பகுதி - 674
‘இது வேண்டும், அது வேண்டும்’ என்றெல்லாம் கோரியபடி
ஆண்டருள வேண்டும் என்று கோரும் இப்பாடல் கதிர்காமத்துக்கானது. ‘இது வேண்டும், அது வேண்டும்’ என்றெல்லாம் கோரியபடித் தொடங்கினாலும் ‘இப்படிப்பட்ட சௌகரியங்கள் எல்லாமும் கிடைக்கப்பெற்று, சம்சாரியாகித் திண்டாடும் அவதி வேண்டாம்’ என்று உணர்த்தி நடக்கிறது இப்பாடல். இதில் சரிபாதி—அதாவது பின்பாதி—இரண்டடிகள் முழுக்கவே ராமாயணம்.
அடிக்கு ஒற்றொழித்து 34 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் (கணக்கில் சேராத) இரண்டு வல்லொற்றுகளும்; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்களில் மூன்றாவது எழுத்து நெடிலாக வரும் நான்கெழுத்துகளும்; மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்களில் ஒரு நெடிலோடு தொடங்கும் மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.
தனத்தத் தனதான தானன
தனத்தத் தனதான தானன
தனத்தத் தனதான தானன தனதான
Advertisement
உடுக்கத் துகில்வேணு நீள்பசி
யவிக்கக் கனபானம் வேணுநல்
ஒளிக்குப் புனலாடை வேணுமெய் யுறுநோயை
ஒழிக்கப் பரிகாரம் வேணுமுள்
இருக்கச் சிறுநாரி வேணுமொர்
படுக்கத் தனிவீடு வேணுமிவ் வகையாவுங்
கிடைத்துக் க்ருஹவாசி யாகிய
மயக்கக் கடலாடி நீடிய
கிளைக்குப் பரிபால னாயுயி ரவமேபோம்
க்ருபைச்சித் தமுஞான போதமு
மழைத்துத் தரவேணு மூழ்பவ
கிரிக்குட் சுழல்வேனை யாளுவ தொருநாளே
குடக்குச் சிலதூதர் தேடுக
வடக்குச் சில தூதர் நாடுக
குணக்குச் சில தூதர் தேடுக வெனமேவிக்
குறிப்பிற் குறிகாணு மாருதி
யினித்தெற் கொருதூது போவது
குறிப்பிற் குறிபோன போதிலும் வரலாமோ
அடிக்குத் திரகார ராகிய
அரக்கர்க் கிளையாத தீரனு
மலைக்கப் புறமேவி மாதுறு வனமேசென்
றருட்பொற் றிருவாழி மோதிர
மளித்துற் றவர்மேல் மனோகர
மளித்துக் கதிர்காம மேவிய பெருமாளே.