முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 29

இறைவனை நாதவிந்து கலாதியாக வழிபட்டவர் அருணகிரிநாதர். அவருடைய வாக்கிலிருந்து பெருகி வந்திருக்கும் அமிர்தமானது பலவகையான இசைக்கருவிகளுடைய ஓசைகளோடு முழங்கும் தன்மையன.

Updated On : 14 அக்டோபர், 2015 at 12:19 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:28 PM

இறைவனை நாதவிந்து கலாதியாக வழிபட்டவர் அருணகிரிநாதர். அவருடைய வாக்கிலிருந்து பெருகி வந்திருக்கும் அமிர்தமானது பலவகையான இசைக்கருவிகளுடைய ஓசைகளோடு முழங்கும் தன்மையன. சில பாடல்களில் மிருதங்கத்தின் நாதத்தைக் கேட்கலாம். சிலவற்றில் கஞ்சிரா ஒலிக்கும். இப்படிப் பல வாத்தியங்களின் ஓசைகளைக் கேட்டு இன்புறலாம். இவற்றைப் பாடக்கூட வேண்டியதில்லை. சந்த முறைப்படி படித்தவண்ணமாக, கூடவே அந்தந்த இசைக்கருவிகளை இசைக்கச் செய்தால் உள்ளத்துக்குள் புகுந்து உலுக்கும் அளவுக்கு இந்தப் பாடல்களில் பயிலும் இசையும் தாளகதியும் வலுவானவை.

இந்தப் பாடல்களைப் பழகத் தொடங்கி (இப்போதுதான் பழகத் தொடங்கியவர்களுக்கு) இப்போது ஒரு மாத காலம் பூர்த்தியாவதால், சற்றே கடினமான, தாளகதி துள்ளக்கூடிய பாடல்களை அவ்வப்போது அறிமுகப்படுத்தலாம் என்று நினைக்கிறோம். இன்றைய பாடல் ‘இந்தலம்பம்’ என்ற தலத்துக்கான பாடல். எந்த இடம் என்று குறிப்பாகத் தெரியாத தலம். ‘இடம் விளங்காத தலங்கள்’ என்றே தணிகைமணி வ.சு.செங்கல்வராய பிள்ளையவர்கள் ஏழு பாடல்களைக் குறித்துள்ளார். அவற்றுள் ஒன்று இது.

பாடலைக் கேட்டுப் பாருங்கள். பயிற்சி செய்வதற்காக நிதானமான வேகத்தில் ஒருமுறையும், ஒலியின்பத்தைக் கேட்பதற்காக சற்றே வேகமான நடையில் ஒருமுறையும் படித்துப் பதிந்திருக்கிறேன். எழுத்து வடிவத்தில் பார்த்தபடி ஒரு பத்துப் பதினைந்து முறைகள் சொல்லிப் பழகினால், பாடல் மனத்துக்குள்! கனமான ஓசைகளுக்கு நடுவில், மூன்றாம் சீரின் கடைசி எழுத்தாக ஒரு மெல்லொற்று சுழன்று வருவதை கவனியுங்கள். கஞ்சிரா ஒலியை ஏற்படுத்துவது இந்த மெல்லெழுத்துதான். 

Advertisement

தனன தனதனன தந்தந் தனத்ததன

தனன தனதனன தந்தந் தனத்ததன

தனன தனதனன தந்தந் தனத்ததன தனதான

அமல கமலவுரு சங்கந் தொனித்தமறை

அரிய பரமவெளி யெங்கும் பொலித்தசெய

லளவு மசலமது கண்டங் கொருத்தருள வறியாத

தகர முதலுருகொ ளைம்பந் தொரக்ஷரமொ

டகில புவனநதி யண்டங் களுக்குமுத

லருண கிரணவொளி யெங்கெங் குமுற்றுமுதல் நடுவான

கமல துரியமயி லிந்துங் கதிர்ப்பரவு

கனக நிறமுடைய பண்பம் படிக்கதவ

ககன சுழிமுனையி லஞ்சுங் களித்தமுத சிவயோகம்

கருணை யுடனறிவி தங்கொண் டிடக்கவுரி

குமர குமரகுரு வென்றென் றுரைப்பமுது

கனிவு வரஇளமை தந்துன் பதத்திலெனை யருள்வாயே

திமிலை பலமுருடு திந்திந் திமித்திமித

டுமுட டுமுடுமுட டுண்டுண் டுமுட்டுமுட

திகுட திகுடதிகு திந்திந் திகுர்த்திகுர்த திகுதீதோ

செகண செகணசெக செஞ்செஞ் செகக்கணென

அகில முரகன்முடி யண்டம் பிளக்கவெகு

திமிர்த குலவிருது சங்கந் தொனித்தசுரர் களமீதே

அமரர் குழுமிமலர் கொண்டங் கிறைத்தருள

அரிய குருகுகொடி யெங்குந் தழைத்தருள

அரியொ டயன்முனிவ ரண்டம் பிழைத்தருள விடும்வேலா

அரியின் மகள்தனமொ டங்கம் புதைக்கமுக

அழகு புயமொடணை யினபங் களித்துமகிழ்

அரிய மயிலயில்கொ டிந்தம் பலத்தின்மகிழ் பெருமாளே

</p><p align="JUSTIFY"> </p><p align="JUSTIFY"><iframe height="250" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/228327245&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="75%" /></p><p> </p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.