நெல்லுக் கிறைத்த நீர்: மூ.மோகன்.
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:42 PM
கல்வி அறிவில்லா அந்தக்காலம்-
'கணக்காய்' வாழ்ந்த கற்காலம்!
நல்லதைத் தவிர தீயதை என்றும்
நினைத்துப் பாரா பொற்காலம்!
அம்புலி காட்டி செல்ல மழலைக்கு
அமுது ஊட்டிய காலம் போய்,
'சந்திராயன்' விட்டு நிலவினிலே
சாதித்துக் காட்டிய நிகழ்காலம்!
அறிவியல் முன்னேறிய இந்நாளில்
அத்தனையும் பெறலாம் விரல் நுனியில்!
நொடியில் உலகின் எல்லைக்கே
நேரடி விஜயம் 'வலைத்தள'த்தில்!
அகிலத்தை வழிநடத்தும் 'வலைத்தளங்கள்'
அவலத்தை வெளிச்சமிடும் 'வாட்ஸ்-அப்'கள்
அனைத்துமே சமயத்தில் தடம் மாறுது;
அற்ப சந்தோசத்தில் மனம் தடுமாறுது!
அறிவால் பெற்றது அத்தனையும் இன்று
அழிவுக்கு அடித்தளம் இடலாகுமோ?
சரியான பாதையில் பயணித்திடாமல்
சறுக்கினால் உலகம் சிரித்திடாதோ?
நெல்லுக் கிறைத்த நீர் துளிகூட
நெருஞ்சிலுக்கு பாய விடலாமோ?
கல்வியால் பெற்ற முன்னேற்றத்தை
களங்கப் படுத்துதல் முறையாகுமோ?