பகுதி - 526
மாதர்மேல் வைத்த மயக்கம் கெடும்படி
மாதர்மேல் வைத்த மயக்கம் கெடும்படி வேண்டுகின்ற இந்தப் பாடல் அருக்கோண மலை என்னும் தலத்துக்கானது. இது இலங்கையில் கதிர்காமத்துக்கு அருகிலுள்ள தலம் எனத் தெரிய வருகிறது. இராமயண நிகழ்வுகளைக் குறிப்பிடும் பாடல்களில் இதுவும் ஒன்று. இதில் தாடகை வதம், விசுவாமித்திரரின் வேள்வியைக் காத்தது, வில்லை முறித்து ஆகிய நிகழ்வுகள் பேசப்படுகின்றன.
அடிக்கு ஒற்றொழித்து 40 எழுத்துகள் உள்ள பாடல். ஒவ்வொரு சீரிலும் மூன்று மூன்று எழுத்துகள் இருந்தாலும் அதற்குள்ளேயும் வேறுபாடு அமைந்திருக்கிறது. 1, 3, 5, 7, 9, 11 ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும், மூன்றாவது எழுத்தாகக் கணக்கில் சேராத வல்லொற்றும் உள்ளன; 2, 4, 6, 8, 10, 12 ஆகிய சீர்களில் உள்ள மூன்றெழுத்துகளில் முதலெழுத்து நெடில்; மற்ற இரண்டும் குறில்.
தனத்த தானன தனத்த தானன
தனத்த தானன தனத்த தானன
தனத்த தானன தனத்த தானன தனதான
தொடுத்த வாளென விழித்து மார்முலை
யசைத்து மேகலை மறைத்து மூடிகள்
துடித்து நேர்கலை நெகிழ்த்து மாவியல் கொளுமாதர்
சுகித்த ஹாவென நகைத்து மேல்விழு
முடித்த வார்குழல் விரித்து மேவிதழ்
துவர்த்த வார்சுரு ளடக்கி மால்கொடு வழியேபோய்ப்
படுத்த பாயலி லணைத்து மாமுலை
பிடித்து மார்பொடு மழுத்தி வாயிதழ்
கடுத்து நாணம தழித்த பாவிகள் வலையாலே
பலித்து நோய்பிணி கிடத்து பாய்மிசை
வெளுத்து வாய்களு மலத்தி னாயென
பசித்து தாகமு மெடுத்து டாவுயி ருழல்வேனோ
வெடுத்த தாடகை சினத்தை யோர்கணை
விடுத்து யாகமும் நடத்தி யேயொரு
மிகுத்த வார்சிலை முறித்த மாயவன் மருகோனே
விதித்து ஞாலம தளித்த வேதனை
யதிர்த்து வோர்முடி கரத்து லாயனல்
விழித்து காமனை யெரித்த தாதையர் குருநாதா
அடுத்த ஆயிர விடப்ப ணாமுடி
நடுக்க மாமலை பிளக்க வேகவ
டரக்கர் மாமுடி பதைக்க வேபொரு மயில்வீரா
அறத்தில் வாழுமை சிறக்க வேயறு
முகத்தி னோடணி குறத்தி யானையொ
டருக்கொ ணாமலை தருக்கு லாவிய பெருமாளே.
Advertisement