மனம் எனும் மாயப் பேய்! - ஆர்.தியாகு
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:59 PM
தெருவில் காசுக்களை கண்டெடுத்தால்
பிச்சைக்காரர்கள் தட்டில் போடும் பழக்கம்..
நல்லாயிக்கனும் என்பார்கள்.
சிலர் கைபேசிக்களையும்
சிலர் மதிப்பெண் சான்றிதழ்களையும்
முகவரி தேடி கொடுத்துள்ளேன்
நல்ல மனிதரை
முதன்முதலில் பார்ப்பதாக சொல்வார்கள்
500 ரூபாய் ஆயிரம் ரூபாய் என
திரும்ப பெற்றவர்கள்
எனக்கு கொடுத்த பாராட்டு
அணைகள் அளவு!
Advertisement
ஆயிரம்ரூபாய் கட்டுக்களுடன்
பஸ்சில் 30 கிலோ 'பை' கிடந்தது...
பாராட்டுக்களை துரத்திவிட்டு
மனம் சொன்னது..
"நீ செய்த புண்ணியம் இது கிடைத்திருக்கிறது..
யாருக்கும் தெரியமல் வைத்துக்கொள்!"
பையோடு இறங்கி காற்றாக நடக்க
எதிரில் கேமராக்களோடு ஓடுவந்தார்கள்...
"மறைந்திருந்து டிவி நிகழ்ச்சிக்காக
மனிதர்களின் நேர்மையை படம்பிடிக்கிறோம்!" என்றார்கள்..
நிமிர்ந்து நின்ற கேமரா முன்
தலையை குனிந்து நிற்கிறது என்னுடல்..!
கடவுளின் முகமூடியோடு
உலாவுகிறது மனபேய்!