3. நாமார்க்கும் குடியல்லோம் - பாடல் 6
இருநான்கான மூர்த்தி = அட்ட மூர்த்தி, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள், சூரியன், சந்திரன், ஆன்மா.
மூவுருவின் முதலுருவாய் இருநான்கான மூர்த்தியே என்று முப்பத்து மூவர்
தேவர்களும் மிக்கோரும் சிறந்து வாழ்த்தும் செம்பவளத் திருமேனிச் சிவனே என்னும்
நாவுடையார் நமையாள உடையார் அன்றே நாவலம் தீவகத்தினுக்கு நாதரான
காவலரே ஏவி விடுத்தாரேனும் கடவமலோம் கடுமையொடு களவற்றோமே
</p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">இருநான்கான மூர்த்தி = அட்ட மூர்த்தி, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள், சூரியன், சந்திரன், ஆன்மா.</p><p align="JUSTIFY">அனைத்து வகையான உயிர்களிலும் சிவபெருமான் கலந்து இருப்பதால், அனைத்து உயிர்களும் இறைவனின் இருப்பிடமாக கருதப் படுகின்றன. இவ்வாறு இங்கே கூறப்பட்டுள்ள எட்டு பொருட்களிலும், சிவபெருமான் கலந்து இருப்பதால் அவரை அட்டமூர்த்தி என்று அருளாளர்கள் அழைக்கின்றார்கள். திருமுறையின் பல பாடல்களில் சிவபெருமான் அட்டமூர்த்தியாக உள்ள நிலை குறிப்பிடப்படுகின்றது. நாவல் மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் தென்னிந்தியாவிற்கு நாவலந்தீவு என்ற பெயர் உண்டு. பல்லவ மன்னன் என்ன, பல்லவ நாட்டினை உள்ளடக்கிய நாவலந்தீவின் அரசன் எவரேனும் இருந்தால் அவரது ஆணைக்கும் கீழ்ப்படிய வேண்டிய அவசியம் எமக்கில்லை. மேலும் திருடர்களும் கொடுமையான செய்கைகளில் ஈடுபடுவோர் தாம் மன்னனுக்கு அஞ்சுவது இயற்கை. தான் அவ்வாறு இல்லாமையால் மன்னனிடம் தனக்கு ஏதும் அச்சம் இல்லை என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.</p><p align="JUSTIFY">எட்டு உருவங்களாக விளங்கும் இறைவனின் அட்டமூர்த்தி நிலை, அப்பர் பெருமானின் நின்ற திருத்தாண்டகத்தின் முதல் பாடலில் விளக்கப்படுகின்றது. இயமானன் என்பது யஜமானன் என்ற வடசொல்லின் திரிபு. ஆன்மா என்ற பொருளில் வருவது. எறியும் காற்று = வீசுகின்ற காற்று. நெருநல் என்றால் நேற்று; இங்கே கடந்த காலத்தை குறிக்கும்.</p><p align="JUSTIFY">இருநிலனாய் தீயாகி நீருமாகி இயமானனாய் எறியும் காற்றுமாகி</p><p align="JUSTIFY">அருநிலயத் திங்களாய் ஞாயிறாகி ஆகாசமாகி அட்ட மூர்த்தியாகிப்</p><p align="JUSTIFY">பெருநலமும் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறர் உருவும் தம்முருவும் தாமே ஆகி</p><p align="JUSTIFY">நெருநலையாய் இன்றாகி நாளையாகி நிமிர் புன்சடை அடிகள் நின்றவாரே</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">பிரமன், திருமால், உருத்திரன் எனப்படும் மூன்று தேவர்களுக்கும் முதலாயவனே, அட்ட மூர்த்தியே என்று தேவர்களும் அவர்களை விட உயர்ந்த முனிவர்களும் சிறப்பித்து வாழ்த்தும் செம்பவளத் திருமேனி உடைய சிவபெருமானே என்று தங்களது நாவினால் போற்றும் தொண்டர்கள் தாம் எம்மை உடையவர்கள் ஆவார்கள். அவர்களைத் தவிர யாம் வேறு எவருக்கும் அடிமை இல்லை. பல்லவ நாட்டினை உள்ளடக்கிய நாவலந் தீவினுக்கு அரசன் தனது காவலரை அனுப்பி எனைக் கொணர ஆணை விடுத்தாலும், அத்தகைய ஆணையினுக்கு நான் கட்டுப்பட்டவன் இல்லை. கொடுமையான செயல்கள் புரிதல் மற்று களவு எனப்படும் குற்றங்களை நீக்கிய யாம் எந்த மன்னருக்கும் எதற்காகவும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை.</p>