பாபா சாகேப் அம்பேத்கரை அறிதல் - க.ஜெயபாலன்; பக். 256; ரூ.320; பாபா சாகேப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்கம், சென்னை -21; ✆ 98847 44460.
இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பி பாபா சாகேப் அம்பேத்கரைப் பற்றி இன்றைய தலைமுறை தெளிவாக அறிந்துகொள்ளும் நோக்கத்துடன் எழுதப்பட்ட பல்வேறு கட்டுரைகள், உரைகளின் தொகுப்பு.
அம்பேத்கர்: கருத்துகளும் வாழ்வும் பணிகளும், அம்பேத்கர் பற்றி சமகாலச் சான்றோர், அம்பேத்கருக்குப் பிந்தைய கால அறிஞர்களின் குறிப்புகள் என மூன்று பகுதிகளாக 77 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு மாணவனைப் போல் பயில வேண்டும்; கற்கும் ஆர்வம் வளர்ந்துகொண்டே இருக்க வேண்டும் என்றுரைத்தார் அம்பேத்கர். அந்த வகையில், அம்பேத்கரின் வாழ்க்கை, அவர் முன்னெடுத்த போராட்டங்களைப் பற்றி அனைவரும் கற்றுத் தெரிந்துகொள்ள வேண்டிய ஆர்வத்தை இந்நூல் ஏற்படுத்துகிறது.
நமது நாடு எந்தத் திசையில் பயணிக்க வேண்டும் என்பதற்கு சமுதாயம், அரசியல், சமயம் என்ற அம்பேத்கரின் மும்முனைப் போராட்டம் வழிகாட்டுகிறது. அவரது வழிமுறைகளைப் பின்பற்றி இந்திய அரசு செய்ய வேண்டிய சட்டபூர்வ நடவடிக்கைகள், ஜனநாயகபூர்வமாக சமுதாயத்தில் செய்ய வேண்டியவை குறித்து நூலாசிரியர் தெரிவித்துள்ள யோசனைகள் ஆக்கபூர்வமானவை.
அம்பேத்கரைப் பற்றி அண்ணல் காந்தியடிகள், பெரியார், ம.சிங்காரவேலர் உள்பட அறிஞர் பெருமக்கள் பலர் தெரிவித்துள்ள கருத்துகள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன.
அம்பேத்கரின் கருத்துகள் போர்க்களத்தில் அநீதியை அழித்து நீதியை நிலைநாட்டும் ஒரு போர்வீரனின் வாளைப் போன்றவை என்கிறார் நூலாசிரியர். இந்த நூலைப் படித்து முடிக்கும்போது நாமும் ஒரு போர்வீரன் ஆவோம் என்றால் அது மிகையன்று.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.