இந்த நாளில் அன்று (21.04.1945)அதிக வேலை செய்ய பலத்தைப் பெருக்கிக்கொள்ள வந்திருக்கிறேன் - மகாபலேசுவரத்தில் மகாத்மா காந்தி பிரசங்கம்
அதிக வேலை செய்ய பலத்தைப் பெருக்கிக்கொள்ள வந்திருக்கிறேன் - மகாபலேசுவரத்தில் மகாத்மா காந்தி பிரசங்கம்
மகாத்மா காந்தி இன்று பூரண ஓய்வுடனிருந்தார். மாலையில் மொரார்ஜி மாளிகையில் அவர் பிரார்த்தனை செய்தபோது, ஜனங்கள் ஏராளமாகக் கூடினர். அநேகர் நீண்ட தூரத்தில் இருந்து வந்தவர்கள்.
பிரார்த்தனை முடிந்ததும் மகாத்மா காந்தி பேசுகையில், நாம் ஏகாந்தமாகவும் மன அமைதியுடனும் இருக்க தம்மை விடும்படி ஜனங்களைக் கேட்டுக்கொண்டார்,
உல்லாச வாசத்திற்காக நான் இங்கு வரவில்லை. நான் மேலும் அதிக வேலை செய்யும் பொருட்டு பலம் தேடிக்கொள்ளவும் எனது ஆரோக்கியத்தை அபிவிருத்தி செய்துகொள்ளவுமே இங்கு வந்திருக்கிறேன் என்று சொன்னார்.
Advertisement
தீண்டாமையை நீக்க ஜனங்கள் விரும்பினால் ஹரிஜன நிதிக்கு நன்கொடை அளிக்க வேண்டுமென்றார்.
தூர தொலைவிலிருந்து வருகிறவர்களின் நன்மைக்காக மாலையில் சீக்கிரமாகவே இனி பிரார்த்தனை நடக்குமென்று அறிவித்துவிட்டு காந்திஜி கூறியதாவது - பிரார்த்தனைக்கு வருகிறவர்கள், பிரார்த்தனையில் கலந்துகொள்ளும் விருப்பத்துடனே வர வேண்டும். என்னை வேடிக்கை பார்ப்பதற்காக வரக்கூடாது.
தற்போது செய்துள்ள ஏற்பாட்டின் மகாத்மா, மஹாபலேசுவரத்தில் சுமார் ஒன்றரை மாதம் தங்குவாரென்று எதிர்பார்க்கப்படுகிறது.