முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 519

இருளை ஒத்த கரிய கூந்தலையும்

Updated On : 30 மார்ச், 2017 at 12:00 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:49 PM

பதச் சேதம்

சொற் பொருள்

அத் துகிரின் நல் அதரத்து அல் அன அளகத்து வளர் செய் புளகித

Advertisement

 

அத்: அந்த; துகிர்: பவளம்; அதரம்: உதடு—பவளம் போன்ற உதடு; அல்: இரவு, இருள்; அன: அன்ன, போன்ற; அளகத்து: புளகித(ம்): பெரு மகிழ்ச்சி;

பூதரத்து இரு கமல கரத்து இதயம் உருகி அத்தி இடன் உறையும் நெடு மாமரத்து

 

பூதரத்து: மலை போன்ற (எனவே ஆகுபெயராக மார்பகம்); கமல கரத்து: தாமரை போன்ற கைகளில்; அத்தி: கடல்; அத்தி இடனுறையும்: கடலிலே இருக்கும்; நெடு மாமரத்து: நீண்ட மாமரமான சூரன்;

மலர் கனி அலைத்து வரும் இடை தலத்து உரக சிகரி பகராதே

 

தலத்து: தலமாகிய; உரக: நாக; சிகரி: மலை; உரகசிகரி: நாக மலை, சர்ப்பகோத்ரம், திருச்செங்கோடு;

அத்தி மல உடல் நடத்தி எரி கொள் நிரையத்தின் இடை அடிமை விழலாமோ

 

அத்தி: எலும்பு; நிரையம்: நகரம்;

தத்து கவன அரிணத்து உபநிட விதத்து முநி உதவு மொழியால்

 

தத்து: தத்தும், வேகமுடைய; கவன: நடை(யையுடைய); அரிணம்: மான் இனம்; உபநிட விதத்து முனி: வேத உபநிடதங்களின் வழியில் நடக்கின்ற முனி (சிவமுனிவர்—வள்ளியின் தந்தையான திருமால்);

துத்தத்தை நறவை அமுதத்தை நிகர் குறவர் தத்தை தழுவிய ப(ன்)னிரு தோளா

 

துத்தத்தை: (துக்தம்-dugdha) பால், பாலை; நறவை: தேனை; தத்தை: கிளி(யான வள்ளி);

தத்து உததி துரகதத்து மிகு திதிசர் தத்து மலை அவுணர் குல நாகம்

 

தத்து உததி: அலைகள் தத்தும் (வீசும்) கடல்; துரகதத்து: குதிரைகளின்; திதிசர்: திதியின் (Diti) புதல்வரான அசுரர் (கஸ்யபருடைய மனைவியரான திதி பெற்றவர்கள் அசுரர்கள் முதலானோர், அதிதி பெற்றவர்கள் தேவர்கள், சூரியன் முதலானோர்.) மலை அவுணர்: மலையைப் போன்ற அரக்கர்களும்; குலநாகம்: குலவரை, பெரிய மலைகள் (நாகம்: பாம்பு, யானை, மலை என் பல பொருளை உடையது);

தத்த மிசை மரகத தமனிய மயில் தத்த விடும் அமரர் பெருமாளே.

 

தத்த: நடுங்கி ஒடுங்க; மரகத: பச்சை; தமனிய: பொன்; தத்தவிடும்: செலுத்தும்;

அத் துகிரின் நல் அதரத்து அல் அன அளகத்து... பவளத்தைப் போன்ற சிவந்த உதடுகளிலும்; இருட்டைப் போன்று கறுத்த கூந்தலிலும்;

வளர் செய் புளகித பூதரத்து இரு கமல கரத்து இதயம் உருகி... மகிழ்ச்சியை வளர்ப்பதான மார்பகத்திலும்; தாமரையை ஒத்த கைகளிலும் மனமுருகிப் போய்; (இதை ‘வரும் இடைத் தலத்து உரக சிகரி பகராதே’ என்ற பகுதியோடு கூட்ட வேண்டும்);

அத்தி இடன் உறையும் நெடு மாமரத்து மலர் கனி அலைத்து... கடலின் நடுவிலே நீண்ட மாமரமாக நின்றிருந்த சூரனிடத்திலே பூத்திருந்த பூவையும் பழத்தையும் கலக்கி; (சூரன் மாமரமாக நிற்கும்போது அவனிடம் பூத்தும் காய்த்தும் இருந்தனவற்றை அழித்து என்றால், சூரனைக் கொன்று என்பது பொருள்);

வரும் இடைத் தலத்து உரக சிகரி பகராதே... அதன்பிறகு வந்தமர்ந்த தலமாகிய சர்ப்பகோத்திரம் எனப்படும் திருச்செங்கோட்டை ஓதித் துதிக்காமல்;

அத்தி மல உடல் நடத்தி எரி கொள் நிரையத்தின் இடை அடிமை விழலாமோ... எலும்பையும் மலத்தையும் கொண்டிருக்கின்ற உடலைச் சுமந்தபடி, எரிகின்ற நரகத்திலே அடிமையாகிய நான் விழலாமா?  (விழாமல் ஆண்டுகொள்ள வேண்டும்).

தத்து கவன அரிணத்து உபநிட விதத்து முநி உதவு மொழியால்... வேகமான நடையை உடைய பெண்மானான இலக்குமியிடத்திலே, வேதங்களின் வழியிலே நடப்பவரான சிவமுனிவருடைய (சிவமுனிவராக வந்த திருமால்) சொல்லாலே (பிறந்தவளும்);

(தான் வைகுந்தத்துக்குப் போனபோது, சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்த திருமாலும் திருமகளும் தன்னை உடனடியாக கவனிக்கவில்லையென்று துர்வாசர் சபித்ததால் வள்ளிமலையில் திருமால் சிவமுனிவராகவும் திருமகள் மானாகவும் தோன்றி, சிவமுனிவர் மானைப் பார்த்த அளவிலே கருவுற்று, வள்ளியை ஈன்றதாகப் புராணச் செய்தி.)

துத்தத்தை நறவை அமுதத்தை நிகர் குறவர் தத்தை தழுவிய ப(ன்)னிரு தோளா... பாலையும் தேனையும் அமிர்தத்தையும் ஒத்தவளும்; குறக்குலத்தில் தோன்றிய கிளியானவளுமான வள்ளியை அணைத்த பன்னிரண்டு தோளனே!

தத்து உததி துரகதத்து மிகு திதிசர் தத்து மலை அவுணர் குல நாகம் தத்த... அலைவீசுகின்ற கடலைப் போன்ற குதிரைப் படையைச் செலுத்துகின்ற அசுரர்களும்; மலைபோன்ற அரக்கர்களும்; குலபர்வதங்கள் எட்டும் நடுங்கும்படியாக,

மிசை மரகதத் தமனிய மயில் தத்த விடும் அமரர் பெருமாளே.... (மரகத தமனிய மயில் மிசை என்று கூட்டுக) மரகதப் பச்சையும் பொன்னுமாய் மின்னும் மயிலின்மேல் ஏறி வருபவனே! தேவர்கள் பெருமாளே! 

சுருக்க உரை

வேதங்களின் வழி நடப்பவரான சிவமுனிவராகத் தோன்றிய திருமாலுக்கும் மான் வடிவத்தில் வந்த திருமகளுக்கும் பிறந்தவளும்; பாலையும் தேனையும் அமுதத்தையும் போன்றவளும்; குறவர் குலத்திலே தோன்றிய கிளி போன்றவளுமான வள்ளியை அணைத்த பன்னிரு தோளனே!  அலை வீசும் கடலைப் போன்ற குதிரைப் படைகளைச் செலுத்திக்கொண்டு வந்த அசுரர்களும் மலையைப் போன்ற அரக்கர்களும் குலபர்வதங்களும் நடுங்கும்படியாக பசும்பொன் மயிலின் மேலே அமர்ந்தபடி வருபவனே!  தேவர்கள் தலைவனே!

பவளத்தை ஒத்த உதடுகளையும்; இருளை ஒத்த கரிய கூந்தலையும்; மகிழ்ச்சியைத் தரவல்ல தனங்களையும் கொண்ட பெண்களிடம் மனமுருகி நின்று; கடல் நடுவே மாமரமாக நின்ற சூரனைக் கொன்று அதன்பின்னர் வந்து வீற்றிருக்கும் தலமான திருச்செங்கோட்டைப் பாடாமல்; எலும்மையும் மலத்தையும் கொண்ட உடலைச் சுமந்து திரியும் அடிமையான நான் எரியும் நரகத்தில் விழலாமோ?  (மோகத்தைக் கெடுத்து, திருச்செங்கோட்டைத் துதிக்கும் மனத்தைக் கொடுத்து, அடியேன் எரியும் நரகத்தில் விழாமல் தடுத்து அருளவேண்டும்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.