பகுதி - 554
இந்தப் பாடல் வயலூருக்கானது.
‘நல்ல வழிகளில் போகின்ற அறிவை எனக்கு அருள்வாய்’ என்று வேண்டுகிற இந்தப் பாடல் வயலூருக்கானது. இதில் ‘அலம் அலம்’ என்ற சொற்கள் திரும்பத் திரும்பப் பயில்கின்றன. ‘அலம்’ என்றால் ‘துன்பம்’ என்பது பொருள். இவையெல்லாம் துன்பமாக இருக்கும் காரணத்தால் ‘போதும் போதும்’ என்று சொல்வதாகப் பலர் பொருள் கண்டிருந்தாலும் ‘அலம்’ என்ற சொல்லுக்குப் ‘போதும்’ என்ற பொருள் இல்லை. இவையெல்லாம் ‘துன்பம் துன்பம்’ என்று சொல்வதாகவும் பொருள் காணலாம்.
சற்றே நீளமான இந்தச் சந்த அமைப்பில் அடிக்கு ஒற்றொழித்து 49 எழுத்துகள் உள்ளன; அனைத்துமே குற்றெழுத்துகள். ஒவ்வோரடியிலும் ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்கள் மட்டும் மூன்று குற்றெழுத்துகளைக் கொண்டவை; மற்ற எல்லாச் சீர்களுமே நான்கு குற்றெழுத்துகளைக் கொண்டவை.
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன தனதான
Advertisement
குருதி கிருமிகள் சலமல மயிர்தசை
மருவு முருவமு மலமல மழகொடு
குலவு பலபணி பரிமள மறுசுவை மடைபாயல்
குளிரி லறையக மிவைகளு மலமல
மனைவி மகவனை யநுசர்கள் முறைமுறை
குனகு கிளைஞர்க ளிவர்களு மலமல மொருநாலு
சுருதி வழிமொழி சிவகலை யலதினி
யுலக கலைகளு மலமல மிலகிய
தொலைவி லுனைநினை பவருற வலதினி யயலார்பால்
சுழல்வ தினிதென வசமுடன் வழிபடு
முறவு மலமல மருளலை கடல்கழி
துறைசெ லறிவினை யெனதுள மகிழ்வுற அருள்வாயே
விருது முரசுகள் மொகுமொகு மொகுவென
முகுற ககபதி முகில்திகழ் முகடதில்
விகட இறகுகள் பறையிட அலகைகள் நடமாட
விபுத ரரகர சிவசிவ சரணென
விரவு கதிர்முதி ரிமகரன் வலம்வர
வினைகொள் நிசிசரர் பொடிபட அடல்செயும் வடிவேலா
மருது நெறுநெறு நெறுவென முறிபட
வுருளு முரலொடு தவழரி மருகசெ
வனச மலர்சுனை புலிநுழை முழையுடை யவிராலி
மலையி லுறைகிற அறுமுக குருபர
கயலு மயிலையு மகரமு முகள்செநெல்
வயலி நகரியி லிறையவ அருள்தரு பெருமாளே.