இந்த நாளில் அன்று(02.04.1985)சீக்கிய மதத்தில் இருந்து பூட்டா சிங் நீக்கம் - குருமார்கள் ஆணை
மத்திய விவசாய மந்திரி பூட்டா சிங்கை சீக்கிய மதத்தின் தலைமை குருமார்கள் சீக்கிய மதத்தில் இருந்து விலக்கியுள்ளார்கள்.
மத்திய விவசாய மந்திரி பூட்டா சிங்கை சீக்கிய மதத்தின் தலைமை குருமார்கள் சீக்கிய மதத்தில் இருந்து விலக்கியுள்ளார்கள். சாந்த் நாராயண் சிங் கலேரன்வாலேயும் சீக்கிய மதத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். அமிர்தசரஸ் நகர பொற்கோயிலில் உள்ள அகால்தக்த் கட்டடத்தின் சொற்பொழிவு மேடையில் இருந்து இது சம்பந்தமான கட்டளையை தலைமை குரு ஜதேதார் கிருபால் சிங் பிறப்பித்தார்.
சீக்கிய மதத்தில் இருந்து ஏற்கெனவே விலக்கப்பட்டவர் பாபா சாந்தா சிங். அவருக்கு, அகால்தக்த் கட்டடத்தை பழுது பார்க்க கார்சேவை செய்ய அகாலிதக்த் தலைமை குருமார்களின் கட்டளையை மீறி பூட்டா சிங்கும், கலேரன்வாலேயும் உதவி செய்தனர். எனவே அவர்கள் மதக் குற்றம் செய்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டார்கள்.
இந்த மதக் குற்றத்துக்கான தண்டனையை ஏற்றுக்கொள்வதற்காக பூட்டா சிங்கும், சாந்த் கலேரன்வாலேவும் அகால்தக்த் முன்பாக மார்ச் 31-ம் தேதி அன்று ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டார்கள். ஆனால், பூட்டா சிங்கும், சாந்த் கலேரன்வாலேயும் அவ்வாறு ஆஜராக மறுத்துவிட்டார்கள். அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் சீக்கிய மதத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். சீக்கிய மதத்தின் நான்கு தலைமை குருமார்கள் மூன்று நாட்களாக நீண்ட ஆலோசனைகளை நடத்திய பிறகு இந்த முடிவை எடுத்தார்கள்.
Advertisement
பூட்டா சிங்கையும், சாந்த் கலேரன்வாலேவையும் நீக்குவதற்கான கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டதற்கு முன்பாக பொற்கோயில் தலைமை குரு சாகிப் சிங் பிரார்த்தனை நடத்தினார். பூட்டா சிங்கை சீக்கிய மதத்தில் இருந்து நீக்கும் கட்டளையில் அகால்தக்த் பீடம் முன்பாக ஆஜராகி குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோர பூட்டா சிங் தவறிவிட்டார் என்றும், இதன்மூலம் அகால்தக்த் பீடத்தின் உத்தரவை அவர் மீறிவிட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.
பூட்டா சிங், அகால்தக்த் பீடத்தை அவமதித்துவிட்டார். எனவே அவர் கால்சா மரபுகளின்படி சீக்கிய மார்க்கத்தில் இருந்து விலக்கப்படுகிறார். சீக்கிய சமுதாயத்தினர் பூட்டா சிங்குடன் எந்தவிதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது. சீக்கியர்களின் எந்த அமைப்பிலும் அவர் பேச அனுமதிக்கக்கூடாது. அவருக்கு சமூகரீதியாகவும் ஒத்துழைப்பு தரக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
பூட்டா சிங், 1976-ல் இந்திரா காந்தி மந்திரி சபையில் உதவி மந்திரியாக நியமிக்கப்பட்டார். 1980-ல் அவர் ஒரு துணை மந்திரியாக நியமனம் ஆனார். ராஜீவ் காந்தி மந்திரி சபையில் அவர் காபினெட் அந்தஸ்து பெற்ற மந்திரியாக உள்ளார்.