இந்த நாளில் அன்று(07.04.1990)காஷ்மீர் பயங்கரவாதிகளை ஒடுக்க வழி - பாகிஸ்தானில் பயிற்சி முகாம்களை தாக்கி அழிக்க வேண்டும் - பாரதீய ஜனதா கோரிக்கை
காஷ்மீர் பிரச்னையில் பாகிஸ்தான் தலையிட்டுவருவது, இந்தியாவுக்கு எதிரான பிரகடனம் செய்யப்படாத யுத்தமே. இதற்கு இந்தியா பதிலடி கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று பாரதீய ஜனதா கட்சி கூறியுள்ளது.
காஷ்மீர் பிரச்னையில் பாகிஸ்தான் தலையிட்டுவருவது, இந்தியாவுக்கு எதிரான பிரகடனம் செய்யப்படாத யுத்தமே. இதற்கு இந்தியா பதிலடி கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று பாரதீய ஜனதா கட்சி கூறியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் பயிற்சி முகாம்களை அழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அக்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகக் குழுக் கூட்டம் கல்கத்தாவில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான முடிவுகளை எடுக்கக்கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Advertisement
பாகிஸ்தான், மறைமுகமாக இந்தியாவுக்கு எதிரான யுத்தத்தை நடத்திவருகிறது. காஷ்மீர் பிரச்னையில் தலையிடுவதை பாகிஸ்தான் நிறுத்தாவிட்டால், இந்தியா பதிலடி கொடுப்பதைத் தவிர வேறு வழி இல்லை. பாகிஸ்தான் நடத்திவரும் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்களை அழித்தே ஆக வேண்டும். பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவும் வழிகளை மூட வேண்டும் என்றும் பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகக் குழு தனது தீர்மானத்தில் கடுமையாகக் கூறியுள்ளது.
எல்லைப் பகுதிகளை மூட வேண்டும், காஷ்மீர் அகதிகளுக்கு மறுவாழ்வு அளிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், எந்தச் சூழ்நிலையையும் சந்திக்கத் தயாராக உள்ள நிலையை அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும் அந்தத் தீர்மானம் கோருகிறது.
காஷ்மீர் பிரச்னையைப் பொருத்தமட்டில், எதிரிகளின் பிராந்தியத்துக்குள் ஊடுருவித் தாக்கும் கொள்கையைக் கடைப்பிடிப்பதில் தவறில்லை. இது ஒரு தற்காப்பு நடவடிக்கையே என்று அத்தீர்மானம் கூறுகிறது.
தேசத்தின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் பெரும் அச்சுருத்தலாக இருந்துவரும் இந்த விஷயத்தில், அரசு உரிய அளவுக்கு விழிப்புணர்வுடன் நடந்துகொள்ளவில்லை என்றும் பாரதீய ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
காஷ்மீர் பிரச்னைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டுமானால், அதற்கு முன்பு, பிரிவினைவாத சக்திகளை முற்றிலும் முறியடிக்க வேண்டும். இல்லையெனில், காஷ்மீர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சி வெற்றிபெறாது என்று அத்தீர்மானம் கூறுகிறது.