தேவகோட்டையில் அருணாசலம் செட்டியார் என்ற ஒரு பெரிய தனவந்தர் இருந்தார். அவருக்கு பர்மாவில் எல்லாம் வியாபாரம் இருந்தது. அவருடைய வீட்டில் கல்யாண கச்சேரி. மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர் பாடிக் கொண்டிருந்தார். கச்சேரி கேட்டுக் கொண்டிருந்த அருணாசலம் செட்டியார், "தேவகாந்தாரியில் "க்ஷீரசாகர சயனா' பாடுங்களேன்' என்று வேண்டுகோள் விடுத்தார். விஸ்வநாதய்யரின் பார்வை எல்லாம் செட்டியார் போட்டிருந்த வைரச் சங்கிலியில் இருந்தது.
"க்ஷீரசாகர உங்க வைரச் சங்கிலியைப் பார்க்கிறதே'' என்றாராம் விஸ்வநாதய்யர்.
"நீங்க "க்ஷீரசாகரா' பாடுங்க, அந்த வைரச் சங்கிலியை தருகிறேன்'' என்றார் செட்டியார்.
"நீங்க சங்கிலியைப் போடுங்க, அப்பதான் க்ஷீரசாகர வரும்''- இது விஸ்வநாதய்யர்.
இதற்குப் பின்னர், சற்றும் தயங்காமல் வைரச் சங்கிலியை எடுத்து விஸ்வநாதய்யர் கையில் கொடுத்துவிட்டாராம் செட்டியார். ஒரு கையில் சங்கிலியைப் பிடித்தபடியே தேவகாந்தாரி ஆலாபனை செய்து "க்ஷீரசாகர சயனா' பாடினார் விஸ்வநாதய்யர். "தாரக நாம' என்கிற இடத்தை பாடிக்கொண்டிருக்கும்போது மெய்மறந்த அருணாசலம் செட்டியார் எழுந்து நின்று சொன்னாராம்-
"என்ன செய்ய, அந்தக் கையில் போட என்னிடம் இன்னொரு வைரச் சங்கிலி இல்லாமல் போயிற்றே! இந்த தேவகாந்தாரிக்காக சொத்தையே உமக்கு எழுதிக் கொடுக்கலாமே!''
அப்படியெல்லாம் சங்கீத ரசிகர்கள் இருந்தார்கள்.
- ஆஸ்திக சமாஜம் நரசிம்மன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.