பகுதி - 23
மௌன ஆலயத்தில் இருந்தபடி, புருவமத்தியில் தியானித்து பெரிய பூசை (மாபூசை) செய்ய உன் அருள் வேண்டும் என்று நேற்றைய பாட்டில் துதிக்கக் கேட்டோம்.
மௌன ஆலயத்தில் இருந்தபடி, புருவமத்தியில் தியானித்து பெரிய பூசை (மாபூசை) செய்ய உன் அருள் வேண்டும் என்று நேற்றைய பாட்டில் துதிக்கக் கேட்டோம். திருவண்ணாமலை கோபுரத்திலிருந்து குதித்த சமயத்தில் தாங்கிக்கொண்ட இறைவன், ‘சும்மா இரு சொல்லற’ என்று உபதேசித்ததற்கு ஏற்ப, சிலகாலம் நிர்விகல்ப சமாதியில் இருந்து தியானித்தார். அதன் பிறகு இறைவனுடைய திருச்சித்தத்தின்படியும், அவனே அடியெடுத்துக் கொடுத்தபடியும் ‘முத்தைத்தரு’ என்று தொடங்கி கந்தன் கருணையாகிய அமுதத்தை அனைவரும் சொல்லித் துதிக்கும் வண்ணமாக பல பாடல்களை இயற்றினார் என்பதையெல்லாம் பார்த்தோம்.
சும்மா இருக்கச் சொன்னதும் அவன் அருள்தான்; இப்படி ‘ஓசை நயம் மிகுந்ததான நம் திருப்புகழைப் பாடுக’ என்று அனுக்கிரகித்ததும் அவனுடைய அருள்தான். இதைத்தான் இன்றைய பாடலில் குருநாதர் சொல்கிறார்.
இது திருச்செங்கோட்டுப் பதிகங்களில் ஒன்று. திருச்செங்கோடுக்கு நாகமலை, சர்ப்பகிரி, சர்ப்பகோத்ரம் என்றெல்லாம் பெயர் உண்டு. இத்தலத்துக்கான பாடல்களில் இந்தப் பாடலை, ‘நன்றி மறவாமை’ என்று திருப்புகழின் பரிமேலழகராகிய தணிகைமணி வ.சு.செங்கல்வராய பிள்ளை குறித்திருக்கிறார். இன்று நம்மிடைய புழங்கும் பெரும்பான்மையான உரைகள் — வாரியார் சுவாமிகள் உரை உட்பட — இவருடைய உரையை ஒட்டி எழுதப்பட்டவையே. ஆங்காங்கே சிற்சில மாற்றங்கள், கூடுதல் விளக்கங்கள் என்றெல்லாம் வாரியார் சுவாமிகள் விரித்துள்ளார்.
Advertisement
சர்ப்பகோத்ரப் பெருமாளிடம், நம்போன்றோர் வாக்கு வல்லமை பெறுவதற்காக குருநாதர் இயற்றிய பாடல், ‘அத்தவேட்கை பற்றி நோக்க’. அடியேனுடைய அன்றாட பாராயணங்களில் ஒன்று அந்தப் பாடல். அடுத்ததாக அதைப் பார்ப்போம். இப்போது இன்றைய பாடலைப் பார்ப்போம், பதிவைக் கேட்போம்.
நன்றி மறவாமை – திருச்செங்கோட்டுத் திருப்புகழ்
தத்தன தத்தன தத்தன தத்தன
தத்தன தத்தன தனதான
பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு
பட்சிந டத்திய குகபூர்வ
பச்சிம தட்சிண வுத்தர திக்குள
பத்தர்க ளற்புத மெனவோதுஞ்
சித்ரக வித்துவ சத்தமி குத்ததி
ருப்புக ழைச்சிறி தடியேனுஞ்
செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
சித்தவ நுக்ரக மறவேனே
கத்திய தத்தைக ளைத்துவி ழத்திரி
கற்கவ ணிட்டெறி தினைகாவல்
கற்றகு றத்திநி றத்தக ழுத்தடி
கட்டிய ணைத்தப னிருதோளா
சத்தியை யொக்கஇ டத்தினில் வைத்தத
கப்பனு மெச்சிட மறைநூலின்
தத்துவ தற்பர முற்றுமு ணர்த்திய
சர்ப்பகி ரிச்சுரர் பெருமாளே…