பகுதி - 432
இந்தப் பாடல் பழநித் திருத்தலத்துக்கானது.
‘அடியேனை அடிமை கொண்டு ஆள வரவேண்டும்’ என்று கோரும் இந்தப் பாடல் பழநித் திருத்தலத்துக்கானது. பிறவியே வேண்டாம்; இருந்தாலும் பிறவி எடுக்கத்தான் வேண்டுமென்றால் ‘இன்னின்ன குறைகள் இல்லாமல் பிறந்து, அந்தப் பிறவியிலேனும் அடியேனுக்கு நற்குடிப் பிறப்பும் அறிவும் நீதி ஒழுக்கமும் அமைந்து என்னை அடிமை கொள்வதற்காக வந்தருள வேண்டும்’ என்று கேட்கிறார்.
அமைப்பு முறையில் அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகள்; தொங்கல் சீரை ஒழித்து மற்ற அத்தனைச் சீர்களிலும் குற்றெழுத்துகளால் அமைந்த பாடல்.
தனன தனன தனன தனன
தனன தனன தனதான
திமிர வுததி யனைய நரக
செனன மதனில் - விடுவாயேல்
செவிடு குருடு வடிவு குறைவு
சிறிது மிடியு - மணுகாதே
அமரர் வடிவு மதிக குலமு
மறிவு நிறையும் - வரவேநின்
அருள தருளி யெனையு மனதொ
டடிமை கொளவும் - வரவேணும்
சமர முகவெ லசுரர் தமது
தலைக ளுருள - மிகவேநீள்
சலதி யலற நெடிய பதலை
தகர அயிலை - விடுவோனே
வெமர வணையி லினிது துயிலும்
விழிகள் நளினன் - மருகோனே
மிடறு கரியர் குமர பழநி
விரவு மமரர் பெருமாளே.
Advertisement