பகுதி - 546
மௌன நிலையை எய்தவேண்டும்
‘சும்மா இரு சொல்லற’ என்று உபதேசித்தருளிய அந்த மௌன நிலையை எய்தவேண்டும் என்று வேண்டுகின்ற இந்தப் பாடல் திருத்தணிகைக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளை உடைய பாடல். எல்லாச் சீர்களிலுமே மூன்று-மூன்று எழுத்துகளே இருந்தாலும் அவற்றுள் வேறுபாடு இருக்கிறது. ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் ஒற்றொழித்து மூன்றெழுத்துகள் உள்ளன. இவற்றில் மூன்றாவது எழுத்து மட்டும் நெடில்; கணக்கில் சேராத இரண்டாவதும் ஐந்தாவதமான எழுத்துகள் வல்லொற்று; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்கள் எந்த வகையான ஒற்றுமில்லாமல் மூன்று குற்றெழுத்துகளைக் கொண்டவை. சிக்கலான வகையுளிகளைக் கொண்ட பாடல்.
தத்தனாத் தனன தத்தனாத் தனன
தத்தனாத் தனன தனதான
தொக்கறாக் குடில சுத்தமேற் றசுக
துக்கமாற் கடமு மலமாயை
துற்றகாற் பதலை சொற்படாக் குதலை
துப்பிலாப் பலச மயநூலைக்
கைக்கொளாக் கதறு கைக்கொளாக் கையவ
லப்புலாற் றசைகு ருதியாலே
கட்டுகூட் டருவ ருப்புவேட் டுழல
சட்டவாக் கழிவ தொருநாளே
அக்கராப் பொடியின் மெய்க்கிடாக் குரவர்
அர்ச்சியாத் தொழுமு நிவனாய
அப்பபோர்ப் பனிரு வெற்பபூத் தணியல்
வெற்பபார்ப் பதிந திகுமாரா
இக்கணோக் குறில்நி ருத்தநோக் குறுத
வத்தினோர்க் குதவு மிளையோனே
எத்திடார்க் கரிய முத்தபாத் தமிழ்கொ
டெத்தினார்க் கெளிய பெருமாளே.
Advertisement