முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 459

தாமரை போன்றதும்; பரிசுத்தமானதும்;

Updated On : 23 ஜனவரி, 2017 at 12:38 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:18 PM

பதச் சேதம்

சொற் பொருள்

தமரும் அமரும் மனையும் இனிய தனமும் அரசும் அயலாக

Advertisement

 

தமரும்: உறவினர்களும்; அமரும்: இருக்கின்ற; மனையும்: இல்லமும்; அயலாக: விலகிப் போகும்படியாக;

தறுகண் மறலி முறுகு கயிறு தலையை வளைய எறியாதே

 

தறுகண்: கடுமை; மறலி: யமன்; முறுகு: வலிய; தலையை வளைய: தலையைச் சுற்றி;

கமல விமல மரகத மணி கனக மருவும் இரு பாதம்

 

கமல: தாமரை; விமல: தூய; மருவும்: ஒத்த;

கருத அருளி எனது தனிமை கழிய அறிவு தர வேணும்

 

தனிமை: ஆதரவற்ற நிலை;

குமர சமர முருக பரம குலவு பழநி மலையோனே

 

சமர: போரில் வல்லவனே;

கொடிய பகடு முடிய முடுகு குறவர் சிறுமி மணவாளா

 

பகடு: யானை(யை); முடிய: (தன் எண்ணம்) முடிய, நிறைவேற; முடுகு(ம்): செலுத்தும்;

அமரர் இடரும் அவுணர் உடலும் அழிய அமர் செய்து அருள்வோனே 

 

 

அறமும் நிறமும் அயிலும் மயிலும் அழகும் உடைய பெருமாளே.

 

அயிலும்: வேலும்;

தமரும் அமரு மனையும் இனிய தனமும் அரசும் அயலாக... உறவினர்களும் அவர்கள் கூடியிருக்கின்ற இல்லமும் இனியதான செல்வமும்; இவற்றை அனுபவிக்கும் உரிமையும் என்னைவிட்டு விலகிப் போகின்றபடியாக,

தறுகண் மறலி முறுகு கயிறு தலையை வளைய எறியாதே... கொடியவனான யமன் வலுவான பாசக் கயிற்றை என் தலையைச் சுற்றி விழுமாறு எறியாமல் இருக்க,

கமல விமல மரகதமணி கனக மருவும் இருபாதம்... தாமரையைப் போலவும்; பரிசுத்தமாகவும்; மரகதத்தையும் மணியையும் போலவும்; பொன்போலவும் (பிரகாசிக்கின்ற) உன்னுடைய திருவடிகளை,

கருத அருளி எனது தனிமை கழிய. அறிவு தரவேணும்.. எண்ணி தியானிக்கும்படியாக அடியேனுக்கு அருளி, என்னுடைய ஆதரவற்ற நிலைமை நீங்கும்படியாக அறிவைத் தந்தருள வேண்டும்.

குமர சமர முருக பரம குலவு பழநி மலையோனே... குமரனே!  போரில் வல்லவனே!  முருகனே!  பரமனே!  பழநி மலையில் விளங்குபவனே!

கொடிய பகடு முடிய முடுகு... (வள்ளி உன்னைத் தழுவிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம்) நிறைவேறும்படியாக கொடியதும் மதங்கொண்டதுமான யானையை (விநாயகனை) விரைவில் வரும்படியாகச் செலுத்தியவனே!

குறவர் சிறுமி மணவாளா... குறமகளான வள்ளியின் மணாளனே! 

அமரர் இடரும் அவுணர் உடலும் அழிய அமர் செய்தருள்வோனே... தேவர்கள் பட்ட துன்பமும்; அரக்கர்களுடைய உடலும் ஒரேசமயத்தில் அழியும்படியாக போர்புரிந்து அருளியவனே!

அறமும் நிறமும் அயிலும் மயிலும் அழகும் உடைய பெருமாளே... அறமும்; செந்நிறமும்; வேலும் மயிலும் அழகும் உடைய பெருமாளே!

சுருக்க உரை

குமரனே!  போரில் வல்ல முருகனே!  பரமனே!  பழனி மலையில் வீற்றிருப்பவனே!  (வள்ளியம்மை தானாக வந்து தழுவிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம்) நிறைவேறும்படியாக (விநாயகனான) மதங்கொண்ட யானையை அவரெதிரில் வந்து தோன்றும்படியாகச் செலுத்தியவனே!  தேவர்களுடைய துன்பமும் அசுரர்களுடைய உடலும் ஒரேசமயத்தில் அழியும்படியாகப் போர்புரிந்து அருளியவனே! தர்மமும் சிவந்த நிறமும் வேலும் மயிலும் அழகும் உடைய பெருமாளே!

உறவினர்களும்; அவர்கள் கூடியிருக்கிற இல்லமும்; செல்வ வளமும்; இவை அனைத்தையும் அனுபவிக்கும் உரிமையும் என்னைவிட்டு விலகிப் போகும்படியாக யமன் தன்னுடைய வலிய பாசக்கயிற்றை, என் தலையைச் சுற்றி விழுமாறு வீசாதபடி,

தாமரை போன்றதும்; பரிசுத்தமானதும்; பொன்போன்று அருமையானதுமான உன்னுடைய திருவடிகளை தியானிக்கின்ற அறிவை அடியேனுக்குத் தந்தருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.