தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து ஆபத்து: மு.க. ஸ்டாலின்
திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு நாட்டிற்கு வழிகாட்டுகிறது என்றார் மு.க. ஸ்டாலின்.
திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது என முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று (ஏப். 13) தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப். 13) பிரசாரம் மேற்கொண்டார்.
பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
Advertisement
''தமிழ்நாடு முழுக்க பரவலாக்கப்பட்ட வளர்ச்சி பலரின் கண்ணை உறுத்துகிறது. கருணாநிதி கொடுத்த அறிவுரை உழைப்பு. உண்மையாக உழைத்தால் உலகம் நம்மை போற்றும். அவர் சொன்னதைப்போல தொடர்ந்து உழைத்துக்கொண்டிருக்கிறேன்.
தமிழ்நாடு என்ற சொல் இருக்கக் கூடாது என்பது ஆர்.என். ரவியின் குரல் அல்ல; ஆர்எஸ்எஸ்ஸின் குரல். நான் உயிரோடு இருக்கும் வரை, திமுக இருக்கும் வரை தமிழ்நாட்டை தொட்டுப்பார்க்கும் தைரியம் உண்டா?
திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது. தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும். என்டிஏ என்ற ஆபத்தை தடுத்து நிறுத்தக்கூடிய தேர்தல்தான் இது.
தமிழ்நாடு என்றுமே தில்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் தான். பல வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் இருந்து வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொண்டு வருகின்றனர். தங்கள் மாநிலத்தில் இதுபோன்ற வாய்ப்புகள் இல்லை என்று அவர்கள் கூறும் அளவுக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சியும் வாய்ப்பும் உள்ளது.
ஆனால், வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என பிரதமர் மோடி தொடர்ந்து பொய் கூறி வருகிறார். 5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு எப்படிப்பட்ட தலைகுனிவை சந்தித்தது என எண்ணிப்பாருங்கள்.
அதிமுக ஆட்சி தமிழ்நாட்டின் இருண்டகாலம். தவறுகளுக்காக தமிழ்நாட்டை பாஜகவிடம் பழனிசாமி விட்டுக்கொடுத்துவிட்டார். தவறுகளில் இருந்து தப்பிக்க மாநிலத்தின் நலனை அடகுவைத்துவிட்டார். அத்தகைய பழனிசாமிக்கு 11வது தோல்வியை கொடுக்க வேண்டும்.
அதிமுக ஆட்சியில் வளர்ச்சி நின்றுபோனது. இன்று 11.17% தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளது.
எத்தனை முறை அடித்துக்கேட்டாலும் சாதனைகளைச் சொல்லி அவர்களால் வாக்கு கேட்க முடியாது. பாஜகவின் கிளைக் கழகம்தான் அதிமுக. வெல்வோம் ஒன்றாக. தமிழ்நாடு வெல்லட்டும்'' என மு.க. ஸ்டாலின் பேசினார்.