முகப்பு
தினம் ஒரு தேவாரம்

3. நாமார்க்கும் குடியல்லோம் - பாடல் 3

புரோதயம் என்ற சொல் பூர்வோதயம் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு சூரியன் தோன்றுவதற்கு முன்னமே என்று பொருள்.

Updated On : 2 அக்டோபர், 2015 at 4:07 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:29 PM

     வாராண்ட கொங்கையர் சேர் மனையில் சேரோம் மாதேவா மாதேவா என்று வாழ்த்தி
     நீராண்ட புரோதயம் ஆடப் பெற்றோம் நீறு அணியும் கோலமே நிகழப் பெற்றோம்
     காராண்ட மழை போலக் கண்ணீர் சோரக் கல்மனமே நல்மனமாய்க் கரையப் பெற்றோம்
     பாராண்டு பகடேறி வருவார் சொல்லும் பணி கேட்கக் கடவோமே பற்று அற்றோமே

</p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">பகடு = யானை</p><p align="JUSTIFY">கடவுதல் = கடமையாகக் கருதுதல்</p><p align="JUSTIFY">புரோதயம் என்ற சொல் பூர்வோதயம் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு சூரியன் தோன்றுவதற்கு முன்னமே என்று பொருள். சூரியன் எழுவதற்கு முன்னர் குளித்து இறை வழிபாடு செய்யும் முறை. சமண சமயம் சார்ந்திருந்த போது, விடியற்காலையில் குளிப்பதும், குளித்த பின்னர் சைவக் கோலம் பூண்டு இறைவனை வழிபடுவதும் தான் செய்யாத செயல்கள் என்பதால் அவற்றினைச் செய்யத் தொடங்கி விட்டேன் என்று தன்னுள் ஏற்பட்ட மாற்றத்தை இங்கே குறிப்பிடுகின்றார். கார் என்றால் மேகம். மேகம் பொழியும் மழை போல், தனது கண்களிலிருந்து நீர் பொழிவதாக தனது நிலையினை கூறிக் கொள்கின்றார். கண்ணீர் மழை போல் பொழிவதும் மனம் கரைவதும் இறைவன் மீது நாம் வைக்கும் அன்பின் இலக்கணம். அப்பர் பிரானின் கோலத்தை பல இடங்களில் பெரியபுராணத்தில் சேக்கிழார் குறிப்பிடுகின்றார். அந்த பாடல்களில் ஒரு பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலில் கண்ணீர் பொழிய அப்பர் பிரான் இருந்த நிலை குறிப்பிடப்பட்டுள்ளது. வார்தல் என்றால் இடையறாது பெருகுதல் என்று பொருள்.</p><p align="JUSTIFY">மார்பாரப் பொழி கண்ணீர் மழைவாரும் திருவடிவும் மதுர வாக்கில்<br />சேர்வாரும் திருவாயில் தீந்தமிழின் மாலைகளும் செம்பொன் தாளே<br />சார்வான திருமனமும் உழவாரத் தனிப்படையும் தாமும் ஆகிப்<br />பார் வாழத் திருவீதிப் பணி செய்து பணிந்தேந்திப் பரவிச் செல்வார்</p><p align="JUSTIFY">மணிவாசகரும் தனது திருவாசகத்தில் (திருச்சதகம் முதல் பாடல்) தான் எவ்வாறு சிவபெருமானை வணங்குவேன் என்று கூறும் பாடல் இங்கே நினைவுகூரத்தக்கது.</p><p align="JUSTIFY">மெய் தான் அரும்பி விதிர்விதிர்த்து உன் விரையார் கழற்கு என்<br />கை தான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்<br />பொய் தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சயசய போற்றி என்னும்<br />கை தான் நெகிழ விடேன் விடையாய் என்னைக் கண்டுகொள்ளே</p><p align="JUSTIFY">தான் துறவு பூண்ட நிலையினை முந்தைய பாடலில் எடுத்துரைத்த அப்பர் பிரான், இங்கே இல்வாழ்க்கையில் ஈடுபடமாட்டேன் என்று கூறி அதனை மீண்டும் வலியுறுத்துகின்றார். சமண சமயத்தைச் சார்ந்து இருந்தபோது சிவபெருமானை நினையாது கல்மனமாக இருந்த தனது மனம் நல்மனமாக மாறியது என்று நயமாக கூறுகின்றார்.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">கச்சணிந்த மார்பினராய்த் திகழும் மாதர்களுடன் சேர்ந்து வாழும் இல்லற வாழ்க்கையை நாம் மேற்கொள்ள மாட்டோம். மாதேவா மாதேவா என்று சிவபெருமானின் திருநாமங்களைக் கூறி அவனை வாழ்த்தியவாறு, விடியற்காலையில், சூரியன் உதிக்கும் முன்னரே நீராடுவோம்; உடலெங்கும் திருநீறு அணிந்த கோலத்தோடு திகழ்வோம்; எமது கல்மனமும் உருகி நல்ல மனமாக மாறப்பெற்றது. எனது கண்களிலிருந்து கண்ணீர் மழை போல் பொழிகின்றது. உலக வாழ்க்கையிலும் உலகியல் பொருள்களிலும் பற்றினைத் துறந்த நாம், உலகினை ஆண்டு யானையின் மேல் பவனி வரும் அரசர்களின் சொற்களை, அவர்களது கட்டளைகளை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் இல்லை.</p><p align="CENTER"> </p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.