கவிதைமணி

எதிர்காலக் கனவு: கோ. மன்றவாணன்

கவிதைமணி

தொடர்வண்டி மேம்பாலப்
பாதையில்
படுத்துக் கிடக்கிறான் அவன்
 
சிகை அலங்காரம்
முக அலங்காரம்
எதையும் அறியாத
அழகின் இருட்டில்
அழுக்கு மேடிட்டுக் கிடக்கிற அவனைச்
சொந்தம் என்று
சொல்லிக்கொள்ளச் சுற்றிச்சுற்றி வருகிறது
சொறிநாய் ஒன்று
 
துருத்தி நிற்கும்
பற்கள் அறிந்ததில்லை
பற்பொடி வாசம்
 
வெள்ளாவியில் வைத்தாலும்
வெளுக்க முடியாத
அழுக்காடை
 
தட்டுக் கூடையின் சந்து வழியே
தலைநீட்டத் துடிக்கும் பாம்புபோல்
கிழிந்த உடையில் இருந்து
அங்கங்கே அருவருப்புக் காட்டும்
அங்கத் திட்டுகள்

அவ்வப்போது
உலா வரும் காவலர்களின்
பூட்ஸ் கால்களுக்கும்
பூண்போட்ட லத்திகளுக்கும்
நன்றாகவே தெரியும் அவனை
 
பாலீத்தீன் பை உடைந்து
பாய்ந்தோடி
மேற்கொண்டு போக முடியாமல்
முடங்கி
வறண்டுவிட்ட சாம்பார் ஓடை
 
காற்றை மூச்சுத் திணற வைக்கிறது
நேற்று சாப்பிட்டுப்போட்ட
சோற்றுப் பொட்டலத்தின்
நாற்றம்
 
அருகே
ஆட்டுப் புழுக்கைகள் நசுங்க
வெறுந்தரையில்
படுத்து உருள்கிறான் அவன்
 
நம்வாழ்க்கையைப் போலவே
அவன் வாழ்க்கையையும்
நம்பிக்கையுடன்
நகர்த்திக் கொண்டேதான் செல்கிறது
தொலைதூரத்தில் இருந்து
சுடர் ததும்பும்
எதிர்காலக் கனவொன்று !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT