முகப்பு
இந்த நாளில்...

இந்த நாளில் அன்று (03.07.1974) கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டுவர ஆர்.வெங்கடராமன் புது யோசனை

நமது பொருளாதாரத்துக்கு சவாலாக இருப்பவற்றுள் முக்கியமானது கறுப்புப் பணம். இந்தக் கறுப்புப் பணம் வைத்துள்ளவர்கள் தாங்களாகவே அதை பகிரங்கமாக்குவதற்கு ஊக்கப்படுத்தும் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று மத்திய திட்டக் கமிஷன் உறுப்பினர் ஆர்.வெங்கட்ராமன் தெரிவித்தார்.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:06 PM
பகிர்:

நமது பொருளாதாரத்துக்கு சவாலாக இருப்பவற்றுள் முக்கியமானது கறுப்புப் பணம். இந்தக் கறுப்புப் பணம் வைத்துள்ளவர்கள் தாங்களாகவே அதை பகிரங்கமாக்குவதற்கு ஊக்கப்படுத்தும் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று மத்திய திட்டக் கமிஷன் உறுப்பினர் ஆர்.வெங்கட்ராமன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது -

பணவீக்கமும் பொருள் பற்றாக்குறையுமே இன்றைய பெரிய பிரச்னைகளாக உள்ளன. இந்த நிலைமை நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளில் நமது பணவீக்கப் பிரச்னை கட்டுக்கடங்காமல் பெருகிவிடும்.

Advertisement

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஜெர்மனியில் இத்தகைய நிலையே ஏற்பட்டது. கைப்பிடி அளவு பண்டத்தை வாங்கக்கூட மூட்டை மூட்டையாகப் பணம் கொடுக்கவேண்டி இருந்தது. இந்த நிலை நம் நாட்டில் ஏற்பட்டுவிடக்கூடாது.

பணவீக்கதைத் தடுத்து, பொருளாதாரத்தை சீர்திருத்த அவசரமாக மூன்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

1. அந்நியச் செலாவணி சம்பந்தப்பட்டவை தவிர, இதர பொருள்கள் மீதான எல்லா கட்டுப்பாடு களையும் நீக்கிவிட வேண்டும்.

2. கணக்கில் வராத கறுப்புப் பணத்தையெல்லாம் பொதுப் புழக்கத்துக்கு கொண்டு வருவதற்கு தக்க சலுகை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

3. மத்திய, மாநில அரசுகளின் பயனற்ற செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.

நமது பொருளாதாரத்துக்கு சவாலாக இருக்கும் கறுப்புப் பணத்தை வைத்துள்ளவர்கள் தாங்களாகவே அதைப் பகிரங்கப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். உதாரணமாக, அரசாங்கம் பெருமளவில் பிரிமீயம் பத்திரங்களை வெளியிடலாம். இவற்றை வாங்குபவர்களின் பணம் எப்படி வந்தது என்பது பற்றியெல்லாம் விசாரிக்கக்கூடாது. இதன் மூலம் ஏராள கறுப்புப் பணம் வெளியே வரக்கூடும்.

இப்போது எல்லாவற்றிலும் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த நிலை மாற வேண்டுமானால், இங்கு யாரும் எந்தப் பொருளையும் உற்பத்தி செய்வதற்கு எவ்விதத் தடையும் விதிக்கக்கூடாது. அந்நியச் செலாவணி சம்பந்தப்பட்டவற்றுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் இருக்கலாம்.

நம் நாட்டில் எதைத் தயாரித்தாலும் அவற்றை வாங்குவதற்கு மக்கள் கியூ வரிசையில் நிற்கிறார்கள். பொருள்களின் பற்றாக்குறையை இது காட்டுகிறது. இதனால் பண்டங்கள் தரமற்றவையாக இருந்தாலும் அவை விற்பனையாகிவிடுகின்றன. இதனால், தயாரிப்பாளர்களின் திறமை பற்றிய பிரச்னையே எழாமல் போய்விடுகிறது.

பொருள்களின் தயாரிப்புச் செலவைக் குறைத்து, உற்பத்தியை அதிகரித்து, சீரான விநியோக முறையை ஏற்படுத்தினால் எல்லாம் சரியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments