பாடல் 3
உணர்வில் உம்பர் ஒருவனை
அவனது அருளால் உறற்பொருட்டு என்
உணர்வின் உள்ளே இருத்தினேன்,
அதுவும் அவனது இன் அருளே,
உணர்வும் உயிரும் உடம்பும் மற்று
உலப்பு இலனவும் பழுதேயாம்,
உணர்வைப் பெற ஊர்ந்து இறவு ஏறி
யானும் தானாய் ஒழிந்தானே.
ஞானத்திலே சிறந்தவர்களின் தலைவனை, அவனுடைய அருளாலே பெறவேண்டும் என்று விரும்பினேன், அதற்காக என் உணர்விலே அவனை இருத்தினேன், அதுவும் அவனுடைய இனிய அருளாலேயே நிகழ்ந்தது. ஞானம், உயிர், உடல் போன்றவையும், மற்ற பல தத்துவங்களும் உறுதிப்பொருட்கள் அல்ல என்பதை நான் அறிந்தேன்; இந்த முடிவான உணர்வை நான் பெறும்படி அவன் செய்தான்; நானும் இறைவனின் ஒரு பகுதியே என்று ஆக்கி எனக்குள் அவன் ஒன்றானான்.
பாடல் 4
யானும் தானாய் ஒழிந்தானை
யாதும் யவர்க்கும் முன்னோனை
தானும் சிவனும் பிரமனும்
ஆகிப் பணைத்த தனி முதலைத்
தேனும் பாலும் கன்னலும்
அமுதும் ஆகித் தித்தித்து என்
ஊனில் உயிரில் உணர்வினில்
நின்ற ஒன்றை உணர்ந்தேனே.
நானும் தானாகும்படி செய்தவனை, எதற்கும், எவருக்கும் முன்னோனாகத் திகழ்பவனை, தானாகவும் சிவனாகவும் பிரமனாகவும் ஆகித் திகழ்ந்த தனி முதல்வனை, தேனாக, பாலாக, கரும்பாக, அமுதாகத் தித்தித்து என்னுடைய உடலில், உயிரில், உணர்வில் நின்ற எம்பெருமானை நான் உணர்ந்தேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.