‘படத்திற்கு திரைக்கதை-வசனம் எழுத வேண்டுமா? வெளியூருக்கு, ஸ்டூடியோவுக்கு வரமாட்டேன், ஹோட்டல், லாட்ஜில் உட்கார்ந்து எழுத மாட்டேன். என் வீட்டில் தான் எழுதுவேன். காலை ஒன்பது மணியிலிருந்து மாலை மூன்று மணி வரை டிஸ்கஷன். நான் எழுதிக் கொடுத்ததை மாற்ற வேண்டுமானால் சரியான காரணத்தை என்னிடம் கூறி மாற்றம் செய்து கொள்ளவேண்டும்.’ – இப்படிப்பட்ட நிபந்தனைகளுடன் படவுலகில் புகுந்திருக்கிறார் பிரபல பெண் எழுத்தாளர் திருமதி இந்துமதி.
கணவர் (ரங்கன்) அம்பத்தூரிலுள்ள டால்மியா குரூப் ஃபாக்டரியின் மானேஜர் – இன்ஜினியர்; வீட்டிற்கு யார் வந்தாலும் தீர்க்க விசாரித்துத் தெரிந்து கொள்ளும் ஒரே சின்ன மகன் சித்தார்த் கெளதம்.
‘சந்தன மலர்’களைத் தயாரிப்பவர்கள் நடிகர் சுதாகரின் சகோதரர்கள் விஜய்-பிரசாத். இவர்களுக்கு நாவலாசிரியை இந்துமதி அறிமுகமானது எப்படி? பாரதிராஜாவின் அஸிஸ்டெண்டுகளில் ஒருவர் மனோபலா, இந்துமதியினுடைய பிரிய வாசகர். ராகமாலிகா எழுதிய ‘சந்தன மலர்’களின் மூலக் கதையை அவர் கேட்டதுமே வசனம் எழுத இந்துமதியின் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார்.
அந்த அபிப்ராயத்தை சுதாகர், டைரக்டர் ஜே.ராமு உள்பட அனைவரும் ஏற்றுக் கொண்டனர். காரணம்?
இது காதற் கதை. லவ் சப்ஜெக்டுகளை டீல் பண்ணுவதில் இந்துமதிக்கு நிகர் அவரே என்பது எல்லோருடைய கருத்துமாகும். இந்த விஷயத்தை ட்ரைவின் ரெஸ்டாரண்டில் சுதாகர் யூனிட் பேசிக் கொண்டிருந்த பொழுது, வழக்கம் போல தற்செயலாக இந்துமதி, தனது கணவருடன் அங்கு சென்றிருக்கிறார். அந்த எதிர்பாராத சந்திப்பு செண்டிமெண்ட்டாகவும் ‘சூட்’டாகி விட்டது இரு சாராருக்கும்!
ஒரே வாரத்தில் வசனம் முழுவதையும் எழுதிக் கொடுத்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தி விட்டாராம் இந்துமதி.
‘சந்தன மலர்கள்’ கதையைப் பற்றி இவர் என்ன நினைக்கிறார்?’
‘அது ஒரு காதல் கதை. அது எனக்கு எழுதுவது கைவந்த கலை. இதன் ‘நாட்’டும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சுயநலக்காரர்களே’ என்ற ‘தீமு’ம் எனக்குப் பிடித்திருந்தது.
-மருதம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.