முகப்பு
இந்த நாளில்...

இந்த நாளில் அன்று(29.04.1956)ஆங்கிலத்தை உடனடியாக விட முடியாது; கலாசாரத்துக்கு உரிய ஸ்தானம் வழங்க வேண்டும் - பிரதமர் நேரு

இந்தியாவில் கலை, இலக்கியம் மற்ற கலாசார விஷயங்கள் ஆகியவற்றுக்கும் தொழில்மயமாக்குவது போன்ற உலகாயத மாறுதல்களுக்குமிடையே சரியான தாரதம்யம் ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை பிரதம மந்திரி நேரு வற்புறுத்தினார்.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:06 PM
பகிர்:

இந்தியாவில் கலை, இலக்கியம் மற்ற கலாசார விஷயங்கள் ஆகியவற்றுக்கும் தொழில்மயமாக்குவது போன்ற உலகாயத மாறுதல்களுக்குமிடையே சரியான தாரதம்யம் ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை பிரதம மந்திரி நேரு வற்புறுத்தினார்.

ரேடியோ இலக்கிய அரங்கை அவர் தொடங்கிவைத்துப் பேசியதாவது:

இலக்கியத்திலும் கலைகளிலும் நாம் சிருஷ்டி மனப்பான்மையை ஏற்படுத்த வேண்டும். உலகாயத மாறுதல்கள் தொழில்மயமாக்குதல் போன்ற விஷயங்களிலேயே நம் கவனம் செல்லும்போது, ஒரு சரியான நிதானம் ஏற்படுத்த இது அவசியம். வாழ்க்கையில் நாம் போற்றும் மற்ற மதிப்புகளுக்குக் குறுக்கே இவை வரக்கூடாது என்பது என் கருத்து. அந்த மதிப்புகளை, கவிகளும் எழுத்தாளர்களும் ஓரளவுக்குப் பயன்படுத்துவர் என்று நம்புகிறேன்.

Advertisement

இந்திய மொழிகள் நெருங்கி வந்து ஒன்றை ஒன்று புரிந்துகொள்ள வேண்டும். துரதிருஷ்டவசமாக, கடந்த காலத்தில் ஒரு மொழி வளர அது மற்றொரு பாஷையை ஒழிக்க வேண்டும் என்ற மனப்பான்மை வளர்ந்துவிட்டது. இது அடிப்படையில் மிகவும் தவறான கருத்து.

நம் நாட்டிலேயே ஒரு பகுதியினர் மற்றொரு பகுதியினருடன் பேச ஓர் அந்நிய மொழியை உபயோகிப்பது தவறு என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், இந்த சிக்கலான பிரச்னைக்கு உடனடியான பரிகாரம் இல்லை என்பதை நீங்கள் உணர வேண்டும். என் பிரசங்கத்தை தென் இந்தியரும் புரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக நான் ஆங்கிலத்திலேயே பேச வேண்டும் என்றும் டாக்டர் கேஸ்கர் கூறினார். இதைத் தவிர்க்க முடியாது. தற்சமயம் ஆங்கிலம்தான் இந்தியரை உலகத்தின் மற்ற பகுதிகளுடன் இணைக்கிறது. இந்திய மொழி நாளாவட்டத்தில் அபிவிருத்தி அடையுமென்று நம்புகிறேன்.

இந்திய மொழிகளை அதிகம் உபயோகிக்க முடியாமல் ஆங்கிலம் குறுக்கே நிற்பதாக கூறப்படும் வாதத்தை நான் ஏற்கமாட்டேன். சந்தர்ப்பத்தின் நிர்ப்பந்தத்தினால்தான் ஆங்கிலம் அதிகமாக உபயோகிக்கப்படுகிறது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆங்கிலத்தைக் கண்டு சிலர் ஏன் அஞ்சுகின்றனர் என்று புரியவில்லை. ஆங்கிலத்தைப் புறக்கணிப்பது அந்த மொழியில் உள்ள அறிவுச் செல்வத்தையெல்லாம் புறக்கணிப்பதாகும். வெளி உலகத்துடன் நாம் தொடர்பு வைத்துக்கொள்ள விரும்பினால் அதற்கு ஆங்கிலம் தெரிந்திருப்பது அவசியம்.

உலகம் வெகு வேகமாக மாறி வருகிறது. விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் துரிதமாக முன்னேறுகின்றன. இந்த மாறுதல்களுடன் இந்தியா நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பது அவசியம். இந்தியா தன் சொந்தக் கருத்துகளைக் கொண்டு தனிப்பட்ட முறையில் முன்னேறினால், இதன் முன்னேற்ற முறைகளையும் மொழியையும் மற்ற நாடுகள் ஏற்குமென்பதில் சந்தேகமில்லை என்றார் நேரு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments