இந்த நாளில் அன்று(24.07.1996)தலைவர் யார்? தொண்டர் யார்? - பி.டி. பழனிவேல் ராஜன் விளக்கம்
தலைவர் யார்? தொண்டர் யார் என்பது பற்றி சட்டப் பேரவைத் தலைவர் பி.டி. பழனிவேல் ராஜன் வேடிக்கையாகத் தெரிவித்தார்.
தலைவர் யார்? தொண்டர் யார் என்பது பற்றி சட்டப் பேரவைத் தலைவர் பி.டி. பழனிவேல் ராஜன் வேடிக்கையாகத் தெரிவித்தார்.
ஒரு சமயம் தலைவர் கருணாநிதியிடம் இருந்து போன் வந்தது. அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தேன். இன்னும் தூக்கமா என்று கேட்டார். கால்பந்துப் போட்டியை விடிய விடிய பார்த்த அசதியில் தூங்கிக்கொண்டிருந்தேன் என்றேன் பதிலுக்கு.
நானும்தான் பார்த்தேன் என்றார் தலைவர். 5 மணி வரை கால்பந்துப் போட்டியைப் பார்த்து விட்டும்கூட 7 மணிக்கே எழுந்து விட்டார். அவர் தலைவர். பத்து மணி வரை தூங்கிக்கொண்டிருந்த நான் தொண்டன் என்று சிரித்துக்கொண்டே சொன்னார் பி.டி.ஆர்.
Advertisement
கருணாநிதியின் மதிநுட்பத்துக்கும் நகைச்சுவைத் தன்மைக்கும் எடுத்துக்காட்டாக மற்றொரு சம்பவத்தையும் சொன்னார்.
ராஜ்குமார் மன்றாடியார், கருணாநிதியைப் பார்க்கச் சென்றிருந்தார். சீட்டு விளையாடத் தெரியுமா என்று கேட்டார் கருணாநிதி. சீட்டு ஜோலியெல்லாம் ஆகாது என்றார் ராஜ்குமார். எம்எல்ஏ சீட்டு ஆகுமா? ஆகாதா? எம்பி சீட் ஆகுமா? ஆகாதா? என்று கிண்டலாகக் கேட்டுச் சிரித்தார் கலைஞர் என்றார் அவர்.
பதவிக்காகத்தான் மரியாதை கிடைக்கிறதே தவி, தனிமனிதருக்காக என நினைத்துக்கொள்ளக்கூடாது. எனக்கு மரியாதை செலுத்துகிறார்கள் என்றால் எனது பேரவைத் தலைவர் பதவிக்குச் செலுத்தப்படும் மரியாதைதான். பதவி போய்விட்டால் முன்னாள் மாண்புமிகு ஆகிவிடுவோம்.
அரசியல் பொறுப்புக்கு வருவதற்கு தகுதி, திறமை, அனுபவம், கல்வித் தகுதி எதுவும் தேவைப்படாது. எம்எல்ஏ பதவியோ, அமைச்சர் பதவியோ கிடைப்பது என்பது லாட்டரி சீட்டு அடித்தது போலத்தான். சிலருக்குக் கிடைக்கிறது, பலர் இழக்கிறார்கள் என்றார் பி.டி.பழனிவேல் ராஜன்.