முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 226

ஒருசிறு நீர்த்திவலையாகத் தொடங்கும் மனிதனுடைய வாழ்க்கை முடிவில் ஒருபிடி சாம்பலாகவோ, ஆறடி மண்ணாகவோ முடியும் ஆச்சரியமும், இப்படியொரு உருமாற்றமும்

Updated On : 29 ஏப்ரல், 2016 at 11:01 AM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:38 PM

ஒருசிறு நீர்த்திவலையாகத் தொடங்கும் மனிதனுடைய வாழ்க்கை முடிவில் ஒருபிடி சாம்பலாகவோ, ஆறடி மண்ணாகவோ முடியும் ஆச்சரியமும், இப்படியொரு உருமாற்றமும் உடல் வளர்ச்சியும் உயிர்வாழ்க்கையும் உடலின் அழிவும் எதற்காக என்ற மிகப்பெரிய கேள்வியும் எல்லா ஞானியரையும் யோசிக்கச் செய்திருக்கின்றன.  இப்படித்தான் பட்டினத்தார்

ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி
இன்ப சுகம் தரும் அன்பு பொருந்தி
உணர்வு கலங்கி ஒழுகிய விந்து
ஊறு சுரோணித மீது கலந்து
பனியிலோர் பாதி சிறு துளி மாது
பண்டியில் வந்து புகுந்து திரண்டு
பதுமரரும்பு கமடம் இதென்று
பார்வைமெய் வாய்செவி கால்கைகள் என்ற
உருவமும் ஆகி உயிர் வளர் மாதம்
ஒன்பதும் ஒன்றும் நிறைந்து மடந்தை
உதரமகன்று புவியில் விழுந்து
யோகமும் வாரமும் நாளும் அறிந்து….

என்று தன்னுடைய உடற்கூறு வண்ணத்தில் பாடுகிறார்.  இதை பத்திரகிரியாருடைய பாடல் என்போர்களும் உண்டு. 

Advertisement

இன்றைய சிதம்பரம் திருப்புகழும் இதைத்தான் கேட்கிறது.  இதைக் கேள்வியென்றும் தேடலென்றும் காண்பது நாம்தான்.  அவர்கள் தெளிவாகத்தான் இருந்திருக்கிறார்கள்.  பிறப்பும் உன் வசத்தில் இல்லை, இறப்பும் உன் வசத்தில் இல்லை.  இருக்கும் சிலநாட்களில் உன் வசத்துக்குட்பட்டவை அதிலும் சில நாட்களே.  இந்த வெகுசில நாட்களை வீணடித்துவிடாமல் கவனமாக இருந்துகொள் என்றும், இனி இப்படியொரு பிறவிச் சுழல் தொடராமல் மீள்வதற்கான வழிவகைகளை இப்போதிலிருந்தே செய்யத் தொடங்கு என்று நமக்கு இவர்கள் எச்சரிக்கை மணியை ஒலிக்கிறார்கள்.  அதுவும் இந்தப் பாடலில் இடம் பெறும் முருகன் சதுமுகனை நான்கு தலைகளும் தெறித்துவிடும்படிக் குட்டி அறிவுறுத்தியவன்! 

சிதம்பரத்துக்குப் புலியூர் என்றும் பெயருண்டு என்பதை இப்பாடல் தெளிவாக்குகிறது.  பாடலைப் பார்ப்போம்.


தனனா தத்தன தனனா தத்தன
தனனா தத்தன              தனதான

பனிபோ லத்துளி சலவா யுட்கரு
   பதின்மா தத்திடை         தலைகீழாய்ப்
படிமே விட்டுடல் தவழ்வார் தத்தடி
   பயில்வா ருத்தியில்        சிலநாள்போய்த்
தனமா தர்க்குழி விழுவார் தத்துவர்
   சதிகா ரச்சமன்            வருநாளிற்
றறியா ரிற்சடம் விடுவா ரிப்படி
   தளர்மா யத்துய           ரொழியாதோ
வினைமா யக்கிரி பொடியா கக்கடல்
   விகடா ருக்கிட            விடும்வேலா
விதியோ னைச்சது முடிநால் பொட்டெழ
   மிகவே குட்டிய            குருநாதா
நினைவோர் சித்தமொ டகலா மற்புகு
   நிழலாள் பத்தினி           மணவாளா
நிதியா மிப்புவி புலியூ ருக்கொரு
   நிறைவே பத்தர்கள்         பெருமாளே.

</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/261452372&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.