முகப்பு
இந்த நாளில்...

இந்த நாளில் அன்று(21.03.1973)'பாரத்' விருதை எம்.ஜி.ஆர். திருப்பி அனுப்பினார்

சென்ற ஆண்டு சிறந்த நடிகருக்காக மத்திய அரசாங்கம் அளித்த 'பாரத்' விருதை எம்.ஜி.ராமச்சந்திரன் திருப்பி அனுப்பிவிட்டார். இது சம்பந்தமாக, மத்திய அரசு செய்தி, ஒலிபரப்புத் துறை துணை அமைச்சர் ஐ.கே.குஜ்ராலுக்கு அவர் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:05 PM
பகிர்:

சென்ற ஆண்டு சிறந்த நடிகருக்காக மத்திய அரசாங்கம் அளித்த 'பாரத்' விருதை எம்.ஜி.ராமச்சந்திரன் திருப்பி அனுப்பிவிட்டார். இது சம்பந்தமாக, மத்திய அரசு செய்தி, ஒலிபரப்புத் துறை துணை அமைச்சர் ஐ.கே.குஜ்ராலுக்கு அவர் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் ஆளும் கட்சியான திமுகவுக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தின்போது, பாரத் விருதை வேறொரு நடிகருக்கு வழங்க தேர்வுக் குழு முடிவு செய்திருந்ததாகவும், முதலமைச்சர் கருணாநிதி, ஏ.எல்.சீனிவாசனை அழைத்து எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு இந்த விருது கிடைக்கும்படிச் செய்ய வேண்டும் என்று கூறியதாகவும், அதன் பேரில் சாதகமான கருத்தைக் கூறுவதற்காக தம் பக்கம் சீனிவாசன் மாற்றியதாகவும், தேர்வுக் குழுத் தலைவர் வி.கே.நாராயணன் மேனன் இதற்கு எளிதில் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், எம்.ஜி.ஆருக்கு இந்த விருது முதலில் கிடைக்க வேண்டும் என்பதற்கு முதலமைச்சர் பல வழிகளைக் கையாண்டதாகவும், மாநிலக் கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன் கூறியிருந்ததாக தம்முடைய கடிதத்தில் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டுள்ளார்.

இது பற்றி விமரிசித்து குமுதம் வாரப் பத்திரிகையில் வெளியான ஒரு வாசகரின் கடிதத்தைப் பற்றியும் தம்முடைய கடிதத்தில் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டுள்ளார். தேர்வுக் குழுவின் செயல் பற்றி  விமரிசனம் குறித்து முதலமைச்சரோ அல்லது தேர்வுக் குழுவில் உள்ளவர்களோ மறுப்பு எதுவும் விடவில்லை என்று எம்.ஜி.ஆர். குறிப்பிட்டுள்ளார். தேர்வுக் குழுவின் மவுனம் தமக்கும் வியப்பையும் வேதனையையும் அளிப்பதாகக் கூறியிருக்கிறார். முறைகேடான நடைமுறைகள் நடந்திருப்பதாகவும் உள்நோக்கம் கற்பித்தும் தேர்வுக் குழு மீதும் தேர்வுக் குழுவின் தலைவர் மீதும் கூறப்பட்டுள்ள புகார் பற்றி அதிர்ச்சி அடைவதாகச் சொன்னார்.

Advertisement

விருது பெற தமக்கு தகுதி உண்டு என்று தாம் கருதியபோதிலும், நடுநிலை தவறாத தீர்ப்பு காரணமாக இந்த விருது கிடைத்திருந்தால் மட்டுமே தம்மால் பெருமிதம் கொள்ள முடியும் என்று கூறியிருக்கிறார். முறையற்ற வழிகளால் தமக்கு இந்தக் கௌரவம் கிடைத்தது என்பதைத் தம்மால் நினைத்துப் பார்க்க முடியவில்லை என்றும் இந்தச் சம்பவங்கள் பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்றும் எம்.ஜி.ஆர். கூறியுள்ளார்.

தகுதியை தீர்மானிக்க கையாளப்பட்ட வழிமுறைகளை மட்டுமே கருத்தில் கொண்டு பார்க்கும்போது இனியும் பாரத் விருதை தம் வசம் வைத்திருப்பதானது நியாயமல்ல என்று கருதுவதாக எம்.ஜி.ஆர். கூறியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments