முகப்பு
கவிதைமணி

மிச்சத்தை மீட்போம்: நெருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன்

Updated On : 17 ஜூன், 2018 at 3:09 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:28 PM

விண்ணகத்தின் முதன்மையாக விளங்கு  கின்ற 
விரிகதிரோன் பகலவனாய் வைய மெங்கும் 
மண்ணுலகின் முதன்மையாக திகழு கின்ற 
மாத்தமிழ்த்தாய்  இனமான நாமு(ம்) அன்று 
பெண்ணழகாய் உலகெங்கும் ஆண்டு  வந்தோம்;
புகழுச்சித் தனில்சிறந்து ஓங்கி நின்றோம்; 
வண்டமிழத் தமிழர்நாம் எஞ்சி யுள்ள 
மானத்தை மிச்சமின்றி மீட்போம் வாரீர்! 

அச்சத்தை ஏற்றதாலே  தமிழர் நாமும் 
அடிமாடாய் ஆனதாலே உலக மெங்கும் 
பிச்சைகளாய்த் திரிவதுவோ?  களமுங் கண்ட 
பைந்தமிழர் தோள்வலிமை என்னா யிற்று ?
இச்சைக்கு அடிபணிந்து இழந்து வாடும் 
இழிநிலையும் எவ்வாறு வந்த தென்று 
இச்சமயம் எண்ணியேநாம் மிச்ச முள்ள 
எம்மினத்தை  மீட்டெடுக்க இணைவோம் வாரீர்! 

தந்நலத்தில் தரந்தாழ்ந்து தொலைத்து விட்டத்
தமிழ்மரபு வீரதீரம் தமிழ்ப்பண் பாடு 
செந்தமிழர் திருவிழாக்கள் அடையா ளங்கள் 
சீரார்ந்த தமிழ்க்கல்வி பொதுமை நோக்கு 
எந்நாளும் போற்றிவந்த வள்ளல் பண்பு 
ஏற்றமிகு சீர்கலைகள் இலக்கி யங்கள் 
முந்தியுள்ள அத்துணையும் இழந்து விட்டோம்; 
மிச்சத்தை இனியேனும் மீட்போம் வாரீர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.