இந்த நாளில் அன்று(09.04.1992)ஆலய நிர்வாகத்தில் அரசின் குறுக்கீடு இராது - முதல்வர் ஜெயலலிதா
ஹிந்து சமய அறநிலையத் துறையில் நிர்வாக வசதிக்காக இந்த ஆண்டு மேலும் இரண்டு கோட்டங்கள் ஏற்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
ஹிந்து சமய அறநிலையத் துறையில் நிர்வாக வசதிக்காக இந்த ஆண்டு மேலும் இரண்டு கோட்டங்கள் ஏற்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
ஹிந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளிக்கையில் அவர் கூறியதாவது:
தற்போது இத்துறை, 10 மண்டலங்களுடனும் 17 கோட்டங்களுடனும் செயல்பட்டு வருகிறது. திருவண்ணாமலையைத் தலைமையிடமாகக் கொண்டு திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டத்தையும், தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு சிதம்பரனார் மாவட்டத்தையும் புதிய கோட்டங்களாக்க விரைவில் ஆணைகள் பிறப்பிக்கப்படும்.
Advertisement
ஆலயங்களின் கணக்குகளைச் சரியான முறையில் தணிக்கை செய்ய தற்போதுள்ள தலைமைத் தணிக்கை அதிகாரியின் பதவித் தரம், இணை ஆணையர் தகுதிக்கு உயர்த்தப்படும். திருத்தணி, ஸ்ரீரங்கம், திருச்செந்தூர், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் உள்ள பெரிய ஆலயங்களில் உள்ள உதவித் தணிக்கை அலுவலர் பணியிடங்கள், தணிக்கைக் கண்காணிப்பாளர் நிலைக்கு உயர்த்தப்படும்.
ஆலய நிர்வாகத்தில் அரசின் தேவையற்ற குறுக்கீடுகள் இருக்காது. அதே நேரத்தில் ஆக்கபூர்வமான விஷயங்களில் தலையிட்டு சீரிய பணிகளை ஆற்ற அரசு எப்போதும் தயங்காது.
ஆண்டு வருவாய் ரூ.1 லட்சத்துக்கு மேல் உள்ள ஆலயங்களில் அறங்காவலர் குழுக்களை மாநில அளவில் அமைக்கப்பட்டுள்ள ஆலய நிர்வாக வாரியம் அமைக்கும். மாவட்ட அளவில் ஆண்டு வருவாய் ரூ.1 லட்சத்துக்குக் கீழ் உள்ள ஆலயங்களுக்கான அறங்காவலர் குழுக்களை மாவட்ட அளவிலான ஆலய நிர்வாக வாரியக் குழுக்கள் அமைக்கும்.
ராயப்பேட்டை சித்திபுத்தி விநாயகர் ஆலயத்துக்குச் சொந்தமாக டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள இடத்தில் ரூ.1 கோடி செலவில் வணிக வளாகம் கட்டும் திட்டத்தின் கீழ், முதல் கட்டப் பணிகள் ரூ.34 லட்சத்தில் முடிக்கப்படும் நிலையில் உள்ளது. இரண்டாம் கட்டப் பணிகள் ஒரு சில மாதங்களில் தொடங்கும்.
மொத்தம் 611 ஆலயத் திருப்பணி வேலைகள் ரூ.10.35 கோடி செலவில் நடைபெற்று வருகின்றன.