பகுதி - 550
கடவுளே, உனக்குக் காது கேட்கவில்லையா
“குமர குருபர” என்று தொடங்கும் இரண்டு திருப்புகழ்ப் பாடல்கள் உள்ளன. இரண்டும் சுவாமிமலைக்கானவை. அவற்றுள் ஒன்றை இன்று பார்க்கிறோம். இந்தப் பாடலில் ‘கடவுளே, உனக்குக் காது கேட்கவில்லையா’ என்று நாம் இறைவனைக் கேட்பது போலவே எந்தை அருணகிரியாரும் கேட்கிறார். இரண்டாம் அடியில் கேட்கப்படும் இந்தக் கேள்விக்கான விடை மூன்றாம், நான்காம் அடிகளில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது. “கடல் கதற, திசைகள் பொடிபட போருக்கு வந்த சூரனோடு போர்புரிந்தவனே” என்பது தொடங்கி ‘வேத கோஷங்கள் முழங்குகின்ற சுவாமி மலையில் வீற்றிருக்கின்ற பெருமாளே” என்று முடிக்கும்போது, ‘இத்தனை கோஷங்களும் கூச்சல்களும் திருச்செவியில் விழாமலா போயின? அடியார் அழைக்கும் குரல் என்றேனும் வீண்போகுமா’ என்ற மறைமுகமான ஆனால் உறுதியான விடையைத் தருகிறார் குருநாதர்.
அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட முழுவதும் குற்றெழுத்துகளால் ஆன பாடல். ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களின் மூன்று குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் அமைந்திருக்கின்றன.
தனன தனதன தனன தனதன
தனன தனதன தனதான
குமர குருபர முருக சரவண
குகசண் முககரி பிறகான
குழக சிவசுத சிவய நமவென
குரவ னருள்குரு மணியேயென்
றமுத இமையவர் திமிர்த மிடுகட
லதென அநுதின முனையோதும்
அமலை அடியவர் கொடிய வினைகொடு
மபய மிடுகுர லறியாயோ
திமிர எழுகட லுலக முறிபட
திசைகள் பொடிபட வருசூரர்
சிகர முடியுடல் புவியில் விழவுயிர்
திறைகொ டமர்பொரு மயில்வீரா
நமனை யுயிர்கொளு மழலி னிணைகழல்
நதிகொள் சடையினர் குருநாதா
நளின குருமலை மருவி யமர்தரு
நவிலு மறைபுகழ் பெருமாளே.
Advertisement