பகுதி - 528
இப்பாடல் பழநித் தலத்துக்கானது
‘உன்னை வணங்க அருள்புரிய வேண்டும்’ என்ற கோரிக்கையோடு, எந்தெந்த வகையான நிலைமைகள் வாய்க்கப்பெற்று வணங்க வேண்டும் என்றும் பட்டியலிடும் இப்பாடல் பழநித் தலத்துக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 31 எழுத்துகளைக் கொண்ட பாடல்; ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்கள் ஒற்றொழித்து ஐந்து குற்றெழுத்துகளையும், மூன்றாவது எழுத்தாக (கணக்கில் சேராத) வல்லொற்றையும் கொண்டவை; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்கள் ஒரு நெடிலும் ஒரு குறிலுமாக இரண்டெழுத்துகளைக் கொண்டவை; மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்கள் இரண்டு குற்றெழுத்துகளையும்; இரண்டுக்கும் இடையில் ஒரு மெல்லொற்றையும் கொண்டவை.
தனத்ததன தான தந்த தனத்ததன தான தந்த
தனத்ததன தான தந்த தனதான
மனக்கவலை யேது மின்றி உனக்கடிமை யேபு ரிந்து
வகைக்குமநு நூல்வி தங்கள் தவறாதே
வகைப்படிம னோரதங்கள் தொகைப்படியி னால்நி னைந்து
மயக்கமற வேத முங்கொள் பொருள்நாடி
வினைக்குரிய பாத கங்கள் துகைத்துவகை யால்நி னைந்து
மிகுத்தபொரு ளாக மங்கள் முறையாலே
வெகுட்சிதனை யேது ரந்து களிப்பினுட னேந டந்து
மிகுக்குமுனை யேவணங்க வரவேணும்
மனத்தில்வரு வோனெ என்று னடைக்கலம தாக வந்து
மலர்ப்பதம தேப ணிந்த முநிவோர்கள்
வரர்க்குமிமை யோர்க ளென்பர் தமக்குமன மேயிரங்கி
மருட்டிவரு சூரை வென்ற முனைவேலா
தினைப்புனமு னேந டந்து குறக்கொடியை யேம ணந்து
செகத்தைமுழு தாள வந்த பெரியோனே
செழித்தவள மேசி றந்த மலர்ப்பொழில்க ளேநி றைந்த
திருப்பழநி வாழ வந்த பெருமாளே.
Advertisement