முகப்பு
கவிதைமணி

நெல்லுக்கிறைத்த நீர்: பூ. சுப்ரமணியன்

Updated On : 5 செப்டம்பர், 2016 at 6:03 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:42 PM

உழவன் 
காலைக்கதிரவன்  
ஒளிக்கதிர்கள் கண்டு 
நிலமகளை புன்னகையுடன்
மலைக்காமல் பண்படுத்தி...
காளைகளுடன் சேர்ந்து
அகல உழாமல்
ஆழ உழுது  – தன் 
நெற்றி வியர்வை 
நிலத்தில் சிந்திட...
நாற்று நட்டு, களையெடுத்து 
நாட்டுப்புறத்து பாடலை 
களைப்பு நீங்க
பாடிக்கொண்டே.
உழவன் கிணற்று நீரை
விழலுக்கு இறைக்காமல்
விளை நிலத்திற்கு
காளைகள் துணையுடன் 
கமலை கொண்டு 
நெல்லுக்கு இறைக்கும் நீர் 
நாற்றுகள் நெற்கதிராகி
பசுமை வயல் காணும்போது 
பரவசத்துடன் உழவன் !
பசுமை வயல் கண்டு 
உழவன் மட்டுமா
பரவசம் கொண்டான்..?
சிறகடித்து பறக்கும்
சிட்டுக் குருவிகள் 
நிற்கும் கொக்குகள்
ஆடும் மயில்கள்
பாடும் குயில்கள்
பறக்கும் நாரைகள்
படபடத்து வட்டமிடும்
வண்ணத்துப்பூச்சிகள்
உல்லாசப் பறவைகள்
பரவசம் கொண்டன !
நெல்லுக்கு உழவன் 
கிணற்று நீரை மட்டுமா
இறைத்தான் 
தன் வியர்வையும்
கலந்து இறைத்தான் !
உழவன் ஏர் ஓட்டம்
நின்றுபோனால்
உலகின் உயிரோட்டம்
நின்று போகும் !
நாம்
பசுமை வயல் வெளிகளில்
பவனி வரும் 
காற்றை சுவாசிப்போம் !

நெல்லுக்கு நீர் இறைத்து 
பசுமை காண வைத்த
உழவனையும் நேசிப்போம் !                             

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.