜனனி வீட்டுக்கு ஓடி வந்து விடுகிறாள். முதல்முதலாக ஜனனிக்கு தேகத்தின் வாதை புரிகிறது. அதை லா.ச.ரா. சொல்லும் விதம் லா.ச.ரா.வே சொல்வது போல் அவர் எழுதவில்லை. அவர் மூலமாக தேவி எழுதுகிறாள்.
”இடுப்புக்குக் கீழே கால்கள் விட்டு விழுந்து விடுவன போல் ஆட்டங் கொடுத்தன. உடல் நடுங்கியது. பயந்தானா? முழுக்க முழுக்கப் பயந்தானா? புரியவில்லை. சமாளித்துக் கொண்டு சுவரை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு, சுவருடன் ஒட்டிக் கொண்டாற்போல் மாடிப்படிகளில் மெதுவாய்க் கால் வைத்து இறங்கினாள். கண்ணெதிரில், இருள் திரையில், அவன் விழிகள் மாத்திரம் பேருருக் கொண்டு நீந்தின. அவைகளில் உலகத்தின் ஆசாபங்கத்தின் எல்லை கடந்த சோகத்தையும், அதே சமயத்தில் உயிரின் ஆக்கலுக்கும், அழித்தலுக்கும் அடிப்படையான மிருகக் குரூரத்தையும் கண்டாள். அந்த ஏக்கத்தை ஆற்ற ஒரு பரிவு தாவுகையில், துக்கம் தொண்டையைக் கல்லாயடைத்தது. ஆயினும் அந்தத் தாபத்தின் கொடூரம் சோகத்தின் பின்னிருந்து பாம்பைப் போல் தலை நீட்டுகையில் அதன் முகத்தைக் கண்டு உள்ளம் உள்ளுக்கு உடனே சுருங்கிற்று.’
அதற்குப் பிறகு ஜனனிக்கு நடப்பதெல்லாம் ‘காதுகள்’ நாவலில் வரும் நாயகனுக்கு நடப்பவை. கபந்தங்களின் ஆவேச ஆட்டம். அன்று முதல் ஜனனியின் உடல் இளைக்கிறது. சரியாகச் சாப்பிடுவதில்லை. கண்ணீர் கன்னம் புரண்டு ஓடும். துடைக்கக் கூட முயலுவதில்லை. உட்கார்ந்த நிலை கூட மாறுவதில்லை. அவளுள் ஏதோ தகர்ந்து விட்டது. சோறு தண்ணியில்லாமல் பூஜையறையிலேயே கிடப்பாள். சமையலறையிலிருந்து அம்மாள் இறைவாள். பூஜையில் ஒக்காந்துண்டு சாமியை வேரோடு பிடுங்கினால் ஆயிடுத்தா? அதே நேரத்தில் எதிர்வீட்டில் உபந்நியாசகர் சொல்வார். ஊசிமுனையில் கட்டை விரலை அழுத்தியவளாய் பர்வதராஜகுமாரி, பராசக்தி, அளகபாராம் ஜடாபாரமாக ஆதாரத்தைத் தள்ளிவிட்டு, ஜலபானங்கூடப் பண்ணாது, காற்றையே புசிப்பவளாய் பிறகு அதையும் நிராகரித்தவளாய், சந்திரசூடனுடைய தியானத்தையே ஆகாரமாய்க் கொண்டவளாய் மஹா தபஸ்வியாய்…
ஒரு வருடம் கழித்து மாப்பிள்ளை வருகிறான். சாந்தி முகூர்த்தம் ஏற்பாடாகிறது. மாப்பிள்ளை அவளை அணைக்கிறான். அவளா, கபந்தங்களின் ஆட்டமா, தெரியவில்லை. அவனை ஒரு தள்ளு தள்ளுகிறாள். இரும்புக் கட்டிலில் மோதி இறக்கிறான் மாப்பிள்ளை.
ஜனனிக்குப் பதினைந்து ஆண்டுகள் தண்டனை அளிக்கப்பட்டு சிறைக்குப் போகிறாள். என்னைக் கை விட்டாயே கடவுளே எனக் கதறுகிறாள். அப்போதுதான் ஜனனீ, நீ இதை அறி என்ற மேலே கண்ட வாசகம் வருகிறது…
(தொடரும்)