பகுதி 23 – செத்திலாப்பத்து – 2
திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவனே, விடைவாகனத்தில் எழுந்தருளுபவனே, சங்கரனே, எண்ணற்ற தேவர்களுக்கெல்லாம்
செத்துஇலாப் பத்து. அதாவது, இறைவனை எண்ணி மனம் மகிழ்ந்து, இன்னும் உன்னிடம் சேராமல் நான் இந்த உடலோடு இருக்கிறேனே என்று வருந்திப் பாடிய பாடல்கள்.
இந்தப் பகுதியில் பத்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவை திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை.
145
பாடலின்பம்
புலையனேனையும் பொருள்என நினைந்துஉன்
அருள்புரிந்தனை, புரிதலும் களித்துத்
தலையினால் நடந்தேன், விடைப்பாகா,
சங்கரா, எண்இல் வானவர்க்குஎல்லாம்
நிலையனே, அலைநீர் விடம்உண்ட
நித்தனே, அடையார் புரம் எரித்த
சிலையனே, எனைச் செத்திடப் பணியாய்,
திருப்பெருந்துறை மேவிய சிவனே.
*
அன்பர்ஆகி மற்று அரும்தவம் முயல்வார்
அயனும் மாலும், மற்று அழல்உறு மெழுகாம்
என்பராய் நினைவார் எனைப் பலர்
நிற்க இங்குஎனை எற்றினுக்கு ஆண்டாய்?
வன்பராய் முருடுஒக்கும் என் சிந்தை,
மரக்கண், என்செவி இரும்பினும் வலிது,
தென்பராய்த்துறையாய், சிவலோகா,
திருப்பெருந்துறை மேவிய சிவனே.
பொருளின்பம்
திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவனே, விடைவாகனத்தில் எழுந்தருளுபவனே, சங்கரனே, எண்ணற்ற தேவர்களுக்கெல்லாம் தலைவனாக விளங்குபவனே, அலைகடலில் தோன்றிய ஆலகால விஷத்தை உண்டவனே, அதன்பிறகும் நிலைத்திருப்பவனே, பகைவர்களின் முப்புரங்களை எரிக்க வில்லேந்திய வீரனே,
கீழ்மையான செய்கைகளைச் செய்த என்னையும் ஒரு பொருட்டாக நினைத்து எனக்கு அருள் செய்தாய், அதனால் நான் மகிழ்ந்து, திமிர் பிடித்து, தலைகீழாக நடந்தேன்,
இந்த ஆணவத்தைக் குறையச்செய், சிவபெருமானே, நான் செத்திட அருள்செய், உன் பாதங்களைச் சேர்ந்திட அருள்செய்.
*
திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவனே, திருப்பராய்த்துறையில் அருள்செய்பவனே, சிவலோகனே,
பிரம்மனும் திருமாலும் உன்னுடைய அன்பர்களாகி அரிய தவம் செய்கிறார்கள், இன்னும் பலர் நெருப்பில் இட்ட மெழுகைப்போல உடல் உருகி வெறும் எலும்போடு நின்றபடி உன்னை நினைக்கிறார்கள்,
அவர்களெல்லாம் இருக்க, நீ ஏன் என்னை ஆட்கொண்டாய்? எனக்கு என்ன தகுதி இருக்கிறது? என்னுடைய சிந்தனை, கடினமான பராய்மரத்தின் கணுவைப்போன்றது, என்னுடைய கண்கள் மரம்போல் கருணையற்று இருக்கின்றன, என்னுடைய காதுகள் உன் பெருமையைக் கேட்காமல் இரும்புக் காதுகள்போல் இருக்கின்றன, இந்நிலை இன்னும் எத்தனை நாளைக்கு? அருள்செய்து என்னைக் காப்பாய்.
சொல்லின்பம்
புலையன்: கீழ்மையான செயல்களைச் செய்கிறவன்
விடைப்பாகா: காளைவாகனத்தில் எழுந்தருளுகிறவன்
அலைநீர்: கடல் நீர்
நித்தனே: நித்தமும் நிலைத்திருப்பவனே
அடையார்புரம்: பகைவரின் ஊர்
சிலை: வில்
முயல்வார்: முயற்சி செய்வார்
அயன்: பிரம்மன்
அழல்: நெருப்பு
என்பர்: (வெறும்) எலும்பைக் கொண்டவர்
நினைவார்: நினைப்பார்
எற்றினுக்கு: எதற்காக
வன்பராய் முருடு: வலிமையான/ கடினமான பராய்மரத்தின் கணு
சிந்தை: சிந்தனை