சிறு தொழில்களை சீரழிக்கும் சீனப்பொருள்கள்
போட்டிகள் நிறைந்த இன்றைய நாளில் ஒரு சிறு தொழிற்சாலையை நடத்துவது பெருஞ்சவாலாகும்.
போட்டிகள் நிறைந்த இன்றைய நாளில் ஒரு சிறு தொழிற்சாலையை நடத்துவது பெருஞ்சவாலாகும். பக்கத்து நிறுவனங்களிடமிருந்தோ பக்கத்து மாநிலங்களிடமிருந்தோ போட்டி என்ற நிலைமாறி அயல்நாடுகளிடமிருந்து கடுமையான போட்டியினை சிறுதொழில் முனைவோர் சந்தித்து வருகின்றனர். இதைச் சமாளிக்க அரசின் ஆதரவு பெரிய அளவில் தேவைப்படுகிறது.
1972 முதல் 1995 வரை சிறு தொழில்களுக்கு மைய அரசு மிகப்பெரிய அளவில் உதவி செய்தது. 1995-க்குப் பிறகு உதவி குறைந்துவிட்டது. அயல்நாடுகளின் போட்டியென்று கூறும்போது, சீனாவில் தயாராகும் பொருள்கள் மிகக் குறைந்த விலையில் இந்தியச் சந்தையில் விற்கப்படுவதுதான் முக்கியமாக இருக்கிறது. இதனால் நாடு முழுக்க ஆயிரக்கணக்கான சிறுதொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுவருகின்றன.
இந்த ஆண்டு ஹோலிப் பண்டிகையின்போது பயன்படுத்தப்பட்ட வண்ணப்பொடி, பீச்சாங்குழல் உள்ளிட்டவை 90 சதவீதம் சீனப் பொருள்களாகவே இருந்தன. இதனால் மும்பையைச் சுற்றியுள்ள சிறுதொழிற்கூடங்கள் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்தனர்.
சென்னைûயைச் சுற்றி விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறிவிட்டன. அவற்றில் கட்டப்படும் புதிய கட்டடங்களின் சமையலறை, குளியலறை போன்றவற்றுக்கான கருவிகள், குழாய்கள், ஒட்டு ஓடுகள் போன்றவை அன்றாடம் நூற்றுக்கணக்கான பெட்டகங்களில் சீனாவிலிருந்துதான் தருவிக்கப்படுகின்றன. இவற்றைத் தயார் செய்யும் தமிழ்நாட்டு நிறுவனங்களுக்கும் பிற மாநில நிறுவனங்களுக்கும் கேட்பு இல்லை. இதனால் இவை கடுமையாக பாதிக்கப்பட்டு மூடப்படும் நிலைக்கு வந்துவிட்டன.
சீனப் பொருள்களின் இறக்குமதி காரணமாக உள்ளூர் நிறுவனங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன, மத்திய அரசு உடனே தலையிடவேண்டும் என்று இந்திய மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொருள்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர், பிரதமருக்கு அவசர வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
சீனாவில் கொடுக்கப்படும் ஏற்றுமதிச் சலுகைகளால் இந்தியப் பொருள்களைவிட மிகக் குறைவான விலைக்கு இந்தப் பொருள்களை விற்கின்றனர். (அதே விலையில் இங்குள்ள நுகர்வோர்கள் பெறுகின்றனரா என்பது அடுத்த கேள்வி.) 2012 -13-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 65,000 கோடி ரூபாய்க்கு சீனாவிலிருந்து இறக்குமதி செய்திருக்கிறோம். அதில் மின் கருவிகள் மட்டும் 29,000 கோடி ரூபாய் மதிப்புள்ளவை.
இந்த இறக்குமதிகளால் இந்திய நிறுவனங்கள் வேலையிழப்பது ஒரு புறம், அரிய அன்னியச் செலாவணியான டாலரைக் கொடுத்து வாங்க வேண்டியிருப்பதால் டாலரின் மதிப்பு உயர்ந்துகொண்டே போகிறது, ரூபாயின் மதிப்பு சரிந்துகொண்டே போகிறது. வெளிவர்த்தகப் பற்று வரவில் ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரித்ததால் வரும் இடைவெளி அதிகமாகி வருவதை அரசே கவலையோடு கண்காணித்து வருகிறது. இந்த நிலையில் அவசியமற்ற பண்டங்களை இறக்குமதி செய்வதை அரசு அனுமதிப்பது ஏன்?
சீனத் தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் காரணாக இந்தப் பொருள்கள் விலை மலிவாக இங்கே விற்கப்படுவதில்லை. சீன அரசு தரும் சலுகைகள்தான் இதற்குக் காரணம். இந்திய அரசும் இந்தியத் தொழில் நிறுவனங்களுக்கு - குறிப்பாக சிறு தொழில் நிறுவனங்களுக்கு - இந்தச் சலுகைகளை அளித்தால் விலை குறைவாக சந்தையில் விற்க முடியும்.
சீனத்திலும் இந்தியாவிலும் சிறுதொழில் நிறுவனங்களின் அமைப்பு, செயல்பாடு, சலுகைகள், தடங்கல்கள் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம். மைய அரசின் சிறுதொழில் சேவை மையம், தேசிய சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம், இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி ஆகியவற்றின் மூலம் இந்த ஒப்பீட்டை மேற்கொண்டால் உண்மை புரியும். நமது சிறுதொழில்களைக் காப்பதால் உற்பத்தியையும் வேலைவாய்ப்பையும் மட்டுமல்ல அரிய அன்னியச் செலாவணியையும் காத்திட முடியும். இதனால் ரூபாயின் மதிப்புச் சரிவையும் தடுத்து நிறுத்த முடியும்.
சீனப் பொருள்களின் போட்டியைக் குறைப்பதற்கு மத்திய அரசு உடனடியாகச் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சீனப் பொருள்கள் மீதான இறக்குமதி வரியை அதிகரிக்கலாம், உள்ளூர் வரிகளைக் குறைக்கலாம் அல்லது நீக்கலாம். குறிப்பிட்ட பொருள் உற்பத்தியில் ஈடுபடும் உற்பத்தியாளர்களுக்குத் தரும் வங்கிக் கடன்கள் மீதான வட்டியைக் குறைக்கலாம், இறக்குமதியைத் தவிர்க்க உதவும் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு மானியம் தரலாம்.
சீனத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் சூரிய மின்கலத் தொகுப்புகள் ஐரோப்பிய நாடுகளில் உற்பத்தி செய்யப்படுபவற்றைவிட விலை குறைவாக இருப்பதற்குக் காரணமே சீன அரசு தரும் மானியம்தான். எனவே சீனத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் மின்கலத் தொகுப்புகள் மீது "இறக்குமதி தவிர்ப்பு தீர்வை' விதிக்கப்படும் என்று ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஆணையம் அறிவித்திருப்பதை இந்திய அரசு நல்ல முன்னுதாரணமாகக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
மத்திய அரசுக்கு ஏதேனும் சர்வதேச நிர்பந்தம் இருக்குமானால், இந்திய சிறுதொழில் நிறுவனங்கள் எந்தெந்த தொழிலில் அல்லது உற்பத்தியில் ஈடுபடக்கூடாது என்றாவது முன்கூட்டியே அறிவித்துவிடுவது நல்லது. இதனால் இந்திய வங்கிகளுக்கும் வாராக்கடன் இனத்தில் நிலுவை குறையும்; இந்தியச் சிறுதொழில் முனைவோர்களும் தேவையின்றி அலைக்கழிக்கப்பட்டு முதலையும் நேரத்தையும் இழந்து நொடித்துப் போவதிலிருந்து தப்பிக்கமுடியும்.
இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலை, அளவு, அவற்றை உற்பத்தி செய்யும் நாடு ஆகிய தகவல்களை மத்திய கலால் - சுங்கவரித் துறைகளிடமிருந்துபெற்று இணையதளத்தில் வெளியிட்டால் இந்திய சிறுதொழில் உற்பத்தியாளர்கள் சில குறிப்பிட்ட பொருள்களின் தயாரிப்பில் இறங்காமல் எச்சரிக்கையாக இருக்க முடியும்.
உள்நாட்டு சிறுதொழில் முனைவோர்களை முடக்குவதுதான் சீனப் பொருள் குவிப்பின் முதல் கட்ட நடவடிக்கை. அதில் அவர்கள் வெற்றிகண்டு இந்திய நிறுவனங்கள் கடையை மூடிவிட்டால் பிறகு சீனப் பொருள்களைக் கடுமையாக விலையேற்றி இதுவரை அளித்த மானியத்தைப்போல பல மடங்கு திரும்ப எடுத்துவிடலாம் என்பது சீன அரசின் திட்டமாக இருக்கலாம்.
சீன அரசு சீனத் தொழில் நிறுவனங்களின் நலன் கருதி இந் நடவடிக்கைகளை எடுக்கிறது. இந்திய அரசு தன்னுடைய மக்களின் மீது அக்கறை கொண்டு பதில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டாமா?
விவசாயத்துறையிலிருந்து வேறு துறைக்குத் தொழிலாளர்கள் செல்வதைப்போல சிறுதொழில்துறையிலிருந்தும் தொழிலாளர்கள் விலகினால் இந்த நாட்டின் பொருளாதாரம் மிகக் கடுமையான சேதத்துக்கு உள்ளாகும். காரணம், இந்தியச் சிறு தொழில் நிறுவனங்கள்தான் இந்தியாவின் நடுத்தர - பெருந்தொழில் நிறுவனங்களுக்கே ஆதாரங்களாக இருந்துவருகின்றன!