முகப்பு
இந்த நாளில்...

இந்த நாளில் அன்று (12-04-1995) நல்லவர் இல்லையெனில் வாக்களிக்காதீர்: தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் வேண்டுகோள்

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாருமே நல்லவர்கள் இல்லையெனில் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் வேண்டுகோள் விடுத்தார்.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:05 PM
பகிர்:

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாருமே நல்லவர்கள் இல்லையெனில் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் வேண்டுகோள் விடுத்தார்.

பெண்கள் கண்காணிப்பு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த பெண் வாக்காளர்கள் விழிப்புணர்வுப் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசினார்.

தேர்தல் ஆணையகத்தின் கட்டுப்பாடுகளால் தேர்தல் நடைமுறையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதே நிலை நீடிக்க வேண்டும் எனில் நாம் அனைவரும் மிக விழிப்புடன் இருக்க வேண்டும். இல்லையெனில் நாடு ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும்.

Advertisement

பல மாநிலங்களில் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் இப்போது வாக்காளர் விழிப்புணர்வுப் பிரசாரம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன என்று கேள்வி கேட்க வேண்டாம். ஜனநாயகம் என்பது தேர்தல், சுவரொட்டி, விளம்பரச் சீலைகளை, ஒலிபெருக்கி சப்தங்களைப் பிரதிபலிப்பதில்லை.

அரசியல் ஆதாயங்களுக்காக சாதி மற்றும் மதத்தின் பெயரில் மக்களைத் துண்டாடுகிறார்கள். சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் யாரும் தேர்தலில் போட்டியிடக்கூடாது.

தேர்தல்களில் தில்லுமுல்லு அதிகரித்து வருகிறது. வாக்காளர் பெயர் பட்டியலில் ஏழைகள், ஒடுக்கப்பட்டோரின் பெயர்கள் பெரும்பாலும் சேர்க்கப்படுவதில்லை. தவறான இடங்களில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன. வாக்காளர்கள் பயமுறுத்தப்படுகின்றனர். வாக்குச் சாவடியில் உள்ள அதிகாரிகளின் துணையோடு கள்ள வாக்குப்பதிவு அதிகரித்து வருகிறது. வாக்குப் பதிவுக்குச் செல்லும் பெண்கள் தடுக்கப்படுகின்றனர்.

தேர்தல் செலவு உச்சவரம்பு, அதிகாரிகளின் நடுநிலைமை தவறாத தேர்தல் பணிகள், தேர்தல் நெறிமுறைகள் சரியாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.

வாக்களிப்பது மிகவும் முக்கியமான உரிமை. அந்த உரிமையைக் கடைப்பிடிப்பது அனைவரின் பொறுப்பாகும். வாக்களர்களிடம் விழிப்புணர்வு இல்லையெனில் பண பலம், ஆள் பலம், அமைச்சர்கள் பலம் தலைதூக்கும்.

மகன், மகளுக்கு மணப்பொருத்தம் பார்க்கும்போது நாம் காட்டும் எச்சரிக்கையை எம்எல்ஏ, எம்பி பதவிகளுக்குப் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்திலும் காட்ட வேண்டும்.

வேட்பாளர்களும் அரசியல்வாதிகளும் தேர்தல் விதிமுறைகளை மீறாமல் செயல்படுவதைக் கண்காணிக்க வேண்டும். இவ் விஷயத்தில் பெண்கள் பிரசார இயக்கத்தின் பங்கு மிக முக்கியமானதாகும்.

தேர்தலின்போது கட்சிகள் செலவிடும் தொகை பற்றிய கணக்கை மக்களுக்குத் தெரியப்படுத்துதல், குற்றவாளிகளும் ஒப்புக்குப் போட்டியிடுபவர்களைக் கட்டுப்படுத்துதல், சரியாகப் பணியாற்றாத மக்கள் பிரதிநிதிகளைப் பதவி நீக்கம் செய்தல் போன்றவை தொடர்பான சட்டங்களை நாடாளுமன்றம்தான் இயற்ற வேண்டும்.

மாநிலங்களவை உறுப்பினராகும் ஆசை எனக்கு இருப்பதாக பல தரப்பில் கூறப்பட்டு வருகிறது. அரசியலில் நுழையும் எண்ணம் எனக்கு துளியும் இல்லை. இப்போதைய நிலையே திருப்தியளிப்பதாக உள்ளபோது நான் ஏன் அரசியல்வாதியாக வேண்டும் என்று சேஷன் கேட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments