இந்த நாளில் அன்று(06.04.1989)தக்கர் அறிக்கையை அம்பலப்படுத்தியதன் எதிரொலி - இந்தியன் எக்ஸ்பிரஸை பழிவாங்க தில்லி நடவடிக்கை
இந்திரா காந்தி கொலை பற்றிய தக்கர் கமிஷன் அறிக்கையை அம்பலப்படுத்தியதற்காக இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் மீது மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தோன்றுகிறது.
இந்திரா காந்தி கொலை பற்றிய தக்கர் கமிஷன் அறிக்கையை அம்பலப்படுத்தியதற்காக இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் மீது மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தோன்றுகிறது.
ஏற்கெனவே, பூர்த்தி அடைந்த வரி மதிப்பீடுகளை 1972-73 ஆண்டு காலத்திலிருந்து மீண்டும் மறு ஆய்வு செய்யும்படி வருமான வரித்துறைக்கு அது உத்தரவிட்டுள்ளது. இந்த மதிப்பீடுகளை மீண்டும் ஆராய்வதற்கான முடிவை சென்னை, பம்பாய் வருமான வரி அதிகாரிகள் ஒரே நேரத்தில் அறிவித்துள்ளனர்.
மத்தியிலிருந்து உத்தரவிடப்பட்டு, ஒருங்கிணைந்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதை இது காட்டுகிறது. இதற்கு முன் எப்போதும் நடந்திராத வகையில், மத்திய நேரடி வரிகள் வாரியம் இதற்கு ஆசீர்வாதம் அளித்துள்ளது.
Advertisement
இந்த ஒரே நடவடிக்கை மூலம் இந்தியன் எக்ஸ்பிரஸ் குரூப் நிறுவனங்கள் மீது மேலும் 20 வழக்குகள் சேர்ந்துள்ளன. இந்த நிறுவனம் மீது ஒட்டுமொத்தமாக 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன.
இப்போதைய நடவடிக்கையில் வருவாய்த் துறை செயலரின் கைவரிசையும் காணப்படுகிறது. அண்மையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் நடந்த சோதனையின்போது ஆட்சேபகரமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அவர் அறிவித்துள்ளார். திடீர்ச் சோதனை நடந்த நாளன்று மாலை 4.30 மணிக்கே இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுவிட்டார். ஆனால் அதற்குப் பல மணி நேரம் கழித்தே, உண்மையில் நள்ளிரவுக்குப் பின்னரே, ஆவணங்களை முதன்முறையாக அதிகாரிகள் கைப்பற்றத் தொடங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வருவாய்த் துறை செயலரின் வார்த்தைகளை முதன்முதலில் மறுத்தவர்கள், அவரது துறையைச் சேர்ந்த அதிகாரிகளே. பழிவாங்கும் நடவடிக்கைகள், குறிப்பாக தக்கர் கமிஷன் அறிக்கை அம்பலமானபின், தில்லியில் இருந்து கண்காணிக்கப்படும் வேகத்தையும் ஆர்வத்தையும் கண்டு இந்தியன் எக்ஸ்பிரஸை சிக்க வைக்கும்படி எந்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டதோ, அந்த அதிகாரிகளே ஆச்சரியம் அடைந்துள்ளனர்.