ஒருமுறை சுவாமிஜி பலராம் போசின் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது அவரைக் காண விஜய்கிருஷ்ண கோசுவாமி வந்திருந்தார். சுவாமிஜி அவரை வரவேற்பதற்காக அங்கே வந்தார். விஜயர் ஸ்ரீராமகிருஷ்ணரின் நெருங்கிய சீடர். அதுமட்டுமின்றி, சுவாமிஜியின் பிரம்ம சமாஜ நாட்களில் அவருக்கு ஆச்சாரியராகத் திகழ்ந்தவர். அந்த மரியாதை நிமித்தமாக சுவாமிஜி அவரது பாதங்களைத் தொட்டு வணங்கச் சென்றார். தம் முன் ஒரு மாணவனாக வளைய வந்த நரேன் இன்று உலக குருவாகத் திரும்பி வந்திருப்பது கண்டு, அந்த மரியாதையில் அவரது பாதங்களைப் பணியச் சென்றார்
விஜயர். ஆனால் இருவரும் ஒருவர் பாதங்களை மற்றவர் தொட அனுமதிக்கவில்லை. மீண்டும் ஒருமுறை இருவரும் முயற்சித்தனர். ஆனால் நடக்கவில்லை. கடைசியில் சுவாமிஜி சிரித்தபடியே விஜயரின் கையைப் பிடித்துக் கொண்டு, கீழே விரிக்கப்பட்ட விரிப்பில் அமர்ந்து, அவரைத் தம் பக்கத்தில் அமர்த்திக் கொண்டார். விஜயரின் உணர்ச்சிகள் பெருக்கெடுத்து, அவர் ஆழ்ந்த பரவசத்தில் இருந்தார். எவ்வளவோ முயற்சி செய்தும் அவரால் பேச முடியவில்லை. ஸ்ரீகுருதேவர் அருள்கூர்ந்து என்னை ஆசீர்வதித்துவிட்டார்'
என்று துண்டுதுண்டாகச் சில வார்த்தைகள் மட்டுமே வெளிவந்தன. சுவாமிஜியின் சான்னித்தியம் அவரிடம் அவ்வளவு தெய்வீக அலைகளை எழுப்பியிருந்தது. அவர் அசைவின்றி அமர்ந்திருந்தார். அவரது கண்களில் நீர் பொங்கி கன்னங்கள் வழியாக வழிந்தோடியது. அவர்களை அந்த நிலையில் கண்ட பக்தர்கள் இருவரையும் சுற்றி சங்கீர்த்தனம் செய்தபடியே ஆடினர், அது ஒரு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
இந்த நாட்களில் சுவாமிஜியின் ஆஸ்த்மா தீவிரமாகியது. உடம்மைத் தேற்றிக் கொள்வதற்காக அவர் தேவ்கருக்குச் செல்வதென்று முடிவாயிற்று. பிரம்மச்சாரி ஹரேந்திரநாத் சுவாமிஜியுடன் சென்றார். உடல்நிலை காரணமாக சுவாமிஜி தேவ்கருக்கு வந்துள்ள செய்தி அங்கே பலருக்கும் தெரிய வந்தது. அங்கே மெட்ரிகுலேஷன் படித்துக் கொண்டிருந்தவர் கே.எஸ் கோஷ் அவரும் ஒரு நண்பருமாக சுவாமிஜியைத் தரிசிப்பதற்காகக் கிளம்பினர். ஆச்சரியம்! அவர்கள் அறையைவிட்டு வெளியே வந்தால் சுவாமிஜி அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். ஓடிச்சென்று அவர்கள் இருவரும் சுவாமிஜியின் பாதங்களைத் தொட்டு வணங்க முயற்சித்தனர்.
சுவாமிஜி விரைந்து பின்வாங்கினார். அவர்கள் தமது பாதங்களைத் தொட அவர் ஏனோ அனுமதிக்கவில்லை. அவர்கள் ஏதோ பேச முயற்சித்தபோது, அவர்களிடம் தம்முடன் தொடர்ந்து நடக்குமாறு கூறிவிட்டு போகத் தொடங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.