பகுதி - 441
கவிதை புனைந்து கருமிகளைப் பாடி
பதச் சேதம் | சொற் பொருள் |
நிதிக்கு பிங்கலன் பதத்துக்கு இந்திரன் நிறத்தில் கந்தன் என்று இனைவோரை Advertisement
| பிங்கலன்: குபேரன்; பதத்துக்கு: பதவிக்கு; நிறம்: ஒளி, தேஜஸ்; இனைவோரை: இப்படிப் பட்டவர்களை (இங்கே லோபிகளை என்று பொருள் கொள்ள வேண்டும்); |
நிலத்தில் தன் பெரும் பசிக்கு தஞ்சம் என்று அரற்றி துன்ப நெஞ்சினில் நாளும்
| |
புது சொல் சங்கம் ஒன்று இசைத்து சங்கடம் புகட்டி கொண்டு உடம்பு அழி மாயும்
| சங்கம்: கூட்டம்; புகட்டிக் கொண்டு: வரவழைத்துக் கொண்டு; உடம்பழி: உடம்பை அழித்துக்கொண்டு; |
புலத்தில் சஞ்சலம் குலைந்திட்டு உன் பதம் புணர்க்கைக்கு அன்பு தந்து அருள்வாயே
| புலத்தில்: ஐம்புலன்களால்; புணர்க்கைக்கு: சேர்வதற்கு; |
மதித்து திண் புரம் சிரித்து கொன்றிடும் மறத்தில் தந்தை மன்றினில் ஆடி
| மதித்து: நினைத்து, கருதி; மறத்தில் தந்தை: வீரம் செறிந்த தந்தை; |
மழு கை கொண்ட சங்கரர்க்கு சென்று வண் தமிழ் சொல் சந்தம் ஒன்று அருள்வோனே
| மழு: பரசு, கோடரி; சந்தம் ஒன்று அருள்வோனே: சந்தம் நிறைந்ததான தேவாரப் பாடலை (ஞானசம்பந்தராக வந்து) அளித்தவனே (பிரணவத்தை உபதேசித்தவனே என்றும் சொல்லலாம். ஆனால் அது வலிந்த பொருளாகப் படுகிறது); |
குதித்து குன்று இடந்து அலைத்து செம் பொ(ன்)னும் கொழித்து கொண்ட செந்திலின் வாழ்வே
| இடந்து: பெயர்த்து; |
குற பொன் கொம்பை முன் புலத்தில் செம் கரம் குவித்து கும்பிடும் பெருமாளே.
| கொம்பை: பூங்கொம்பு போன்றடட |
நிதிக்குப் பிங்கலன் பதத்துக்கு இந்திரன் நிறத்திற் கந்தனென்று இனைவொரை... செல்வத்தில் குபேரென்றும்; வகிக்கும் பதவியில் இந்திரனென்றும்; தேஜஸில் முருகனென்றும் கருமிகளிடத்தில் சென்று,
நிலத்திற் றன்பெரும் பசிக்கு தஞ்சமென்றரற்றி துன்பநெஞ்சினில்... இவ்வுலகிலே எனக்கு ஏற்படும் பசியைப் போக்குவதற்கு அவர்களே புகலிடம் என்று வாய்விட்டு அரற்றிப் புலம்பி துன்பம் நிறைந்த இந்த நெஞ்சாலே,
நாளும் புதுச்சொற் சங்கமொன் றிசைத்து சங்கடம் புகட்டிக் கொண்டு உடம்பழிமாயும்... அனுதினமும் புதிய புதிய சொற்களின் கூட்டத்தால் கவிதை இயற்றி, இப்படிப்பட்ட சங்கடத்தை வரவழைத்துக்கொண்டு என் உடலை அழித்துக்கொண்டு வீணே மாய்கின்ற என்னை,
புலத்திற் சஞ்சலங் குலைத்திட்டு உன்பதம் புணர்க்கைக்கு அன்புதந்தருள்வாயே... ஐம்புலன்களால் ஏற்படும் துன்பங்களை அழித்து, உன் திருவடிகளைச் சேர்வதற்கான அன்பைத் தந்தருள வேண்டும்.
மதித்துத் திண்புரஞ் சிரித்துக் கொன்றிடும் மறத்திற் றந்தை மன்றினிலாடி... வலிய திரிபுரங்களை மனத்தாலே நினைத்து, அவற்றைச் சிரித்தே எரித்த வீரம் செறிந்த தந்தையும்; அம்பலத்தில் நடனமாடுபவரும்;
மழுக்கைக் கொண்டசங்கரர்க்குச் சென்று வண்டமிழ்ச்சொற் சந்தமொன்று அருள்வோனே... மழு ஆயுதத்தைக் கையிலே ஏந்தியவருமான சங்கரருக்கு, வளமான சந்தங்களால் அமைந்த தேவாரப் பண்ணை (ஞானசம்பந்தராக அவதரித்து) சமர்ப்பித்தவனே!
குதித்துக் குன்று இடந்து அலைத்து செம்பொனுங் கொழித்துக் கொண்ட செந்திலின்வாழ்வே... குதித்து எழுகின்ற அலைகள், குன்றுகளைப் பெயர்த்துப் புரட்டிப் போட்டும்; செம்பொன்னைக் கொழித்து, கரையிலே தள்ளுகின்ற திருச்செந்தூர்த் தலத்தில் வாழ்பவனே!
குறப்பொற் கொம்பை முன் புனத்திற் செங்கரங் குவித்துக் கும்பிடும் பெருமாளே... குறப்பெண்ணும் பூங்கொம்பு போன்றவளுமான வள்ளியை முன்னொரு நாளில் (அவளிருக்கும்) தினைப்புனத்துக்குச் சென்று சிவந்த கைகளைக் கூப்பிக் கும்பிட்ட பெருமாளே!
சுருக்க உரை
வலிய திரிபுரங்களை மனத்தால் கருதி, ஒரு சிரிப்பாலே அழித்தவரும்; அம்பலத்தில் ஆடுபவரும்; கோடரியை ஆயுதமாக ஏந்தியவருமான சங்கரனுக்கு வளமான சந்தங்களால் அமைந்த தேவாரப் பண்ணை ஞானசம்பந்தராக அவதரித்து அர்ப்பணித்தவனே! குதித்தெழும்பும் அலைகள், குன்றுகளைப் பெயர்த்துப் புரட்டிப் போட்டும், செம்பொன்னைக் கொழித்துக் கரையிலே ஒதுக்குவதுமான திருச்செந்தூரிலே வீற்றிருப்பவனே! பூங்கொம்பைப் போன்ற குறப்பெண்ணான வள்ளி இருந்த தினைபுனத்துக்கு முன்னொரு காலத்தில் சென்று உன் சிவந்த கைகளைக் குவித்து அவளைக் கும்பிட்ட பெருமாளே!
செல்வத்தில் குபேரனென்றும்; பதவியில் இந்திரன் என்றும்; தேஜஸில் முருகனென்றும்; என்னுடைய பெரும் பசிக்கு உணவளிப்பதற்கான புகலிடம் நீரே என்றும் முறையிட்டு; துன்பம் நிறைந்த இந்த நெஞ்சிலே உதிக்கின்ற புதிய சொற்களால் கவிதை புனைந்து கருமிகளைப் பாடி, சங்கடத்தை வரவழைத்துக் கொண்டு உடலை வீணே அழித்துக்கொண்டு மாயாமல்; ஐம்புலன்களால் வரும் சஞ்சலங்களைத் தொலைத்து உன்னுடைய திருவடியை நான் அடைவதற்குத் தேவையான உன்னுடைய அன்பை அடியேனுக்குத் தந்தருள வேண்டும்.