இந்த நாளில் அன்று(11.04.1994)கட்சிப் பெயர், கொடி: கோர்ட் தடையை நீக்கும்படி வை.கோ. மனு
திமுக என்ற பெயரையோ கருப்பு, சிவப்பு நிற கொடியையோ பயன்படுத்தக்கூடாது என்று உயர் நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என்று கோரி வை.கோபால்சாமி மனு தாக்கல் செய்துள்ளார்.
திமுக என்ற பெயரையோ கருப்பு, சிவப்பு நிற கொடியையோ பயன்படுத்தக்கூடாது என்று உயர் நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என்று கோரி வை.கோபால்சாமி மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவுக்கு பதில் தர அவகாசம் வேண்டும் என்று க.அன்பழகன் தரப்பு வழக்கறிஞர் கேட்டார். இதையொட்டி நீதிபதி சி.வி.கோவர்தன் விசாரணையை 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
வை.கோபால்சாமி தனது மனுவில் கூறியிருப்பதாவது:
Advertisement
இம்மாதம் 16-ம் தேதி நாங்கள் நடத்தவிருக்கும் பேரணியை தடுக்கும் நோக்கத்தில் இந்த வழக்கை க.அன்பழகன் தாக்கல் செய்துள்ளார். அவர் வழக்கு தாக்கல் செய்தது பற்றி எனது வழக்கறிஞருக்கு நோட்டீஸ் எதுவும் அனுப்பவில்லை.
கடந்த டிசம்பர் 26-ம் தேதி திருச்சியில் நடந்த கட்சி பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். எல்.கணேசன் தலைவராகவும், எம்.கண்ணப்பன் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மு.கருணாநிதியும் க.அன்பழகனும் அவர்களது பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாக இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்பிறகு பல இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்தினோம். அந்தக் கூட்டங்களில் கருப்பு சிவப்பு நிற கொடிகளையும், உதயசூரியன் சின்னத்தையும் பயன்படுத்தினோம். அப்போதெல்லாம் க.அன்பழகன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
கட்சியின் புதிய பொறுப்பாளர்கள் பற்றி தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதினேன். அதை எதிர்த்து க.அன்பழகனும் தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளார். உண்மையான திமுக யார் என்பதை தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்ய வேண்டும். இந்நிலையில் சிவில் நீதிமன்றத்தில் க.அன்பழகன் வழக்க தொடர முடியாது.
உதயசூரியன் சின்னமும், கருப்பு சிவப்பு நிற கொடியும் எங்கள் கட்சிக்கு சொந்தமானதாகும். இதில் அன்பழகனுக்கு எந்த உரிமையும் கிடையாது.
வரும் 16-ம் தேதியன்று சென்னையில் ஊர்வலம் நடத்தவிருக்கிறோம். அதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டன. இந்நிலையில் திமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என்று தடைவிதித்தால் தொண்டர்களிடையே குழப்பம் ஏற்படும். ஏனவே இந்த தடயை நீக்க வேண்டும். க.அன்பழகன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு தனது மனுவில் வை.கோபால்சாமி கூறியுள்ளார்.