பகுதி - 825
சினத்து சீறிய வழி காண..
பதச் சேதம் | சொற் பொருள் |
சினத்து சீறிய வழி காண சிரித்து பேசியும் மயல் பூண Advertisement
| சினத்துச் சீறிய: கோபித்துச் சீறியும்; வழிகாண: வசப்படும் வழிதெரிந்ததும்; |
கனத்து போர் செயும் முலை தோண கலைக்குள் பாதியும் மறைவாக
| கலைக்குள்: ஆடைக்குள்; |
மனத்துக்கு ஆறுதல் வருமாறு மலைப்ப பேணியும் மிகவாய
| மலைப்ப: மலைப்புக் கொள்ளுமாறு; |
தனத்தை சூறை கொள் மடவார் தம் சதிக்கு போம் வழி தவிர்வேனோ
| தனத்தை: பொருளை; சூறைகொள்: கொள்ளையடிக்கும்; |
தெனத்தத் தாதென எனவே பண் திருத்தத்தோடு அளி இசை பாடும்
| அளி: வண்டு; |
புனத்து காவல் கொள் குற மாதின் புணர்ச்சிக்கே ஒரு வழி தேடி
|
|
இனத்து காவலர் அறியாமல் இணக்கி தோகையை மகிழ்வோய் என்று
| இனத்துக் காவலர்: வேட்டுவ இனத்துக் காவலாளிகள்; என்று: என்றைக்கு; |
எனக்கு தாளினை அருள் வாய் சூர் இறக்க போர் செய்த பெருமாளே.
|
|
சினத்துச் சீறிய வழி காணச் சிரித்துப் பேசியும்... சினம்கொண்டு சீறியும் (வசப்படுத்தும்) வழி தென்பட்டதும் சிரித்துப் பேசியும்;
மயல் பூண கனத்துப் போர் செயும் முலை தோணக் கலைக்குள் பாதியும் மறைவாக... மையலைத் தூண்டும்படியாகப் போரிடும் மார்பகம், ஆடையால் பாதியே மறைக்கப்பட்டிருக்க (நின்று);
மனத்துக்கு ஆறுதல் வருமாறு மலைப்பப் பேணியும்... மனத்துக்கு இதம் ஏற்படுமாறு, மலைக்கச் செய்கின்ற முறையிலே உபசரித்தும்;
மிகவாய தனத்தைச் சூறை கொள் மடவார் தம் சதிக்குப் போம் வழி தவிர்வேனோ... (அதன் பிறகு) கையிலே உள்ள பெரும்பொருளைக் கொள்ளையடிப்பவர்களுமான இந்தப் பெண்களுடைய சதிவழிலே சிக்கிக் கொள்கின்ற நடத்தையை ஒழிப்பேனோ? (ஒழிக்கும்படி அருளவேண்டும்.)
தெனத்தத் தாதென எனவே பண் திருத்தத்தோடு அளி இசை பாடும்... தெனத்த தாதென என்று ஒலியெழுப்பியபடி வண்டுகள் திருத்தமாகப் பாடுகின்ற,
புனத்துக் காவல் கொள் குற மாதின் புணர்ச்சிக்கே ஒரு வழி தேடி... தினைப் புனத்துக்குக் காவலிருந்த குறப்பெண்ணாகிய வள்ளியை அடைவதற்காக ஒரு வழியைத் தேடி,
இனத்துக் காவலர் அறியாமல் இணக்கித் தோகையை மகிழ்வோய்... வேட்டுவ இனத்தின் காவலாளிகளுக்குத் தெரியாமல் (அந்த) மயில்போன்ற வள்ளியை நயந்தவனே!
என்று எனக்குத் தாளினை அருள்வாய்... உன்னுடைய திருவடிகளை எனக்கு என்று அளிக்கப் போகிறாய்?
சூர் இறக்கப் போர் செய்த பெருமாளே.... சூரன் இறக்கும்படியாகப் போரிட்ட பெருமாளே!
சுருக்க உரை
சீறிக் கோபித்தும், வசப்படும் வழி தென்பட்டதும் சிரித்துப் பேசியும், இச்சையைத் தூண்டும்விதமாக மார்பகத்தை ஆடைக்குள் பாதி மறைத்தும்; இதமான வார்த்தைகளைப் பேசியும்; மலைத்துப்போகும்படியாக உபசரித்தும் இறுதியில் கையில் உள்ள பொருள் அத்தனையையும் கொள்ளையடிப்பவர்களான இந்தப் பெண்களின் சதிவழி என்னும் சிறுநெறியிலே அடியேன் சிக்கிக் கொள்ளாதபடி அருளவேண்டும்.
தெனத்தத் தாதென்று வண்டுகள் திருத்தமாகப் பாடுகின்ற தினைப்புனத்திலே காவலிருந்தவளான வள்ளியை அடைவதற்கு ஒரு வழியைக் கண்டுபிடிப்பதற்காக வேட்டுவ இனத்துக் காவலாளிகள் அறியாமல் அவளைக் கவர்ந்துசென்று தோகைமயில் போன்ற அப்பெண்ணை நயந்தவனே! சூரன் இறக்கும்படியாகப் போரிட்ட பெருமாளே! உன் திருவடிகளை என்று எனக்கு அளிக்கப் போகிறாய்? (உடனே தந்தருள வேண்டும்.)