முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 343

பெரிய துன்பத்தை உண்டாக்குவதாகிய பிற நோய்கள்,

Updated On : 12 அக்டோபர், 2016 at 3:38 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:41 PM

பதச் சேதம்

சொற் பொருள்

இருமல் உரோகம் முயலகன் வாதம் எரி குண நாசி விடமே

Advertisement

 

உரோகம்: ரோகம், நோய்; முயலகன்: முசல் வலிப்பு (அ) காக்கை வலிப்பு; வாதம்: வாயு சம்பந்தமான நோய்கள்; எரிகுண நாசி: மூக்கெரிச்சல்;

நீர்இழிவு விடாத தலைவலி சோகை எழு களம் மாலை இவையோடே

 

நீரிழிவு: சர்க்கரை நோய்; சோகை: இரத்தக் குறைவு, அனீமியா; களம்: கழுத்து; களமாலை: கழுத்தைச் சுற்றி வீக்கம்—கண்டக் கழலை, Goitre;

பெரு வயிறு ஈளை எரி குலை சூலை பெரு வலி வேறும் உள நோய்கள்

 

பெருவயிறு: மகோதரம்; ஈளை: கோழை, இழுப்பு; எரிகுலை: எரிகின்ற குலை—நெஞ்செரிச்சல்; சூலை: வயிற்று உளைச்சல்; பெருவலி: பெரிய வலியைத் தரும் எல்லா நோய்களும்;

பிறவிகள் தோறும் எனை நலியாத படி உன(து) தாள்கள் அருள்வாயே

 

நலியாதபடி: நலிக்காதபடி, வருத்தாதபடி; உனதாள்கள்: உனது தாள்கள்;

வரும் ஓரு கோடி அசுரர் பதாதி மடிய அநேக இசை பாடி

 

பதாதி: காலாட்படை;

வரும் ஒரு கால வயிரவர் ஆட சுடர் வேலை விடுவோனே

 

காலவயிரவர்: காலபைரவர்;

தரு நிழல் மீதில் உறை முகில் ஊர்தி தரு திரு மாதின் மணவாளா

 

தரு: கற்பக மரம்; முகில் ஊர்தி: மேகத்தை வாகனமாகக் கொண்டவன்—இந்திரன்; முகிலூர்தி தருதிருமாது: தேவானை;

சலம் இடை பூவின் நடுவினில் வீறு தணி மலை மேவும் பெருமாளே.

 

சலம்: ஜலம், நீர், கடல்; பூவின்: பூமியின்; வீறு: சிறப்பு(பெற்ற);

இருமலு ரோக முயலகன் வாதம் ... இருமலாகிய நோய்; முயலகன் எனப்படும் காக்கை வலிப்பு; வாயுவினால் ஏற்படும் நோய்கள்;

எரிகுண நாசி விடமே நீரிழிவு ... மூக்கெரிச்சல்; விஷ நோய்கள்; நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய்;

விடாத தலைவலி சோகை ... இடைவிடாத தலைவலி; ரத்த சோகை;

எழு களமாலை யிவையோடே ... கழுத்தைச் சுற்றி மாலையைப்போல் எழுகின்ற கழலைப் புண் முதலியவற்றுடன்,

பெருவயி றீளை யெரிகுலை சூலை ...பெருவயிறு எனப்படும் மகோதரம்; (நுரையீரலில்) கபம்; நெஞ்செரிச்சல்; வயிற்று உளைச்சல், வலி;

பெருவலி வேறுமுளநோய்கள் ... பெரிய துன்பத்தை உண்டாக்குவதாகிய பிற நோய்கள்,

பிறவிகள் தோறு மெனைநலி யாதபடி உன தாள்கள் அருள்வாயே... ஒவ்வொருமுறை பிறவியெடுக்கும்போதும் என்னைப் பீடித்து வாட்டாதபடி உன்னுடைய திருவடிகளால் காத்தருள வேண்டும்.

வருமொரு கோடி யசுரர்பதாதி மடிய ... எதிர்த்துவந்த அசுரர்களின் கோடிக்கணக்கான காலாட்படைகள் மடியும்படியும்;

அநேக இசைபாடி வருமொரு கால வயிரவ ராட ... (வீரம் நிறைந்த) பல பாடல்களைப் பாடியபடி காலபைரவரான சிவபெருமான் (போர்க்களத்தில்) நடனமாடவும்;

வடிசுடர் வேலை விடுவோனே ... ஒளிவீசும் கூர்மையான வேலை வீசியவனே!

தருநிழல் மீதிலுறைமுகிலூர்தி ... கற்பக மரங்களின் நிழலில் வீற்றிருக்கும் மேகவாகனனாகிய இந்திரன்,

தருதிரு மாதின் மணவாளா ... வளர்த்த அழகிய மகளான தேவானையின் மணாளனே!

சலமிடை பூவின்நடுவினில் வீறு ... கடலால் சூழப்பட்ட இந்த பூமியின் நடுவினிலே சிறப்போடு விளங்குவதான,

தணிமலை மேவு பெருமாளே. ... திருத்தணிகை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே!

சுருக்க உரை

எதிர்த்து வந்த அசுரர்களின் கோடிக்கணக்கான காலாட் படைகள் மடியும்படியாக; பலவகையான வீர கீதங்களைப் பாடிக்கொண்டு காலபைரவ மூர்த்தியான சிவனார் போர்க்களத்தில் நடனமாடும்படி ஒளிபொருந்தியதும் கூர்மையானதுமான வேலாயுதத்தை வீசியவனே!  கற்பக மரங்களின் நிழலிலே தங்குபவனும், மேகத்தை வாகனமாகக் கொண்டவனுமான இந்திரன் வளர்த்த தேவானையின் மணாளனே!  கடலால் சூழப்பட் இந்த பூமியின் நடுவில் சிறப்புற்று விளங்குவதான திருத்தணிகை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே!

இருமல், வலிப்பு, வாத நோய்கள், மூக்கெரிச்சல், நீரிழிவு, மாறாத தலைநோவு, ரத்தசோகை, கழுத்தைச் சுற்றிலும் ஏற்படும் கழலைக் கட்டி, மகோதரம், கபம், நெஞ்செரிச்சல், வலியைத் தரும் மற்ற பெரிய நோய்கள் முதலான இவை என்னை ஒவ்வொரு பிறவியிலும் பீடித்து வாட்டாதபடி உன் திருப்பாதங்களின் அருளைத் தந்தருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.