முத்தையா பாகவதர் ஒரு ஊருக்கு ஹரிகதை நிகழ்ச்சிக்குப் போயிருந்தார். அவரது நிகழ்ச்சிக்கு இன்னும் இரண்டு மூன்று நாட்கள் இருந்தது. ஜாகையில் சாப்பிட்டுவிட்டு படுத்துக்கொண்டார் பாகவதர்.
அவருக்குத் தெரியாமல் அவருடன் இருக்கும் சீடர் அதே ஊரில் தானும் ஹரிகதை செய்வதாகச் சொல்லி ஒரு நிகழ்ச்சியை ஏற்றுக் கொண்டிருந்தார். ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் தூங்கிவிட்டார் என்று நினைத்து அவருடைய சலங்கையையும் எடுத்துக்கொண்டு நிகழ்ச்சி நடத்தக் கிளம்பிவிட்டார் சீடர். கண்ணயர்ந்த முத்தையா பாகவதருக்கு சட்டென்று விழிப்பு கொடுத்தது. மைக்கில் "ஆதெள கீர்த்தனாரம்பத்திலே...' என்று ஹரிகதை நிகழ்ச்சியை யாரோ நடத்துவது காதில் கேட்டது. எழுந்து கதை கேட்கலாம் என்று அவர் சென்று பார்த்தால் சலங்கையைக் கட்டிக்கொண்டு மேடையில் நிற்கிறார் அவரது சீடர்.
"ஆதெள கீர்த்தனாரம்பத்திலே, ஆதெள கீர்த்தனாரம்பத்திலே...' என்று தொடங்கத்தான் அவரால் முடிந்ததே தவிர, அதற்கு மேல் தொடர அந்த சிஷ்யனுக்கு முடியவில்லை. இதற்கிடையில் தனது குருநாதர் முத்தையா பாகவதர் அங்கே இருப்பதை அந்த சீடர் பார்த்துவிட்டார். ஓடிப்போய் குருநாதரின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து மன்னிப்புக் கேட்டார் அவர். முத்தையா பாகவதர் மேடையில் ஏறினார். ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே பகவான் என்ன சொன்னார் என்றால் எதுவும் பிஞ்சில் பழுத்துவிடக் கூடாது என்று சொன்னார்' என்று கைதட்டலுக்கு இடையில் சொல்லியபடி நின்றுபோன அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தி முடித்தாராம். தனது சீடனையும் மன்னித்தார் என்று சொல்வார்கள்.
- ஆஸ்திக சமாஜம் நரசிம்மன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.