இரண்டாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 7
ஆலிலையில் பள்ளிகொள்கிறவன்
பள்ளி ஆல்இலை, ஏழ்உலகும் கொள்ளும்
வள்ளல், வல்வயிற்றுப் பெருமான்,
உள்உள் ஆர்அறிவார் அவன்தன்
கள்ள, மாய மனக்கருத்தே?
ஆலிலையில் பள்ளிகொள்கிறவன், ஏழுலகங்களையும் தன்னுடைய வலிமையான வயிற்றில் வைத்துக் காக்கும் பெருமான், வள்ளல்,
அத்தகைய எம்பெருமானின் மனக்கருத்து உள்ளே உள்ளே செல்லக்கூடியது, ஒருவருக்கும் புலப்படாத, மாயத்தன்மை கொண்ட அவனுடைய மனக்கருத்தை எவர்தான் அறிவார்? (எவருமில்லை.)