பகுதி - 17
நம் வாழ்க்கையிலே, ஏதோ வெகுசிலரைத் தவிர்த்து, மற்றவருக்கு ஒரு பெரிய நோய் உண்டு.
நம் வாழ்க்கையிலே, ஏதோ வெகுசிலரைத் தவிர்த்து, மற்றவருக்கு ஒரு பெரிய நோய் உண்டு. எதையும் தள்ளிப்போடுவது, ஒத்திப்போடுவது என்பதே அது. இப்படித் தள்ளிப்போடுவது அல்லது ஒத்திப்போடுவது என்பது எல்லாச் சமயங்களிலும் தவறு என்பதில்லை. ஒத்திப்போட வேண்டியவற்றை ஒத்திப்போடத்தான் வேண்டும். சிலவற்றை இன்றே, இப்போதே, இக்கணமே செய்தாக வேண்டும். வேறுசிலவற்றை அப்படிச் செய்தால், அது அவசரப்பட்டுக்கொண்டு, நிலைமையைப் புரிந்துகொள்ளாமல், உரிய சூழ்நிலை ஏற்படுவதற்கு முன்னாலேயே காரியத்தில் இறங்கி, ‘அவசரக் குடுக்கை’ என்று பெயர் வாங்கிக்கொண்டு காரியமும் கெட்டுப்போகிற நிலையும் ஏற்படுவதுண்டு. இதனால்தான் வள்ளுவர்,
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.
என்றார். தூங்குக என்றால் ஒத்திப்போடுதல். ஆங்கிலத்தில் defer, delay என்பார்கள். எதையெதை இப்போது செய்யத் தேவையில்லை, செய்யக்கூடாதே அதையதை ஒத்திப்போடு. எதையெல்லாம் உடனடியாகச் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் உடனடியாகச் செய். அதுமட்டுமல்ல,
Advertisement
செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்
செய்யக்கூடாததைச் செய்தாலும் தவறுதான், செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டுவிட்டாலும் தவறுதான், கேடுதான் என்றும் சொல்கிறார்.
அருணகிரிப் பெருமான், நாம் அன்றாடம் செய்ய வேண்டிய, எப்போதும் எல்லா சமயத்திலும் செய்ய வேண்டிய, ஆனால் செய்யத் தவறும் சிலவற்றைத் தன்னுடைய தவறுதல்களாகப் பட்டியலிட்டு நம் சார்பில் இறைவனிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறார். காலன் வரும்போது காட்சி பெற வேண்டும் என்பதே அது.
அந்தக் கடைசி நேரத்தில் இறைவனுடைய எண்ணம் மனத்திலே அழுந்த நிற்க வேண்டுமானால், அதற்காக இப்பொழுதிலிருந்தே ஒவ்வொரு கணமும் நினைத்து நினைத்துப் பழகினாலொழிய, யமபயம் வருத்தும் அந்த இடர்ப்பாடான தருணத்தில் இறைவனுடைய நினைப்பு வருவது என்பது சற்றும் முடியாத ஒன்றே. அதைத்தான் இந்தத் திருப்பரங்கிரித் திருப்புகழில் சொல்லி, இறைவனிடம் நமக்காகக் கையேந்துகிறார். எப்படி? இப்படி -
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன தனதான
உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை
உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை
உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன தருள்மாறா
உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன்
விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன்
உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் மலைபோலே
கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு
கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்
கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு பொருபோதே
கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு
கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள்
கணத்தில் என்பய மறமயில் முதுகினில் வருவாயே
வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள
விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண
விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர் புரிவேலா
மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய
கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை
விரைத்த சந்தன ம்ருகமத புயவரை உடையோனே
தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு
புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு
சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ மகிழ்வோனே
தெனத்தெ னந்தன எனவரி யளிநறை
தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்
திருப் பரங்கிரி தனிலுறை சரவண பெருமாளே
</p>