முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 31

அருணகிரிநாதரின் சந்தவினோதங்கள், ஜாலங்களின் முதற்படியை இன்று அறிமுகம் செய்கிறோம்.

Updated On : 19 அக்டோபர், 2015 at 3:19 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:29 PM

அருணகிரிநாதரின் சந்தவினோதங்கள், ஜாலங்களின் முதற்படியை இன்று அறிமுகம் செய்கிறோம். திருப்புகழ் அன்பர்களுக்கென்று தனியான சில ‘பரிபாஷை’ போன்றதான செல்லப் பெயர்கள் வழக்கத்தில் இருப்பதுண்டு. அவர்களுடைய அன்புரிமையால் யாப்பில் பல அங்கங்களுக்குப் பலவிதமான செல்லப் பெயர்களும் உலவுவது உண்டு. ஒவ்வொரு தாளக்கட்டிலும், சந்தம் மாறும் இடத்தை, உதாரணத்துக்கு,

தனன தனதனன தந்தந் தனத்ததன

 தனன தனதனன தந்தந் தனத்ததன

Advertisement

 தனன தனதனன தந்தந் தனத்ததன தனதான

என்று சந்தம் அமைந்திருந்தால், அந்தக் கடைசி தனதான-வுக்கு யாப்பில் தனிச்சொல் என்று சொல்வது வழக்கம். திருப்புகழ் அன்பர்கள் இதைத் ‘தொங்கல்’ என்பார்கள். அச்சு அமைப்பு முறையில் அது தனியாகத் தொங்குகிறதல்லவா, அதனால் இது தொங்கல். இன்றைய பாடல், அந்த வகையில் திருப்புகழ் அன்பர்களால் கலப்பு சந்தம் என்று அழைக்கப்படுகிறது.

ஓரடியில் பத்துவகையான சந்தங்கள் மாறும்படியான பூதபேதாள வகுப்பைப் பற்றிச் சொன்னோம். அதெற்கெல்லாம் ஆரம்பநிலைச் சந்தம் இது. ஓரடிக்குப் பதினெட்டு சீர்கள்; முதல் ஏழு சீர்களுக்கு ஒரு சந்தம்; அடுத்த நான்கு சீர்களுக்கு ஒரு சந்தம்; தொடரும் ஏழு சீர்களுக்குச் சற்று விரைவான சந்தம். இப்படி அடிக்கு மூன்று சந்தங்களை உள்ளடக்கிய பாடல் இது.

இந்தப் பாடல் திருவேங்கடத் திருப்புகழ் வரிசையில் ஒன்று. அருணகிரிநாதர் பாடியுள்ள திருவேங்கடத் திருப்புகழே திருப்பதி, முருகன் ஆலயமாக இருந்ததற்கான சான்றுகளில் ஒன்று என்று சொல்பவர்கள் உண்டு. ஆனால் உரையாசிரியர் தணிகைமணி வ.சு.செங்கல்வராய பிள்ளை இதை மறுக்கிறார். அருணகிரிநாதர் காலத்தில் திருப்பதியில் விஷ்ணுவுக்குத் தனியாகவும், முருகனுக்குத் தனியாகவும் ஆலயங்கள் இருந்திருக்க வேண்டும் என்று சொல்லி, ‘இபமாந்தர் சக்ர பதிசெறி’ என்ற திருவாஞ்சியத் திருப்புகழில்,

உலகீன்ற பச்சை யுமையணன்

வடவேங்க டத்தி லுறைபவ

னுயர்சார்ங்க சக்ர கரதலன் ...... மருகோனே

என்று ‘உலகை ஈன்றவளான உமைக்கு அண்ணனும், திருப்பதியில் உறைபவனுமான சார்ங்க வில்லையும் சக்ராயுதத்தையும் வைத்திருப்பவனுடைய மருமகனே’ என்று அருணகிரிநாதரே பாடியிருப்பதால், திருவேங்கடத் திருப்புகழ் வரிசையில் சொல்லப்படும் முருகன் ஆலயம் நிச்சயமாக வேறு என்பதை நிறுவுகிறார்.

தணிகைமணி காலத்தில் அடையாளம் காணப்படாமலிருந்த அந்த திருப்பதி முருகன் ஆலயம் இதுதான் என்று சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை, (சேலம்) வெளியிட்டுள்ள திருப்புகழ்ப் பதிப்பு அந்த முருகன் ஆலயத்தை அடையாளப்படுத்துகிறது. “திருப்பதி என்று பிரபலமான திருவேங்கட மலை ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ளது. இங்கு மலைப்பாதையில் கபிலேச்வரர் காமாட்சியம்பிகை திருக்கோயில் உள்ளது. (இதில்) ஆறுமுகப் பெருமான் மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருபுறம் வள்ளி தேவசேனை சமேதராகக் காட்சியளித்து அடியார்களுக்கு வேண்டிய வரங்களை அருளுகின்றார்” என்று மிகத் தெளிவாக இந்தப் பதிப்பில் குறிப்பிட்டுள்ளனர். எனவே அன்பர்கள் திருவேங்கடத் திருப்புகழ் விஷயத்தில், அருணகிரிநாதர் பாடுவது எந்த ஆலயத்தை என்று மனத்தில் கொள்ள வேண்டும். இப்போது பாடலைப் பார்ப்போம்.

எல்லாத் திருப்புகழ்ப் பாடல்களையும் போலவே இதற்கும் அடிக்கு இத்தனை எழுத்து என்று கணக்குண்டு. இந்தப் பாடலுக்கான எழுத்துக் கணக்கைப் போட்டுக் காட்டுகிறேன். ஏழுசீர்களை உடைய முதல் சந்தத்தைக் கொண்ட அடித் துணுக்குக்கு 16 எழுத்துகள்; நான்கு சீர்களைக் கொண்ட அடுத்த அடித் துணுக்குக்கு 13 எழுத்துகள்; இவற்றைத் தொடரும் அடுத்த ஏழுசீர்களுக்கு 28 எழுத்துகள். ஆகமொத்தம் ஓரடிக்கு 57 எழுத்துகள். இப்படி எட்டடிகளைக் கொண்ட மொத்தப் பாடலிலும் உள்ள (ஒற்றொழித்த மற்ற) எழுத்துகள் 456. எண்ணிக் கணக்குப் போட்டுப் பார்த்துக்கொள்ளலாம்.

 தத்தத் தத்தத் தத்தத் தத்தத்

 தத்தத் தத்தத் தனதான

 தனத்த தனத்த தனத்த தனத்தன

 தனதன தனதன தனதன தனதன

 தனதன தனதன தனதான

 பாடல்

நெச்சுப் பிச்சிப் புட்பத் தட்பக்

 கச்சிக் கச்சுற் றறன்மேவி

 நெறித்து வெறித்து இருட்டை வெருட்டிய

 நிரைதரு மருமலர் செருகிடு பரிமள

 நிறையுறை மதுகர நெடிதாடி

நிச்சிக் கச்சப் பட்டுச் சிக்கற்

 றொப்புக் கொப்புக் குயர்வாகி

 நெளித்த சுளித்த விழைக்கு ளழைத்துமை

 நிகரென வகருவு முகுபுகை தொகுமிகு

 நிகழ்புழு கொழுகிய குழன்மேலும்

வச்ரப் பச்சைப் பொட்டிட் டப்பொட்

 டுக்குட் செக்கர்ப் ப்ரபைபோல

 வளைத்த தழைத்த பிறைக்கு முறைக்குமன்

 மதசிலை யதுவென மகபதி தனுவென

 மதிதில தமும்வதி நுதன்மேலும்

மச்சச் செச்சைச் சித்ரச் சத்ரப்

 பொற்பக் கத்திச் சையனாகி

 மனத்தி னனைத்து மணைத்த துணைப்பத

 மலரல திலைநிலை யெனமொழி தழியமெய்

 வழிபட லொழிவனை யருள்வாயே

நச்சுத் துச்சொப் பிச்சுக் குட்டத்

 துட்டக் கட்டத் தசிகாண

 நடத்தி விடத்தை யுடைத்த படத்தினில்

 நடநவில் கடலிடை யடுபடை தொடுமுகில்

 நகைமுக திருவுறை மணிமார்பன்

நத்தத் தைச்சக் ரத்தைப் பத்மத்

 தைக்கைப் பற்றிப் பொருமாய

 னரிக்கு மரிக்கு மெரிக்கும் விருப்புற

 நசிதரு நிசிசர ருடகுட லிடல்செய்த

 நரகரி யொருதிரு மருகோனே

கச்சுத் தச்சுப் பொற்கட் டிட்டுப்

 பட்டுக் குட்பட் டமுதாலுங்

 கருப்பி ரசத்து முருச்செய் துவைச்சிடு

 கனதன பரிமள முழுகுப னிருபுய

 கனகதி வியமணி யணிமார்பா

கைச்சத் திக்குக் கெற்சித் தொக்கப்

 பட்சிக் கக்கொட் டசுராதி

 கறுத்த நிறத்த அரக்கர் குலத்தொடு

 கறுவிய சிறியவ கடவைகள் புடைபடு

 கடவட மலையுறை பெருமாளே

<br /> </p><p align="center"> </p><p align="center"><iframe src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/228353506&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" style="width: 387px; height: 256px" /></p><p align="justify"> </p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.