பகுதி - 442
இந்தப் பாடலும் திருச்செந்தூர்த் தலத்துக்கானதுதான்.
'உன் மலர்ப்பாதங்களை அளித்தருள வேண்டும்’ என்ற இறைவனைக் கேட்கும் இந்தப் பாடலும் திருச்செந்தூர்த் தலத்துக்கானதுதான்.
அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளை உடைய பாடல். ஒன்று மூன்று ஐந்து ஆகிய சீர்களில் மூன்றாம் எழுத்து நெடில்; ஐந்தாம் எழுத்து வல்லொற்று; நெடிலுடன் கூடிய சீரை மூன்று குறிலெழுத்துகளை உடைய சீர் மாறி மாறித் தொடர்வதால் ஓசையின்பம் சிறக்கிறது.
தனனாத் தனன தனனாத் தனன
தனனாத் தனன தனதான
Advertisement
நிலையாப் பொருளை யுடலாக் கருதி
நெடுநாட் பொழுது மவமேபோய்
நிறைபோய்ச் செவிடு குருடாய்ப் பிணிகள்
நிறைவாய்ப் பொறிகள் தடுமாறி
மலம்நீர்ச் சயன மிசையாப் பெருகி
மடிவேற் குரிய நெறியாக
மறைபோற் றரிய வொளியாய்ப் பரவு
மலர்தாட் கமல மருள்வாயே
கொலைகாட் டவுணர் கெடமாச் சலதி
குளமாய்ச் சுவற முதுசூதம்
குறிபோய்ப் பிளவு படமேற் கதுவு
கொதி வேற் படையை விடுவோனே
அலைவாய்க் கரையின் மகிழ்சீர்க் குமர
அழியாப் புநித வடிவாகும்
அரனார்க் கதித பொருள்காட் டதிப
அடியார்க் கெளிய பெருமாளே.