எட்டாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 9, 10
ஆயர்களுக்கு அதிபதி
பாடல் - 9
தாயப்பதிகள் தலைசிறந்து எங்கு எங்கும்
மாயத்தினால் மன்னி வீற்று இருந்தான் உறை
தேசத்து அமரர் திருக்கடித்தானத்துள்
ஆயர்க்கு அதிபதி அற்புதன் தானே.
ஒளி நிறைந்த வானுலக அமரர்களெல்லாம் விரும்பி வணங்குகிற திருக்கடித்தானத்திலே எழுந்தருளியிருப்பவன், ஆயர்களுக்கு அதிபதி, அற்புதன், எம்பெருமான், தனக்கு உரிமையான பல தலைசிறந்த புனிதத்தலங்களிலெல்லாம் விருப்பத்துடன் எழுந்தருளி வீற்றிருப்பவனும் அவனே.
Advertisement
பாடல் - 10
அற்புதன், நாராயணன், அரி, வாமனன்
நிற்பது, மேவி இருப்பது என் நெஞ்சு அகம்,
நல் புகழ் வேதியர் நான்மறை நின்று அதிர்
கற்பகச் சோலைத் திருக்கடித்தானமே.
அற்புதன், நாராயணன், அரி, வாமனன், எம்பெருமான் பொருந்தியிருப்பது என் நெஞ்சினுள்ளே. அதற்காக, நல்ல புகழ் வாய்ந்த வேதியர்கள் நான்கு வேதங்களையும் நிலைபெற்று முழங்குகிற, கற்பகச்சோலைகள் சூழ்ந்த திருக்கடித்தானத்திலே அப்பெருமான் நிற்கிறார்.