முகப்பு
இந்த நாளில்...

இந்த நாளில் அன்று(30.04.1957)சென்னை அசெம்பிளி சபாநாயகராக ஸ்ரீ கிருஷ்ணா ராவ் தேர்வு; பக்தவத்ஸலம் நாயுடு உதவி சபாநாயகர்

சென்னை அசெம்பிளியின் புது சபாநாயகராக காங்கிரஸ் அபேட்சகரான டாக்டர் யூ.கிருஷ்ணா ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். உதவி சபாநாயகர் பதவிக்கு ஸ்ரீ பி.பக்தவத்ஸலு நாயுடு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படார்.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:06 PM
பகிர்:

சென்னை அசெம்பிளியின் புது சபாநாயகராக காங்கிரஸ் அபேட்சகரான டாக்டர் யூ.கிருஷ்ணா ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். உதவி சபாநாயகர் பதவிக்கு ஸ்ரீ பி.பக்தவத்ஸலு நாயுடு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படார்.

டாக்டர் கிருஷ்ணா ராவுக்கு 148 வோட்டுகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் சீர்திருத்தக் கட்சி அபேட்சகரான ஸ்ரீ ஜகன்னாதனுக்கு 44 வோட்டுகளும் கிடைத்தன. ஆகவே, 104 வோட்டு மெஜாரிட்டியில் டாக்டர் கிருஷ்ணா ராவ் வெற்றி பெற்றார். ஒரு வோட்டு செல்லுபடியாகவில்லை.

சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிருஷ்ணா ராவ், தன்னைத் தேர்ந்தெடுத்த சபையினருக்கு நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டார். அவர் தமிழில் பேசியபோது, சபையில் கரகோஷம் எழுந்தது.

Advertisement

முதல்வர் காமராஜ் பேசியதாவது

உங்கள் கடமையை நீங்கள் செய்யும்போது, உங்களுக்கு எங்கள் எல்லோரும் ஆதரவும் கிடைப்பது நிச்சயம். உங்களுக்கு நல்ல அனுபவமும் ஆற்றலும் இருக்கிறது. அதை இப்போது நீங்கள் நன்கு பயன்படுத்தி நல்ல முறையில் சபையை நடத்துவீர்கள் என்பது நிச்சயம். சபையின் கவுரவம், கண்ணியத்தைப் போற்றிப் பாதுகாப்பீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை என்றார் காமராஜ்.

திமுக தலைவர் அண்ணாத்துரை பேசியதாவது

டாக்டர் கிருஷ்ணா ராவின் அறிவு, ஆற்றல், நமக்குத் தெரியும். அரசியல் துறையில் நல்ல அனுபவம் உண்டு. அவர் மருத்துவர். இளைத்தவருக்கு பலம் ஏற்படச் செய்பவர். மருத்துவத்தில் டாக்டராக அவர் அப்படி நடப்பதுபோல் அரசியலில் அனுபவம் அதிகமின்றி இளைத்திருப்பவர்கள் நிலையிலும் நடக்க வேண்டும் என்று  கேட்டுக்கொள்கிறேன். அதன்படி, இன்னும் குழந்தைப் பருவத்தில் இருக்கும் எங்களுக்கு அனுபவம் இல்லை. அனுபவம் இன்றி குழந்தை பருவத்தில் குறும்பாக நடப்பதுபோல் நடந்தால், அன்புள்ள தாய் நிலையில் அதிகம் அடிக்காமல் எங்களை சீராட்டி நடத்திக்கொண்டு போக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எதிர்க்கட்சிக்கும் சர்க்கார் கட்சிக்கும் உள்ள உறவை மாப்பிள்ளை, மாப்பிள்ளைத் தோழன் உறவு போல் கருதி நடத்த வேண்டும். நாங்கள் முகம் கோரும்போது நியாயமான தீர்ப்பை அளிக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments