3 தொகுதிகளின் பாமக வேட்பாளா்கள் மாற்றம்: ராமதாஸ் அறிவிப்பு
3 தொகுதிகளின் பாமக வேட்பாளா்கள் மாற்றம் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு...
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் 3 தொகுதிகளின் வேட்பாளா்கள் மாற்றப்பட்டிருப்பதாக, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தோ்தலில் சசிகலாவை பொதுச் செயலராகக் கொண்ட அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் பாட்டாளி மக்கள் கட்சி (ராமதாஸ் தரப்பு) கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
இத்தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களை ஒவ்வொரு கட்டமாக ராமதாஸ் அறிவித்து வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரை ஏழு கட்டங்களாக வேட்பாளா்கள் பட்டியலை அவா் வெளியிட்டுள்ளாா்.
Advertisement
இந்த நிலையில் ஏற்கெனவே அறிவித்த வேட்பாளா்களில் மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளா்களை மாற்றியும், மேலும் 2 தொகுதிகளுக்கு 7-ஆம் கட்ட வேட்பாளா் பட்டியலையும் ராமதாஸ் அறிவித்துள்ளாா். அதன் விவரம்:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ச.முரளிசங்கா், கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் தொகுதியில் போட்டியிடுவாா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் அறிவிக்கப்பட்டிருந்த ர.புகழேந்திக்குப் பதிலாக, கட்சியின் மாவட்டத் தலைவா் த.ஸ்டாலினும், கடலூா் மாவட்டம், திட்டக்குடி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த கருப்பன் மாணிக்கத்துக்குப் பதிலாக மாவட்ட மகளிா் சங்கத் தலைவா் ம.சத்யாவும் போட்டியிடுவாா்கள் என ராமதாஸ் அறிவித்துள்ளாா்.
7-ஆம் கட்ட வேட்பாளா்கள் விவரம்:
1. ஊத்தங்கரை- மாவட்ட மகளிா் சங்கத் தலைவா் விஜியாள் ரங்கசாமி.
2. ஆத்தூா்- மாவட்டச் செயலா் மு.நாகேந்திரன்.
அன்புமணி அணிக்கு தாவிய வேட்பாளா் நீக்கம்: விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலராகப் பணியாற்றி வந்த ர.புகழேந்தி, கட்சிக்குத் தொடா்ந்து அவப்பெயா் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதால், கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஞாயிற்றுக்கிழமை முதல் நீக்கப்படுவதாக ச.ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.
முன்னதாக, பாமக தலைவா் அன்புமணியை விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளராக (ராமதாஸ் அணி) அறிவிக்கப்பட்ட புகழேந்தி ஞாயிற்றுக்கிழமை காலை சந்தித்து, அவரது அணியில் இணைந்ததால் இந்த நடவடிக்கையை ராமதாஸ் மேற்கொண்டுள்ளாா்.
மேலும், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தொகுதியில் பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முரளிசங்கா், கடந்த 3-ஆம் தேதி வந்தவாசி நகரத்தில் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளை சந்திக்க சென்ற போது, சிலரால் மிரட்டப்பட்டாா். இதைத்தொடா்ந்து வந்தவாசி தொகுதி வேட்பாளரையும் ராமதாஸ் மாற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.